தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/23/2013

தமிழர் வாழப் புறப்பட்டேன்!



ஈழம் வேண்டி  புறப்பட்டேன்!
தமிழ் தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
இளைஞர்களின்  கைகள் கோர்த்து  புறப்பட்டேன்!
நாடு களத்தில் ஆடப் புறப்பட்டேன்!

தமிழ்  கொடியோன் ,என் தமிழனை ,

பாலகனை கொன்ற ராஜ பக்சேவை
கூண்டில் ஏற்ற  புறப்பட்டேன்!

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்!

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்!

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்!

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்!

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்!

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்!

3/21/2013

வன்முறை கொல்வோம் ,வன்முறை கொல்வோம்



முதியோர் குடியிருப்பு

மாணவி கற்பழிப்பு
 
சிறுவன் கழுத்தறுப்பு
 
வரதட்சணை பெண்-எரிப்பு

பாமரன் தீக்குளிப்பு
 
வீதியில் துகிலுரிப்பு
 
தண்டவாளம் தகர்த்தெடுப்பு
 
பாலங்கள் வெடிவைப்பு

நல்லோர் சிலையுடைப்பு
 
ஈழத்தில் படையெடுப்பு
 
பெண் சிசு கரு-அழிப்பு
 
ஆபாசப் படமெடுப்பு

ஊழலுக்கு வெண்- உடுப்பு
 
கள்ளக்காதல் அதிகரிப்பு
 
உறுப்புகள் அறுத்தெடுப்பு
 
சீ… என்னடா இந்த மனிதப்பிறப்பு

யாவரும் காதலிப்போம்…
 
யாவரையும் நேசிப்போம்…
 
வன்முறை கொல்வோம்…
 
மனிதம் வெல்வோம்…

3/02/2013

என்தாயைக் குறிக்க.

எதையெதையோ எழுதியவன்
என்னைப் படைத்த
தாய்க்கெனஒரு கவிதை 
எழுதமுனைந்தேன்.

எங்கெங்கோ படித்த
வார்த்தைக் கோர்வைகள்
அனைத்தும் என் கண் முன்னே 

உதிர்ந்திருக்கும்
ஒவ்வொரு எழுத்திலும் 
ஒவ்வொன்றும்  எழுத்தோவியங்கள்.

அனைத்தையும் சேர்த்து 
வார்த்தைகளாக்கினேன்.
எதுவும் பொருத்தமில்லாததாக 
தோன்றியது 
என் தாயைக் குறிக்க.

எனக்கென எரிதழல் சுமந்து
வண்ணநிழல் தந்தவளுக்கு
வார்த்தைச் சுழலிலும்
ஒருவாக்கியம் கிடைக்கவில்லை.

ஒருவேளை
ஆயுதஎழுத்தைப் போல
“தேவதை எழுத்து”
ஒன்று இருந்திருக்குமாயின்
பொருந்திப்போயிருக்கும்
என்தாயைக் குறிக்க.