தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/31/2010

வாழ்க்கை ஒரு வரபிரசாதம் .....


ஓ வாழ்க்கையே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற சுவாமி சுகபோதானந்தாவின் உலகப் புகழ் பெற்ற நூலில் இருந்து.


01. அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.


ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.
இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்
ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.
உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்
ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.
எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.
ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்
ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்
ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.
ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.
ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.


02. ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.


03. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.


04. கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த பொறுமைசாலியும் கூட.


05. வாழ்க்கை ஓர் ஓவியம் போன்றது. அது கணிதமல்ல, நிறையப்பேர் வாழ்க்கையை கணிதமாக்கி நாசப்படுத்தியுள்ளார்கள். நீங்களாவது அதை ஓவியமாக்கி சந்தோசமான உலகத்தை உருவாக்குங்கள். எறும்பின் ஞானத்தை பின்பற்றுங்கள்.


06. மோசமான பறவைகள்தான் தனது கூட்டிலேயே எச்சமிடும் என்பதை உணர்ந்து தனது குடும்பத்தை அழிக்காமல் குடும்பத்தோடு மகிழ்வாக வாழ்வை அனுபவிக்க வேண்டும்.


07. விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான் மிகச்சிறந்த ஆசான்.


08. உங்களை மாற்றிப் பாருங்கள் இந்த உலகம் எத்தனை சுவாரசியமாக மாறுகிறது என்பதை உணர்வீர்கள்.


09. பிரபஞ்சம் காலம் இரண்டும் முடிவே இல்லாதவை. இதில் நாம் எங்கே இருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். நீங்களே வாழ்க்கைக்கு வீணான வரையறைகளை போட்டுக்கொண்டு அதுதான் விதியென எண்ணி வாழ்வை குழப்பாதீர்கள்.


10. விட்டில் பூச்சி விளக்கொளியில் பலியாகிறது, மனிதனோ தனது கற்பனையால் பலியாகிறான்.


11. உங்கள் போராட்டம் புனிதத் தன்மையோடு அமைய வேண்டும். பலத்தோடு இருப்பதற்காக புனிதத் தன்மையை இழப்பது சிறப்பல்ல. பலத்தை புனிதமான வழியில் உபயோகப்படுத்துவதே பலத்திற்கு சிறப்பு. கோழைகளே பலத்தை தவறான வழியிலும், பழி தீர்க்கவும் பயன்படுத்துவர் என்பதை அறிக.


12. உயிரோடு இருக்கும் எலி இறந்துபோன புலியை விட பலமானது.


13. கடினமான வார்த்தைகள் வாழ்வை நாசமாக்கும் கொடிய விஷமாகும்.


14. எல்லாவற்றையும் அரவணைப்பதே அன்பு எதையும் நிராகரிப்பது அன்பல்ல.


15. நேர்மை ஒரு தெய்வீக ஆணை. அந்த நேர்மை பலன் தரும் ஆனால் சிலருக்கு அது போதியதாக தெரிவதில்லை.


16. விவேகமற்ற மனிதர்கள் தங்கள் நிழல்களுடனேயே சண்டை போடுவார்கள்.


17. வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம் தீர்மானமாகும்.


18. எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.


19. ஒன்று வழி நடத்துங்கள் முடியாவிட்டால் வழியைப் பின்பற்றுங்கள், அதுவும் இல்லாவிட்டால் வழியை விட்டு விலகுங்கள்.


20. திறக்கப்படாத புத்தகம் மரத்துண்டுக்கு சமம் !


21. உங்கள் மூளையை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்தால் எல்லா அவமதிப்புக்களையும் இலகுவாக தாண்டிவிடலாம்.


22. மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு அறிவின் அடையாளமல்ல அதுபோல மடமடவென செய்யும் செயல்கள் செயல் திறனின் அடையாளமும் அல்ல.


23. நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.


24. சின்னச் சின்னக் கணங்களின் மொத்தமான கூட்டுத் தொகையே நீண்ட வாழ்க்கை அதுபோல இழந்துவிட்ட சின்னச் சின்னக் கணங்களின் கூட்டுத் தொகையே மரணம்.


25. நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.


26. தாமதப்படுத்துவது என்பது மூளைச் சோம்பலின் இன்னொரு வடிவம்.


27. சோம்பேறி மனிதன் என்பவன் கடிப்பதற்கோ வாலாட்டுவதற்கோ வலுவற்ற செத்த நாயைப் போன்றவன்.


28. ஒரு கூர்மையான மனது எந்தக் கதவுகளையும் திறக்கும் அதேபோல ஒரு சோம்பேறி மனதிற்கு கதவுகளை மூடத்தான் தெரியும்.


29. உங்கள் சந்தோஷத்திற்கான காரணத்தை மாற்றிப் பாருங்கள் பிறகு என்ன நடக்கிறது என்பதை.


30. மற்றவர்களின் கட்டளைகளை செய்யாதீர்கள், முதலில் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள், பிறகு அந்தச் செயலை விரும்புங்கள்.

10/30/2010

தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...


       இதை ஆங்கிலத்தில் நான் படித்துள்ளேன் , அதை தமிழ் பதிவாக மொழி பெயர்த்துள்ளேன் , இது உங்களுக்கு உதவும் ...

 1. நம்பிக்கையைத் தூண்டும்  வழிகள்.

  • அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்படுத்து..
  • சிறப்பான வழிகளை தேர்வு செய்..
  • எப்படி செய்வதென எழுது..
  • வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத்தை ஒதுக்கு..
  • தினமும் எப்படி செய்வதென எழுது..
  • தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு..
  • தினமும் அதற்காக செயற்படப்போவதை கற்பனை செய், செயலாக்கு..
  • வெற்றி பெற்றவர் அணுகுமுறையை கையாள்..
  • தினமும் வெற்றி பெற்றவர்களை பார், படி..
  • மாதம் தவறாமல் வெற்றி இலக்கை நோக்கி உற்சாகப் பயிற்சியில் ஈடுபடு. .
 2. உனக்குள்ளேயே இன்னொரு மனிதனாக உருவெடுத்து தூண்டுதலை வழங்கி    வெற்றி பெறு..

3. வெற்றிக்கும் சாதனைக்கும் அடிக்கல்லாய் அமைவது தன்னம்பிக்கையே.

4. கடந்த கால வெற்றிகளையும் தோல்விகளையும் ஆராய்ந்து அதில் சிறந்ததை தெரிவு செய்..

5. உறங்கப் போகுமுன் உள்ளம் உறுதியாகும்படி மனதில் பேசிப்பழகு...

6. உறுதியுள்ள மனிதரோடு அடிக்கடி பேசிப்பழகு..

7. பகை எண்ணங்களை விட்டொழிந்து தைரியமாக செயற்படு..

8. தோல்வியடைந்தாலும் முழுமையான ஆற்றலை இணைத்து செயற்படு..

9. சிறந்த வழியை கண்டெடுத்து உடனடியாக செயற்படு..

10. எப்போதோ சுடுவதற்கு இப்போது ஏன் பயிற்சி என்று கேட்காதே, கேப்டன் சுடச் சொல்லும் போது சுட்டால் குறி தவறிவிடும் நீ பகைவனின் குண்டுக்கு பலியாவாய்.

11. ஒவ்வொரு நாளையும் நிமிடங்களையும், தன் வசமாக்கும் சாகசக்காரராக மாறி ஓர் ஒழுங்கு முறைக்கு கொண்டுவந்து செயற்படுபவனே வெற்றியாளன்.

12. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும்.

13. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும் இல்லை..

14. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும்
அஞ்சாமல் முன்னேறு...

15. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே...

16. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடைகிறார்கள்...

17. எதையும் பின் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட வேண்டுமென எண்ணிச் செயற்படு...

18. எவ்வளவுதான் சிந்தனை இருந்தாலும் அதைச் செழுமையாக்கி ஒரே சமயத்தில் வலுவான விதமாக செலுத்த அழுத்தமான நிர்வாகத்திறன் வேண்டும்.

19. எல்லாப்பக்கமும் திரும்பாமல் ஒரே குறியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தினால் மாபெரும் வெற்றி கிடைக்கும்.

20. வெவ்வேறு திட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு ஒரே இலக்கை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதில் வரும் சிக்கல்களை ஆராய வேண்டும். அதை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக தீர்க்க முயல வேண்டும்.

21. மனதை ஒரு நிலைப்படுத்த இப்போதே பழகுங்கள் வெற்றி தானாகத் தேடி வரும்.

22. ஒவ்வொரு நாளும் பல தடவை வெற்றி பெறுவேன் என்ற சிந்தனையை பல தடவைகள் சொல்ல வேண்டும்.

23. பிறர் நம்மை என்னவாக எண்ண வேண்டுமென நினைக்கிறோமோ அதை நாம் முதலில் எண்ண வேண்டும்.

24. வெற்றி என்பது தானாக வராது மற்றவருக்கு உதவுவதாலும் வரும்.

25. வெற்றி என்பது கொடுப்பது, பின் அடைவது இது விளையாட்டல்ல நிஜம்.

26. வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான்.

27. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறாயா முதலில் பாராட்டக் கற்றுக்கொள்.

28. பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான் அவனை மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றி மேடையில் அமர வைப்பர்.

29. எண்ணங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். உணர்வுகளுக்கான   நேரம் வரும், நேரம் போகும். எதிர்மறை எண்ணங்களோடு உங்களை இணைத்தால் அதற்கு அடிமையாவது நிச்சயம்.

30. உங்களைச் சுற்றிப்பாருங்கள். உலகம் முழுவதையும் புரிந்து கொள்ள வேண்டியதைப் புகட்டும் பல்கலைக்கழகம் சுற்றியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆழமான விசயம் ஒன்றைப் புரிய வைக்கிறது.

31. பறவைகள் கூடு கட்டும்போது ஒரு சொட்டு நீர் கூட உள்ளே புகாத வகையில் கூட்டைக் கட்டும். இந்தப் பொறியியல் அற்புதத்தை எங்கிருந்து அவை பெற்றன. அவை தமது தாய்ப்பறவையின் கருவில் இருந்தே கற்றுவிட்டன. பிறக்கப் போகும் குஞ்சுகள் மீதுள்ள அன்பு, குஞ்சுகளுக்கு கூடுகட்டும் கலையையே கற்றுக் கொடுக்கிறது.

32. தங்கள் மனைவியைவிட தங்கள் அபிப்பிராயத்தை பலர் அதிகமாக காதலிக்கிறார்கள். இதனாலேயே பலர் தங்கள் மனைவியை மதிக்காது அவமதிக்கிறார்கள். ஆகவே உங்கள் கருத்துக்களை கண் மூடித்தனமாக மதிக்காதீர்கள், உலகத்தில் எந்தக் கருத்தும் மாறக்கூடியதே.

33. பாரம்பரியத்தை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு, உறவுப் பிணைப்புக்களை கவனிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

34. காதலி ஏமாற்றிவிட்டாள் என்று கருத வேண்டாம், காதலி மீது நீங்கள் இதுவரை வைத்திருந்த அபிப்பிராயம்தான் உங்களை ஏமாற்றிவிட்டது என்பதே உண்மை.

35. நீங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்கான காரணம் முழுமையாக நடைபெற வேண்டுமானால் குறைந்தபட்சம் மற்றவருக்கு உதவுவதை நிறுத்தாதீர்கள். ஒருவேளை உங்களால் மற்றவருக்கு உதவ முடியாமல் போனால் அவர்களை வேதனைப்படுத்தாதாவது இருக்கப்பாருங்கள்.

36. அறிவு புத்தகங்களில் இருந்து படிக்கும் ஒன்றல்ல, ஒருவர் பழகும் முறையில் இருந்து அவரிடமுள்ள அறிவின் ஆழத்தைப் படிக்கலாம்.

37. ஒருவர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் 35 வீதமான அறிவு போதமானது. 65 வீதம் மற்றவர்களோடு எப்படி பழக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

38. நீங்கள் செய்த தவறு என்னவென்று .. என்றபடி மற்றவருடன் பேச ஆரம்பிக்க வேண்டாம். புகழ்ச்சியுடன் இடையிலேயே விமர்சனங்களை வையுங்கள்.

39. துறை முகத்தில் இருக்கும் கப்பல் பாதுகாப்பாகவே இருக்கும், அதற்காக கப்பல்கள் எல்லாம் துறைமுகத்திலேயே இருக்க வேண்டுமானால் கப்பல்களே வேண்டியதில்லையே.

40. முதன் முதலில் சிகரட்டை பிண நாற்றமெனக் கூறி ஒதுக்கிய மனிதன் பின்னர் புகைத்தலே ஆண்மைக்கு அழகு என்பது போன்ற பிரச்சாரங்கள் வந்ததும், பிணத்தையும் மறந்து, நாற்றத்தையும் மறந்து அதற்காகவே பணத்தையும் இழந்தான். இப்படித்தான் பிரச்சாரமும், மூளைச் சலைவையும் சமூகத்தை சீரழிக்கக் காரணமாகியிருக்கின்றன.

41. நீ கேட்க முடியாத ஒரு குரலை நான் கேட்கிறேன், அது சொல்கிறது நீ பின்தங்கிவிடக் கூடாது என்று, அதுபோல நீ காண முடியாத ஒன்றை நான் காண்கிறேன் அது என்னை பொருத்தமான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. காணவும் முடியாது, கேட்கவும் முடியாத உன்னை நான் எப்படி பின்பற்றுவது ? – எமர்சன்.

42. தான் செய்ய வேண்டிய வேலையுடன் பிறக்காத மனிதன் எவனும் உலகில் இல்லை. அதை அறிய முன்னரே பிள்ளைகளை பலவந்தப்படுத்தி இன்றய உலகின் மோசமான கல்விக்குள் கட்டாயப்படுத்தித் திணிக்காதீர்கள்.

43. யாNருh ஒருவர் பணம் சம்பாதித்துவிட்டார் என்பதற்காக அவருடைய தொழிலையே நீங்களும் தேர்வு செய்யாதீர்கள்.

44. வாய்ப்பை உபயோகிக்கத் தெரியாத மனிதனுக்கு அதைக் கொடுப்பதால் என்ன பயன் இருக்கப்போகிறது. வாய்ப்புள்ள நாடு வந்தும் பலர் செக்குமாடுகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு வாய்ப்பு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது வாழ்வோருக்கு வெளிநாட்டு வாழ்வு அர்த்தமற்றது.

45. வாய்ப்புக் குறைவு என்று கூறுவது பலவீனமான சஞ்சல மனம். உண்மையில் வாய்ப்புக்கள் நிறைந்துள்ளன என்பதே யதார்த்தம்.

46. ஊருக்கு உபதேசம் செய்து தம்மை உத்தமர் போல காட்டுவோர், இரகசியமாக ஒழுக்கம் குன்றி நடப்பது அம்பலமாகும் போது அவர்களே செல்லாக்காசுகளாகிறார்கள்.

47. தன்னை வளர்க்க, உருவாக்க, தயார்படுத்த பொருத்தமான காலம் இளமைப்பருவமாகும்.

48. இந்த உலகம் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாகும் அதை அறிந்து உலகை நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும்.

49. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்

50. பூரணத்துவத்தை மெதுவாகவே அடைய வேண்டும், அதற்குக் காலம் என்ற கை உதவ வேண்டும்.

10/29/2010

என்னவளின் தீபாவளி














நீ மத்தாப்பு வெடிக்கும்
அழகில் எத்தனை இதயங்கள்
சிதறிப் போகிறது தெரியுமா?


போகிற போக்கில் ஓரப்பார்வை
வீசிச் செல்லும் உன் கண்களில்
இருக்கிறது ஒளி வீசும் தீபாவளி!


உன்னை பார்த்த நாள்
முதல் உன்னையே சுற்றும்
சங்கு சக்கரமாய் ஆனேன் நான்...


தீபாவளியன்று புது தாவணியோடு
உன்னை பார்த்ததை விட சிறந்த
சிறப்பு நிகழ்ச்சியை நான் வேறு
எந்த தொலைக்காட்சியிலும் பார்க்கவில்லை.

(இன்னும் தீபாவளிக்கு 6 நாட்கள் தான் உள்ளது)

10/28/2010

அவள் கண்களில் என் முகம்...........


இன்னும் பல நூறு ஜென்மம்

நான்  மண்ணில் வாழ்ந்தாலும்....

அவள் கண்களில் என் 

முகம்  காண வேண்டும்....

வாழும் காலங்கள் நூறு ஆனாலும்

நாம் வாழ்ந்த நேரங்கள் வேண்டும்....

நிழல் தரும் மரமாக என்னை காத்த நீ (அவள் பின் தொடர்ந்தது)

உன் நிழல் கூட என்னைத்

தீண்ட முடியாமல் பிரிந்தது ஏன்

நீங்காத ஓவியமாய் நீ

ஏன் மனத்திரையில்

சிரித்துக்கொண்டு நினைவிழந்த

போதையாய் நான்-என்னை

வதைத்துக் கொண்டு

சிந்தித்துப் பார்த்தால் வாழ்ந்த நேரங்கள்

வறந்து போய் விட்டன

வாழும் காலமோ

மௌனித்துப் போய்விட்டது வரும்

காலமாவது நாம் இருவருக்கும்

வசந்த காலமாய் அமையாத?

மின்னல் போல் நீ வந்து நிட்பாயா ? ஏன்

என்  எண்ணங்களை சீலிரிக்க வைக்க மாட்டாயா?

உணர்வுகளை ஒன்றாக்கி

உயிரோடு உறவாடி திரிந்த நீ என்னை

ஊமையாக்கி அழவிட்டுவிட்டாயே?

பிரிவு...பிரிவு...பிரிவு...இச்சொல்

கேட்டால் தினமும் அழுகிறது உன் கண்கள்

மட்டுமல்ல என் மனமும் தான் ..

10/27/2010

நான் யார்?



      சென்ற நாட்களில்     அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே? - கவியரசு கண்ணதாசன்        
     அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம்! மனிதன் அறிய வேண்டிய அறிவுகளிலெல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே.


          ஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகிறது. பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகிறது. நாயை கண்டதும் முயல் ஓடுகிறது. புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது. உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வேயாகும்!


ஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு.


            தாயாலும் தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?


          வந்தோம் வாழ்ந்தோம்,மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் வரவு-செலவு பார்த்திருக்கிறார்கள். சிலர் காதலித்து வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள். சிலர் மணமுடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள். சிலர், 'பதவி பதவி' என்று அலைந்து செத்திருக்கின்றனர். சிலர், 'உதவி உதவி' என்று ஓடி ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள்.


                 இவர்களிலே, 'தான் யார்' என்பதைக் கண்டு கொண்டு உலகுக்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்? அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.


நான் யார்?


நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?


               நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே!


தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

10/26/2010

நான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )

                 நமக்குத் தெரிந்தது எல்லாம் ரோஜப்பூ,மல்லிகைப் பூ.ஏன் எனில்  ஆண்கள், பெண்களுக்கு  இதைத்தான் வாங்கித்தருகிறார்கள்.அதையே தான் பெண்களும் விரும்புகிறார்கள்.நிலைமை இவ்வாறு இருக்கும் போது நாம் எப்படிச் சங்க காலத்தில் இருந்த மலர்களைப் பற்றி அறிந்திருக்க முடியும்..சங்க காலத்தில் இருந்த மலர்களைப் பற்றி நான் அறிய விரும்பினேன்.அதன் விளைவே இப்பதிவு..இதனை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்…..

பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்று குறிஞ்சிப் பாட்டு. "ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவித்தலின் பொருட்டு இப்பாட்டு கபிலரால் பாடப்பட்டது" .குறிஞ்சி நிலம் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும்.இங்கு தலைவியும்,தோழியும் சுனையில் நீராடிவிட்டு மலர்களைக் கொய்கின்றனர்.அவ்வாறு பறிக்கப்படும் மலர்கள் குறிஞ்சி நிலத்தினைச் சார்ந்தவை மட்டுமல்ல.இங்கு கபிலர் அனைத்து நிலப்பூக்களையும் குறிப்பிடுகின்றார்.அவற்றில் குறிப்பிடத்தக்கது 99 வகையான மலர்கள் மட்டுமே.அவை கீழே தரப்பட்டுள்ளன...


கபிலர் கூறும் குறிஞ்சிப்பாட்டுச் செய்யுள்:


“ஒண்செங் காந்தள்,ஆம்பல்,அனிச்சம்,
  தண்கயக் குவளை,குறிஞ்சி,வெட்சி,
 செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை,
 உரிதுநாறு,அவிழ்தொத்து உந்தூழ்,கூவிளம்,
 எரிபுரை,எறுழம்,சுள்ளி,கூவிரம்,
 வடவனம்,வாகை,வான்பூங் குடசம்,
எருவை,செருவிளை,மணிப்பூங் கருவிளை,
பயினி,வானி,பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி,வகுளம்,பல்லிணர்க் காயா,
விரிமலர் ஆவிரை,வேரல்,சூரல்,
குரீஇப் பூளை,குறுநறுங் கண்ணி,
குருகிலை,மருதம்,விரிபூங் கோங்கம்,
போங்கம்,திலகம்,தேங்கமழ் பாதிரி,
செருந்தி,அதிரல்,பெருந்தண் சண்பகம்,
கரந்தை,குளவி,கடிகமழ் கலிமாத்
தில்லை,பாலை,கல்இவர் முல்லை,
குல்லை,பிடவம்,சிருமா ரோடம்,
வாழை,வள்ளி,நீள்நறு நெய்தல்,
தாழை,தளவம்,முள்தாள் தாமரை,
ஞாழல்,மெளவல்,நறுந்தண் கொகுடி,
சேடல்,செம்மல், சிறுசெங் குரலி,
கோடல்,கைதை,கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி,மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
 பாங்கர்,மராஅம்,பல்பூந் தணக்கம்,
ஈங்கை,இலவம்,தூங்குஇணர்க் கொன்றை,
அடும்பு,அமர் ஆத்தி,நெடுங்கொடி அவரை,
பகன்றை,பலாசம்,பல்பூம் பிண்டி,
வஞ்சி,பித்திகம்,சிந்து வாரம்,
தும்பை, துழாஅய்,சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி,நறவம்,நறும் புன்னாகம்,
பாரம்,பீரம்,பைங்குருக் கத்தி,
ஆரம்,காழ்வை,கடிஇரும் புன்னை,
நரந்தம்,நாகம்,நள்ளிருள் நாறி,
 மாஇருங் குருந்தும்,வேங்கையும் பிறவும்,
அரக்குவிரித் தன்ன பருஏர் அம் புழகுடன்,
மால்அங்கு உடைய மலிவனம் மறுகி”
இப்பாடலில் உள்ள பூக்கள்:


1. காந்தள் மலர்


2. ஆம்பல் மலர்

3. அனிச்சம் பூ


4. குவளை மலர்


5. குறிஞ்சிப் பூ

6. வெட்சிப் பூ

7. செங்கோடுவேரி மலர்


8. தேமாம் பூ

9. மணிச்சிகை(செம்மணிப்பூ)


10. உந்தூழ்(மூங்கில் பூ)


11. கூவிளம் பூ


12. எறுழம்பூ


13. சுள்ளி(மராமரப்பூ)


14. கூவிரம் பூ


15. வடவனம் பூ


16. வாகைப் பூ


17. குடசம்(வெட்பாலை)


18. எருவை(கோரைப்பூ)


19. செருவிளை(வெண்காக்கணம்)


20. கருவிளம் பூ


21. பயினிப் பூ


22. வானிப் பூ


23. குரவம் பூ


24. பசும்பிடி(பச்சிலைப்பூ)


25. வகுளம்(மகிழம்பூ)


26. காயா மலர்


27. ஆவிரைப் பூ


28. வேரல்(சிறுமூங்கில்பூ)


29. சூரல் மலர்


30. சிறுபூளைப் பூ


31. குறுநறுங்கண்ணி மலர்


32. குருகிலை(முருக்கிலை)


33. மருதம் பூ


34. கோங்கம் பூ


35. போங்கம் பூ


36. திலகம் பூ


37. பாதிரி மலர்


38. செருந்தி மலர்


39. அதிரல் பூ


40. சண்பகம் மலர்

41. கரந்தை மலர்


42. குளவி(காட்டு மல்லி)


43. மாம்பூ


44. தில்லைப்பூ


45. பாலைப்பூ


46. முல்லைப்பூ


47. கஞ்சங்குல்லை


48. பிடவம் பூ


49. செங்கருங்காலி மலர்


50. வாழைப் பூ


51. வள்ளிப் பூ


52. நெய்தல் மலர்


53. தாழைப் பூ


54. தளவம்(செம்முல்லைப் பூ)


55. தாமரை மலர்


56. ஞாழல் மலர்


57. மௌவல் பூ


58. கொகுடிப் பூ


59. சேடல்(பவளமல்லி பூ)


60. செம்மல்(சாதிப் பூ)


61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)


62. கோடல்(வெண்காந்தள் மலர்)


63. கைதை(தாழம் பூ)


64. வழைப் பூ(சுரபுன்னை)


65. காஞ்சிப் பூ


66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)


67. பாங்கர் பூ




68. மரவம் பூ


69. தணக்கம் பூ


70. ஈங்கைப் பூ


71. இலவம் பூ


72. கொன்றைப் பூ


73. அடுப்பம் பூ


74. ஆத்திப் பூ


75. அவரைப் பூ


76. பகன்றைப் பூ


77. பலாசம் பூ


78. பிண்டி(அசோகம்பூ)


79. வஞ்சிப் பூ


80. பித்திகம்(பிச்சிப் பூ)


81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)


82. தும்பைப் பூ


83. துழாய்ப் பூ


84. தோன்றிப் பூ


85. நந்திப் பூ

86. நறவம்(நறைக் கொடிப்பூ)


87. புன்னாகம் பூ


88. பாரம்(பருத்திப்பூ)


89. பீரம்(பீர்கம்பூ)


90. குருக்கத்திப் பூ


91. ஆரம்(சந்தனப்பூ)


92. காழ்வைப் பூ


93. புன்னைப் பூ


94. நரந்தம்(நாரத்தம்பூ)

95. நாகப்பூ


96. நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ)


97. குருந்தம் பூ

98. வேங்கைப் பூ

99. புழகுப் பூ

10/25/2010

நம் தமிழன் வெற்றியடையட்டும் ..........


              நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!

யார் இந்த கிருஷ்ணன்...?!!
            சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது! இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!


இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!


கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது
இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx



  • இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். 
  • உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.
  • அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள். 
  • அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
  • முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும். 
  • பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.

10/24/2010

புரட்சி எங்கே ? புரட்சியாளன் எங்கே ??

           புரட்சி என்ற சொல் இப்போதெல்லாம் நகைச்சுவை ஆகிவிட்டது.
பொருளாதார சிக்கல்கள் மேலோங்கி நிற்க புரட்சி பற்றியெல்லாம் மக்களுக்கு யோசிக்கவே நேரம் இல்லை. ஆனால் வட மாநிலங்களில் ஆந்திராவின் தொடர்ச்சியாக இப்போது ஏழு மாநிலங்களின் பெரும்பான்மை மாவட்டங்கள் நக்சல்களின் கட்டுபாட்டில் இருப்பதாக நம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்கிறார்..


           ஒருபுறம் பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆக ஏழை மென்மேலும் ஏழை ஆகிறான்.. ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்து கலைஞர் செய்த புரட்சியால் பட்டினியால் யாரும் வாடவில்லை.. ஆனால் டாஸ்மாக் நிரம்பி வழிகிறது குடிச்சு குடல் கெட்டுப்போனால் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிகிச்சை உண்டு.. புரட்சியின் நீட்சி யாரும் கேள்வியே கேட்காது மாற்றுவதுதான்..


         ஒருகாலத்தில் சோறு விற்பவன் நம் இந்திய சமூகத்தில் கேவலமானவன். இன்று தண்ணீர் விற்று பிழைக்கிறார்கள்.. நல்ல கல்வி, நல்ல மருத்துவம்,சீரான சாலைகள், முறையான தண்ணீர் வசதி எங்கேயும் இல்லை.. வல்லான் வகுத்ததே வாய்க்கால். அது தேர்தலில் காசு வாங்கிவிட்டு ஓட்டு போட எப்போது பழகிக் கொண்டோமோ அப்போதே நம் உரிமைகளை மொத்தமாக அடகு வைத்துவிடுகிறோம்..


            புரட்சிதான் மாற்றத்தின் விதை. வடிவங்கள் வேறாக இருப்பினும் புரட்சிகளே மாற்றங்களை கொண்டுவரும்.. ஈழத்தில் முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிட்டதாக சொல்லப்பட்ட ஒரு எழுச்சி இனி வேறு வடிவில் மீண்டும் எழலாம்.. அம்மக்களுக்கு சரியான தீர்வு முன்வைக்காதவரை அது நிச்சயம் மீண்டும் வெடிக்கவே செய்யும்.


           நாளையே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிகள் மாறினால் இன்றைக்கு ஈழப் பிரச்சினையில் கடிதம் எழுதும் கலைஞர் வீதியில் போராடுவார். மிகுந்த நகைப்பை அது நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும் அது நடக்கவே செய்யும்.


அன்றாட  பிரச்சினையில், எல்லா மக்களுக்கு இலவச தொலைகாட்சி கொடுங்கள், அம்மக்கள் சுயநலமாக மாறிப்போவார்கள் என ஒருவர் அறிக்கை சமர்பிக்கிறார்.. சுயநலம் இல்லாதவரைக்கும்தான் புரட்சி..


        தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்று அழைக்க ஆரம்பித்தபோதே மக்களின் ரசனை மாறிவிட்டது.. இப்போது புரட்சி பட்டம் யார் யாருக்கெல்லாமோ போய் புரட்சி எனும் சொல்லே தமிழ் கூறும் நல்லுலகிற்கு அது ஒரு அடைமொழியாக மாறிவிட்டது.


            உலகெங்கும் புரட்சிக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. தலைகீழ் மாற்றத்திற்கான ஆரம்பமே புரட்சிதான்.. இன்றைய ஆட்சியாளர்களைப்பற்றி ஒரு பெரியவரிடம் வருத்தப்பட்டேன்.. அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.. இங்கு மாற்றமே மாறாதது.. எல்லாமே மாறும் என நீண்ட விளக்கம் தந்தார்.. பதிவின் நீளம் கருதி அதனை இங்கே வெளியிட இயலவில்லை..


          ஆன்மீகத்தை எடுத்துக்கொண்டால் புத்தனும், ஏசுவும்,நபியும் செய்த புரட்சி எல்லைகளற்றது.. இன்றுவரை இவர்களின்பால் மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டு பின்பற்றுபவர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.. ஆனால் பிரச்சினையே ஒரு புரட்சியால் சாதித்த இவர்களின் கருத்துகளை விமர்சனம் செய்ய முடிவதில்லை.. இவர்களை பற்றிய முழுமையான அறிவு பெற்றோரை தவிர மற்றவர்கள் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள்.. உண்மையில் நாத்திகர்கள்தான் இவர்களை அதிகம் நேசிப்பவர்கள்..


         புரட்சி பற்றிய வரலாற்றை நான் தொடவே இல்லை.. இன்றைய தேதியில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அது தேவைப்படவில்லை...

10/23/2010

நம் "கை" தான் தன்னம்பிக்கை




எதிர்பாரத திருப்பங்களை கொண்ட வாழ்க்கையின் ஓட்டத்தில் எல்லா நேரங்களிலும் நாம் நினைப்பது நடைபெறுவதில்லை. ஒரு வித புரிதலோடு வாழ்க்கையை நகர்த்த தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் எல்லோர் கையிலும் அவசியம் இருக்கவேண்டும்.


தன்னம்பிக்கை பற்றி எழுதிக் கொடுங்கள் என்று நமது தோழர் என்னிடம்  

கூறினார் .. .மகிழ்ச்சியுடன்....உங்களுக்கு இதோ...!

மனிதனின் வாழ்க்கை பல விசித்திரங்களை கொண்டது. அவன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை பலவிதமான சூழ்நிலைகளை சந்திக்கிறான். ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போது எதிர்பாராத புதிய சூழ்நிலையை சந்திப்பது அவசியமாகிறது. உதாரணத்துக்கு இப்போது நாம் ஊருக்கு செல்கிறோம்.


அந்த பயணத்தில் பாதைமாறி செல்லும்போது நாம் எதிர்பாராத திருப்பத்தை சூழ்நிலையை அனுபவிக்கிறோம். அது நமக்கு நல்ல அனுபவமாகவோ அல்லது கெட்ட அனுபவமாக இருக்கலாம். இந்த சமயத்தில் நமது மனம் அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு பக்குவப்படுகிறது.


அது போல.. நாம் இதுவரை உபயோகப்படுத்தாத ஒரு பொருளை வாங்குகிறோம். அப்போது அதை எப்படி உபயோகிக்க வேன்டும் என்று தெரியாததால் நாம் கொஞ்சநேரம் திணறுகிறோம். நன்கு அறிந்தபின் அதை உபயோகப்படுத்துவது கைவந்த கலையாகிவிடுகிறது.


உதாரணத்துக்கு கம்பியூட்டர்.... கம்பியூட்டர் வந்தபுதிதில் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் ஒரு தயக்கம். ஆனால் இப்போது அப்படியா... சும்மா புகுந்துவிளையாடுகிறோம் என்பதுதானே உண்மை.

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது GM  சார் கதிர்வேல்  சார், ஒரு நாள் GM  பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.  அது எங்களுக்கு புரியவில்லை. அப்போது அவர் சொன்னார். "தம்பிகளா..


நாம் ஒரு எந்த ஒரு பொருளை முதலில் பயன்படுத்தும்போது அதை பற்றி தெரியாததால் முதலில் தயக்கம் இருக்கும். அது பற்றி தெரிந்தபின் அதை உபயோகப்படுத்துவது மிக எளிதாக இருக்கும். அது எந்த பொருளாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு GM " என்றார்.

அறிவியல் வளர்ச்சி எப்படி ஏற்படுகிறது. முதலில் நமக்கு அறிமுகம் விசயத்தை/பொருள் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யும்போது புதுவிதமான சிந்தனைகளும் உருவாகிறது. நமக்கு தேவைகளும் வளர்ச்சியும் தேவைபடுவதால் எண்ணற்ற புதுபுது கண்டுபிடிப்புகள்.. அதன் மூலம் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம். நாம் எதைபற்றியும் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் யாருக்கு நஷ்டம்?..முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை..

மனிதனின் மனம் ஒரு குரங்கைப்போன்றது. அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். நாம் விரும்பும் ஒவ்வொரு செயலும் நமது மனதை பொறுத்தே அமைகிறது.. அது எதுவாகவும் இருக்கலாம்.. பயணம், பேச்சு,திட்டம், பழக்கவழக்கங்கள், விருப்பம், பொறாமை, கோபம், வேலை, தொழில்.... இப்படி எண்ணற்ற செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.


மனதில், இன்று நாம் செல்லும் காரியம் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு நல்ல எண்ணத்தோடு செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். போகும்போதே எதாவது தடங்கல் ஏற்பட்டுவிட்டால் உடனே நாம், "சே.. இன்று நேரமே சரியில்லை.. நாளைக்கு போகலாம்" என்று நமது பயணத்தை ஒத்திவைக்கிறோம்.. மனதில் வீணான குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு மேலும் குழம்பிவிடுகிறோம்..


இது ஒரு புது அனுபவம். இப்போது அந்த பயணத்தை தொடருகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.. அங்கு நல்ல சூழ்நிலை போன காரியம் வெற்றி என்னும்போது அதை அனுபவிக்கிறோமே அது ஒரு புது அனுபவம்..


இந்த பயணத்தில் பாதை மாறி சென்று வேறொரு சூழ்நிலையை சந்திக்கும்போது அது ஒரு புது அனுபவம். நாம் இன்று இந்தஇந்த காரியங்களை எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்த நினைக்கும்போது சந்தர்ப்ப சூழ்நிலையால் செயல்படுத்த முடியாமல் போகும்போது வருத்தப்படுகிறோம்.


திரைப்படங்களிலும் பலவிதமான சூழ்நிலைகளை சொல்லியிருப்பார்கள். அவற்றில் நல்ல விசயங்களையும் கெட்ட விசயங்களையும் சொல்லி இப்படி இருந்தால் நல்லாருக்கலாம்.. இப்படி இருந்தால் நமக்குதான் பாதிப்பு என்று சொல்லியிருப்பார்கள். அந்த கதைகளில் நமது மனமொன்றி அதேபோல வாழ்க்கையிலும் கடைபிடிக்க எண்ணுவோம்..

தொழில் செய்யும்போதும் பல சூழ்நிலைகளை நாம் சந்திக்கிறோம். இப்படி நிறைய அனுபவங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அனுபவங்கள் நமக்கு நிறைய பாடங்களையும் சிந்தனைகளையும் கற்றுத் தருகிறது. அவற்றில் நல்லவை கெட்டவை உண்டு.


எப்போதும் நாம் கெட்ட விசயங்களை மனதில்போட்டு குழப்பிக்கொண்டு மனதை அலைபாய விடக்கூடாது. எந்தஒரு விசயத்தையும் எப்போதும் நல்லதாகவே நினைக்க வேண்டும். சில சமயங்கள் தோல்விகள் ஏற்படலாம்.. ஆனால் அதுதான் நிலையென எண்ணிக்கொள்ளுதல் கூடாது. அந்தமாதிரி எண்ணங்கள் நமது வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமைந்துவிடும்

மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்... அது உங்களுக்கு எப்போதும் நல்லவற்றை நாடிச் செல்லவைக்கும். உங்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் என்று நம்முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே, உங்கள் மனம் எப்போதும் நல்லவற்றையே நாடிச் செல்லவேண்டும். அப்போதுதான் வெற்றியாளர்களில் ஒருவராக இருப்பீர்கள்.. என்றென்றும் வெற்றிகள் தொடரட்டும்..

10/22/2010

மனித உறவுகள் என்பது


       

ஒரு மிகப்பெரிய புரிதல் வேண்டியிருக்கிறது நட்புகளையும் உறவுகளையும் கை கோர்த்து வாழ்க்கையின் வழியே செல்வதற்கு ஏனெனில் பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட ஒரு மனிதன் கூடி வாழவேண்டும் என்ற ஒரு அடைப்பிற்குள் அடைப்பட்டு வாழ்வது அத்தியாவசியமாகிறது

சமுதாயமும் வாழ்வும் செழிக்க, அரசும், இன்ன பிற தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் எத்தனை போராடினாலும் அதற்கான பலன் என்பது மில்லி மீட்டரில்தான் இருக்கிறது. ஏன் இப்படி? எத்தனையோ ஊடகங்கள் உலக பிரச்சினை முதல் உள்ளூர் குப்புசாமி பிரச்சினை வரை எல்லாவற்றையும் படம் போட்டு மக்கள் முன் காட்டுகின்றன. தங்களை நியாயத்தின் காவலர்கள் என்று காட்டிக் கொண்டும் சட்டாம் பிள்ளையாக தவறுகளை அதிரடியாக சுட்டிக்காட்டும் இவர்கள்.....சொல்யூசன் என்று சொல்லக்கூடிய தீர்வுகளை கொடுப்பதில்லை.

பிரச்சினைகளைப் பற்றி பேசுவதிலும் அது பற்றி காரசாரமாய் விவாதிப்பதிலும் தம்மை விளம்பரப்படுத்தி கொள்வதில் தான் முனைப்புகள் இருக்கிறதன்றி....மனிதர்களின் பிரச்சினைகளின் மூலத்தை அறிந்து, அதற்கு பயன் தரும் வகையில் கருத்துக்கள் எப்போதும் பகிரப்படுவதில்லை. இப்படி செய்வது இன்னும் ஆபத்தானது. அது மனித உணர்வுகளை, அக்கிரமங்களுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்யும், உணர்வு பொங்க பேசச் செய்யும். ஆனால் அறிவினை பகிராது...எதிர்காலத்தில் சந்ததியினருக்கு நன்மைகள் தராது.....


மனிதவளம் மேம்பட வேண்டும். மனிதவளம் மேம்பட, உறவுகளில் புரிதல் வேண்டும். உறவுகளில் புரிதல் இருந்தால் அன்பாய் மிளிரும் இந்த உலகம். அடிப்படையில் அன்பு இருந்தால் கருணையில் விட்டுக்கொடுப்பதும், சக மனிதரை மதித்து நடப்பதும் தானாய் நடக்கும். அப்போது சட்டாம்பிள்ளைகள் நமக்கு தேவையில்லை. ஒரு விசயத்தை கருத்தில் தெளிவாய் கொள்ள வேண்டும்....மிகைப்பட்ட பிரச்சினைகள் உருவாக்கப்படுவதில் பெரும்பங்கு தம்மை சட்டாபிள்ளையாக காட்டிக் கொள்ள முனையும் மனிதர்களாலேயே உருவாக்கப்படுகிறது....


ஏதோ ஒரு கருத்தினை தொட்டுவிட்டு செல்ல முனைந்திருக்கும் இந்த கட்டுரையை மிகைப்பட்டவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நானும்   பெருமிதம் கொள்கிறேன் .

நன்றி : கழுகு

10/21/2010

சத்ரபதி சிவாஜி


      நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார். மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது வழக்கம் என்று  சிறை அதிகாரிகளிடம் 
சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.

‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’ என்று மகன் கேட்க, ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’ என்றார் சிவாஜி.
‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா?’’ என மீண்டும் மகன் சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு!

அதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.

பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.
‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்ட போது , அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து
இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை  நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால்,  சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த   வரவேண்டும்  என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான்.

தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,

‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத்
தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.

1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது
நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற
அவரது தாரக மந்திரம்தான்.

10/20/2010

வணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...

              ரொம்ப நாளாகவே.... எனக்கு இந்த தொலை பேசிகளை குறிப்பாக கைபேசிகளை அதிலும் குறிப்பாக கார்பரேட் உலகம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதை பயன் படுத்தும் விதம் பற்றி..ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல்...அதன் விளைவுதான்.. இது.....

           கை பேசியில் ஒருவரை நாம் அழைக்கும் போது...இரண்டு அல்லது மூன்று ரிங்க் போனவுடன் உடனே நாம் நமது இணைப்பை துண்டிப்பது நல்லது ஏனென்றால் நாம் கூப்பிடுவது அவரது கைபேசியில் கண்டிப்பாய் அவருக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, எனவே அவர் நம்மை கண்டிப்பாய் திருப்பி அழைப்பார் அல்லவா? (உங்களிடம் இருந்து ஒளிந்து திரிபவர்களுக்கு இது செல்லாது). இதை விட்டு விட்டு எதிர் முனையில் இருப்பவர் என்ன அவசர வேலையில் இருந்தாலும் சரி எனது அழைப்பை எடுத்தே ஆக வேண்டும் என்று நினைப்பதும் அவர் எடுக்காததிற்கு நீங்கள் கோபம் கொள்வதும் சரிதானா?

                  அதுவும் ஒருவர் அலுவலகத்தில் இருந்தால்...அழைப்பை எடுக்க முடியாத சூழ் நிலைகள் எவ்வளவோ இருக்கின்றன.....அவர் திரும்ப அழைக்கும் வரை காத்திருங்கள். சரி இது தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு.....தொலை பேசியில் அழைக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டும்....தமது கைபேசியில் வந்து எடுக்க தவறிப்போன அழைப்புகளுக்கு திரும்ப அழைத்து விபரம் கேட்டு அறியும் போது ....எடுக்க முடியாததற்கான காரணத்தையும் நண்பருக்கு விளக்கிச் சொல்லலாம்.

              உங்களின் அவசரமான பணிக்கிடையில் யாராவது தொடர்ந்து உங்களை அடைய முயற்சி செய்கிறார் என்றால்.... வெளியில் உள்ள உங்கள் நண்பருக்கு ஏதோ அவசரம் என்று புரிந்து கொண்டு அவரை உடனே அவரை தொடர்பு கொள்ளுங்கள் உங்களின் உதவி உங்கள் நண்பருக்கோ இல்லை உறவினர்க்கோ அவசரமாக தேவை என்று உணருங்கள்.

ஆக மொத்ததில் இது பொதுவாக எல்லோரும் விளங்க வேண்டிய விசயம் ஏதாவது ஒரு அவசரமின்றி என் நண்பரை நான் தொடர்ந்து அழைக்காதீர்கள் மேலும் சாதாரணமாக அரட்டை அடிக்க செய்த அழைப்பு என்றால் ஒன்று அல்லது இரண்டு ரிங்கோடு நிறுத்திக்கொள்ளுங்களேன். அலுவலகத்தில் இருக்கும் நேரம் மட்டுமல்ல....காலை நேரம் மற்றும் குடும்பத்தினரோடு இருக்கும் நேரம் என்றால் அத்யாவசியம் மற்றும் அவசர செய்திகள் பறிமாறிக்கொள்ளும் விதமாக அழைக்கலாம்.

          காலை 6:30 மணிக்கு பணிக்கு செல்லும் நேரத்தில்.... நண்பரை அவசர கதியில் தொலை பேசியில் அழைத்து " சும்மாதான் கால் பண்ணினேன்.....
அப்புறம் வேற என்ன செய்தி" என்று கேட்பது 10 கொலைகள் செய்வதற்கு சமம். மேலும் நீங்க போன் செய்து விட்டு....... மறுமுனையில் உள்ள நண்பரை.... " அப்புறம் ... நீங்கதான் சொல்லணும் என்று சொல்வது" உங்கள் நண்பரின் தலையில் வெந்நீரை கொட்டுவதற்கு சமம்.

                உங்கள் நண்பரும் அந்த விதம் தான் என்றால்..... நீங்கள் இருவரும் சேர்ந்து...அறிவியலின் அற்புதமான கண்டுபிடிப்பை கேவலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று உணருங்கள். சில நண்பர்களுக்கு தொலைபேசியில் இன்று கூப்பிட்டால்....இரண்டு நாட்கள் கழித்து திரும்ப கூப்பிட்டு என்னடா....கால் பண்ணியிருந்தாயா... என்று கேட்பார்கள்...( நானும் இந்த ரகம்தான்.. .ரொம்ப கேவலமாக என்னையே திட்டிக் கொண்டு இப்போது தான் மாற ஆரம்பித்துள்ளேன்) இது ஒரு மிக அவசர கதியில் மாற்ற வேண்டிய ஒரு பழக்கம்.... நல்ல நேரத்தில் உங்களின் நண்பர் நலமாயிருந்தால் நல்லது...ஏதாவது ஒரு அவசர செய்தி அல்லது உங்களிடம் பேசினால் ஆறுதலாய் இருக்கும் என்று அவர் கூப்பிட்டு நீங்கள் திரும்ப அழைக்காமல் போன நேரத்தில்.. நண்பருக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால்.....(கடவுளே...கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல...)

            தொலை பேசி....அறிவியலின் தலை சிறந்த தொழில் நுட்பம்.....அதை சரியாக பயன்படுத்தி....தொழிலை மட்டுமல்ல... உறவையும் மேம்படுத்தலாம்.....உன்னத மனிதர்களாய்....வாழலாம்......!

            என் கை பேசி இடை விடாமல் விட்டு விட்டு அடிக்கிறது......
டிரிங்க்.....டிரிங்க்......ட்ரிங்க்.....ட்ரிங்க்.....ட்ரி,ங்க்....ஐயோ எந்த நண்பரோ என்ன அவசரமோ....... உங்கள் அனைவரையும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...

வணக்கம்  , ஹலோ சொல்லுங்க  நண்பரே . 
 

10/19/2010

தமிழையே விரும்புவோம் ..........


         சமீபத்தில் ஒரு தோழி என்னிடம் கேட்டார் நீங்கள் ஏன் தமிழை  பற்றி மட்டும் எழுதுகிறீர்கள்...வாழ்வில் எவ்வளவோ நல்ல விசயங்கள் நிகழ்வுகள் இருக்கின்றனவே....ஏன் ஒரு நீங்கள் மட்டும் தான் தமிழரா ?  என்றும் கேட்டார். அவருடைய கேள்வியை மறு பரிசீலனை செய்யாமல் நானும் ஒத்துக்கொண்டேன்.

       அதாவது தமிழை  பற்றிதான் எழுதுவது என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக் கொண்டு எழுத உற்காருவதில்லை....அதே நேரத்தில் பதிவு எழுதவேண்டுமே என்று கடமைக்காகவும் எழுதுவதில்லை...ஏதாவது ஒரு தமிழை பற்றிய செய்தி நாம் படிக்கும் போது , நம்மை பாதித்து பதறவைக்கும் நேரத்தில் நமது எழுத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிகால் தான் பதிவுகள்! காயங்களுக்குத்தானே...மருந்து தேவை......கை குலுக்க ஓராயிரம் கைகள் இருந்தாலும்...கவலையை துடைப்பது என்னவோ சில கைகள் தானே....அவர்கள் எல்லாம் தமிழர்கள்தானே.....?
             மேலும்..... நல்ல சுகாதாரமான இடத்தை சுற்றி கோடி பேர் இருப்பார்கள்.... சாக்கடையை சுத்தம்செய்வது எல்லாரும் செய்யும் காரியமல்ல....தமிழை  பற்றி பேசுவது அதை மிகைப்படுத்துவதற்கு அல்ல....தமிழை நேசிப்பதற்காகத்தான் .....! சந்தோசங்களை மட்டும் பேசுவதும் எழுதுவதும்....உண்மையான சந்தோசமல்ல.....அது ஒரு ஓடி ஓளியும் முயற்சி....உண்மையை படித்ததில் , தெரிந்ததை எழுதுவது என் செயல்.

        ஏதாவது ஒரு சினிமா நடிகையின் அந்தரங்கத்தைப் பற்றி எழுதினால் நிறைய பேர் வந்து படிப்பார்கள்...சானியா மிர்சாவின் திருமணத்தைப் பற்றி...அக்கு வேறு ஆணிவேர் வரை அலசி ஆராய்ந்தால் கூட நிறைய பேர் படிப்பார்கள்.....ஆனால் அது ஆரோக்கியமான விசயமா? நல்ல கருத்துக்களை வித்துக்களை விதைக்கிறோமா? சிந்தித்து பாருங்கள்...அடுத்தவன் வீட்டு அந்தரங்கத்தை பற்றி விவரிக்கவும் விவாதிக்கவும் நாம் அனைவரும் நமது மூளைகளை நாய்க்குட்டி போல பழக்கி இருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டாமா?

           கடந்த 6 ஆம் தேதி....சட்டீஸ்காரில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் 75 ரிசர்வ் போலிசார்கள் பரிதாம்பாமாக உயிரிழுந்திருக்கிறார்கள். நம்மில் எத்தனை பேர்கள் இந்த செய்தியை முன்னிலைப்படுத்தி தீவிரவாத்தின் கொடுமையை மக்களுக்கு போகஸ் செய்து காட்டி இருக்கிறோம். பொழுது போவதற்காய் ஏதாவது செய்கிறோம் என்றாலும் அதில் ஒரு ஆழ்ந்த சிந்தனையை பரவவிட வேண்டாமா? நமது எழுத்துக்களை படிக்கிறவர்களை உங்களின் எண்ணோட்டம் புரட்டிப்போட வேண்டாம? சமூக பிரஞ்ஞை உள்ள ஒரு கலம்...அதை கவனமாய் கையாளவேண்டாமா.....

         மக்கள் படிக்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக நமது எழுத்தின் ஓட்டத்தை மாற்றி.....கட்டுரைகளை கவர்ச்சிப்பொருளாய் ஆக்கலாமா? நடிகை நமீதாவின் ரகசிய காதல் காட்சிகள் என்று போட்டால் அதிக அளவில் அதை பார்க்க கூட்டம் வரும்...கூட்டம் வரும் என்பதால் நாம் பிரபல எழுத்தாளர் ஆகி விடுவோமா? நல்ல எழுத்தை இரண்டு பேர் படித்தால் போதும் அப்படி ஒரு கொள்கையோடு எழுத வந்துவிட்டால் நல்ல எழுத்துக்களை படிக்கும் வாசகர் கூட்டம் அதிகரிக்கும். அதை விட்டு விட்டு...பாம்பு வைத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான் போல கூட்டம் சேர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை....(அதனால் தான் என்னை பின் தொடர்பவர்களை வெளியிட விரும்பவில்லை )

          வலைப்பக்கங்கள் இலவசமாக கூகுள் வழங்குகிறது.....வாய்ப்பு தரப்படாத.... திறமையை வெளிக்காட்டமுடியாத....அத்தனை எழுத்தாளர்கள்...கவிஞர்கள்...சமூக பிரஞ்ஞை உள்ள சக்தி மிகுந்த அனைவரும்....ஒன்று கூடி தேரிழிப்போம்.... நல்ல ஒரு தமிழ் சமுதாயம் பிறக்க...விதையாய் இருப்போம்.....! நம்மால் முடிந்த அளவிற்கு.....வலுவான ஒரு சமுதாயத்தில்  தமிழை அங்கமாக்குவோம்!

"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! 

குறிப்பு  : தோழிக்கு நான் சமூகம் மீது அக்கறை கொண்டவன்தான் , சமூகம் இல்லாமல் என் தமிழ் இல்லை மிக விரைவில் சமூக சிந்தனைகளை எனது பார்வையில் புதிய வலைப்பூவில் காண ஆவலுடன் இருக்கவும் அன்புடன் வேண்டும் உங்கள் தோழர் ........


    

10/18/2010

எப்பவோ எழுதியது ......


  புத்தகம் 

 நான் பிரச்சனையிலிருக்கும் போது தீர்வு சொல்லி
குழப்பத்திலிருக்கும்போது தெளிவடையச்செய்து
அழும்போது ஆறுதல் அளித்து
சோர்ந்தபோது தன்னம்பிக்கை அளித்து
தவறியபோது தத்துவ ஞானம் அளித்து
என் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டியாக
இருந்த என் துணையை இழந்தேனே!
இழந்தது அழியக் கூடிய மனிதத் துணையை அல்ல!
உயிரினும் மேலான, என்றுமே
அழிவென்பதேயில்லாத அத்துணை
நண்பர்கள் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்க
மறந்த என் புத்தகங்கள்தான்!!!!


ஆணால் என் வெற்றி 

முட்டுக் கட்டைகளை மூலதனமாக்கி
ஏமாற்றங்களை ஏணியாக்கி
சோதனைகளை சாதனையாக்கிய
வெற்றி விழாவில் பாராட்டுப் பத்திரம்
அந்த முட்டுக்கட்டைக்கு.
ஒரு பெண்ணின் வெற்றிக்குப்
பின்னாலும் ஒரு ஆண்
 

சிறந்தது


நதிகளில் சிறந்தது கங்கை ,
மலைகளில் சிறந்தது இமயம் , 
மலர்களில் சிறந்தது தாமரை , 
மணிகளில் சிறந்தது மாணிக்கம் ,
தெய்வங்களில் சிறந்தவர் முருகர் ,
யாத்திரைகளில் சிறந்தது கயிலை யாத்திரை.

10/17/2010

அன்றாட .............வெற்றி..........

இதை பற்றி நான் ஆங்கிலத்தில் படித்து உள்ளேன் ,அதை தமிழ் பதிவாக 
அளித்துள்ளேன் உங்களுக்காக .........

 
               நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். ஆனால் திட்டமிட்டு சில முக்கியமான நபரைச் சந்திக்க வேண்டியச் சூழலில், அதாவது, அலுவல் காரணமாகவோ, அல்லது, தொழில் சம்பந்தமான முக்கியமான நபரையோ யாராக இருந்தாலும், அந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்ற தவிப்பு, ஏற்படுவது இயற்கையே. இதற்கு என்ன செய்ய வெண்டும்?
          நம்முடைய முதல் எண்ணப்பதிவை [ First Impression ] , சிறந்ததாக உருவாக்கிக் கொண்டால், நம்முடைய முக்கியத்துவம் கண்டிப்பாக உயரும். " முதல் கோணல், முற்றும் கோணல் " , என்பார்கள். முதல் பார்வையிலேயே ஒருவரை எளிதாக எடை போடக் கூடுமாதலால், அதனை ஆக்கப் பூர்வமானதாக்குவதில்தானே நம்முடைய வெற்றி அடங்கியிருக்கிறது?
        நாம் சந்திக்கும் நபரை முதலில்நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். அதாவது, நம்முடைய உரையாடலுக்கான நேரத்தின், பாதி நேரத்திலாவது நேரடியாக கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். மிகவும் அதிகமாக உற்று நோக்குவதையும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அது நாம் மிகுந்த சக்தியுடையவராக காட்டிக் கொள்வதான தோற்றத்தை அளிக்கும்.
            " புன்சிரிப்பு கோடி பெறும் ", நமக்கு அந்த நேரத்தில், சிரிக்கக் கூடிய மனநிலை இல்லாவிட்டாலும் கூட, சிறிதளவாக, பல்லைக் காட்டிச் சிரிப்பதால், உடன் உரையாடுபவர்களும், மறு புன்னகை வீசுவதோடு, அந்தச் சூழலின் மனநிலையின் இறுக்கம் தளர்வடையும்!
       அதிகமாக பகிர்ந்துக் கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதாவது, ஆரம்பத்திலேயே, அதிகமான ' சுய புராணம் ' பாடுவதைத் தவிர்க்க வேண்டும். அது அவசிய மற்றதும்கூட. காரணம், ஒருவரும், நம்முடைய அறுவை பற்றியெல்லாம் அறிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்!
           சிறிது 'முகஸ்துதி' , செய்வதில் தவறில்லை. ஆனால் அது அதிகப்படியான போலிப் புகழ்ச்சியாக இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வெண்டும்.
         இப்படித்தான் உரையாடலை ஆரம்பிக்க வேண்டும் என்று தயார் படுத்திக் கொண்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.காரணம், தாமே அந்தச் சூழலை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டது போலவும், தன்னலத்துடன் பழகுவது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி விடும்!
        உரையாடலின் இடையே ஓரிரு முறை அவரது பெயரை உச்சரிக்கலாம். அதற்காக, விற்பனையாளரைப் போல பல முறை உபயோகித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.!
         மறு முனையில் இருப்பவர் பேசும் போது,மேசையின் மீது சாய்ந்து கொண்டோ, கைகளை கட்டிக் கொண்டோ, எந்த உணர்ச்சியும் காட்டாமல், உட்கார்ந்திருந்தால், நமக்கு, அந்த உரையாடலில் விருப்பம் இல்லையென்றோ, கோபமாக இருப்பதான தோற்றமோ கொடுத்து விடும்.
         10 நொடியில் தம்மைப் பற்றிய எண்ணத்தை மற்றவரால் கணிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு நொடியையும் கணக்கில் கொள்ள வெண்டும்.
            ஆக, ஆரம்பத்திலேயே, தம்மைப் பற்றி உயர்ந்த கணிப்பு ஏற்படுத்த;
முதலில் எளிதாக நெருங்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். 
கொஞ்சமாக சுயபுராணம் தேவை.
         முதல் சந்திப்பில் எது போன்ற தலைப்பில் அளவளாவல் வேண்டும் என்கிற விழிப்புணர்வு, மற்றும் நாம் வாழும் உலகம், நம் வாழ்க்கை மற்றும் நம்மைப் பற்றி ஆக்கப்பூர்வ உணர்வு கொண்டிருக்க வேண்டும்.
        ஆக்கப்பூர்வமான எண்ண அலைகள் ஒன்று கூடும் போதுதான், அந்தச் சந்திப்பின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்பதே நிதர்சனம்!

            போட்டிகள் நிறைந்த இன்றைய கால கட்டத்தில், ஒவ்வொரு சிறிய விசயத்திலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்!! 

நன்றி .

10/16/2010

ஆனந்தம்


”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று பாடினார்  பாரதி. இப்படிப் பாடிய பாரதி செல்வச் செழிப்பில் வாழ்ந்தவரல்ல. வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்னைகளையும் பாராதவர்  அல்ல. சொல்லப் போனால் அவர்  வாழ்க்கையே பிரச்னைகளின் தொகுப்பு என்று சொல்லும்படி இருந்தது. ஆனாலும் பாரதி அழுது புலம்பி ஒரு வரி பாடியதில்லை. மாறாக எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம், அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது?

          வீதியில் நின்று சற்று நேரம் வருவோர் போவோரைக் கவனியுங்கள். எத்தனை முகங்களில் ஆனந்தம் தெரிகிறது? விரையும் மனிதர்கள் முகத்தில் கரைக்க முடியாத கவலைகளும், சிந்தனைகளும் அல்லவா தெரிகிறது? இதில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் ஏதும் தெரிவதில்லையே. இருப்பவன், இல்லாதவன் என்ற இரண்டு வகை மனிதர்களும் ஆனந்தத்தைத் தேடி அலைவது போலல்லவா இருக்கிறது? எங்கே அந்த ஆனந்தம் கிடைக்கும்?
        பதிலைத் தேடும் முன் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைப் பார்ப்போம். முல்லா நஸ்ருதீன் வெளிச்சமான இடத்தில் ஏதோ தேடிக் கொண்டு இருந்தார். அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டு உதவ முன் வந்தார்.
        ”ஒரு தங்க நாணயம் கை தவறி விழுந்து விட்டது” என்றார் முல்லா.
நண்பரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார். தங்க நாணயம் கிடைக்கவில்லை. நண்பர் முல்லாவைக் கேட்டார். “சரியாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இங்கே தான் நாணயத்தை நழுவ விட்டீர்களா?”
         முல்லா சற்று தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு “அங்கு தான் விழுந்தது?” என்று சொன்னார்.
            நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. “அட முட்டாளே. அங்கே தொலைத்து விட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்?” என்று முல்லாவைத் திட்டினார்.
         பதிலுக்கு முல்லாவும் நன்பரைக் கோபித்துக் கொண்டார். “நீ தான் முட்டாள். இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா? எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும்? அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன்”
         சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
         முல்லாவின் முட்டாள்தனம் நமக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் ஆனந்தத்தைத் தேடும் நம் கதையும் அப்படித்தானல்லவா இருக்கிறது. மனதில் தொலைத்த ஆனந்தத்தை அதைத் தவிர மற்ற இடங்களில் தேடி என்ன பயன்? உலகத்தையே சுற்றி வந்து தேடினாலும் அந்த ஆனந்தம் நமக்கு கிடைக்குமா?
       எது கிடைத்தால் நீ ஆனந்தமாய் இருப்பாய் என்று உங்கள் மனதைக் கேளுங்கள். இது கிடைத்தால் ஆனந்தமாய் இருப்பேன் என்று மனம் சொல்லும். அதை எப்பாடுபட்டாவது கொடுத்துப் பாருங்கள். மனம் இனியெல்லாம் சுகமே என்று ஆனந்தமாய் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். மனம் ஓரிரு நாட்கள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். மூன்றாவது நாள் மனம் தானாக ஆனந்தத்தை இழக்கும். காரணம் மனதிற்கு புதுத் தேவை ஒன்று பிறந்திருக்கும். அது மட்டும் கிடைத்து விட்டால் ஆனந்தமாய் இருக்க முடியும் என்று மனம் சொல்லும்.
         அது வேண்டும் இது வேண்டும் என்று இந்த மனக்குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான். எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலைவிலேயே நிற்பது போல ஆனந்தம் அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது.
             மில்டன் என்ற ஆங்கில மகாகவி பாடுவான். “மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது”. மனதிற்கு அந்த ரசாயன வித்தை தெரியும். ஆனந்தம் அடையவும் தெரியும். அழுது புலம்பவும் தெரியும். ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் ரசாயன வித்தை தெரியும்.
             அந்த ரசாயன வித்தை அறிந்ததால் தானே பாரதியால் வறுமையிலும், ஆங்கிலேயரின் அடக்குமுறைத் தாக்குதலிலும், சிறையிலும், பல பக்கங்களில் இருந்தும் வந்த பிரச்னைகளிலும் கூட எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட முடிந்தது.
       பின் ஏன் இந்த மனம் ஆனந்தமாய் இருக்க மறுக்கிறது? காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறந்து விடுவது தான். தவறான செய்திகளை மனதிற்குத் தந்து, தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதை தவறாகவே பழக்கப்படுத்தியிருக்கிறோம்.
        ஊரைச் சுற்றினால் தான் ஆனந்தம், மதுவில் மூழ்கினால் தான் ஆனந்தம், பொருள்களை வாங்கிக் குவித்தால் தான் ஆனந்தம், அடுத்தவன் பொறாமைப்படும் படி வாழ்ந்தால் தான் ஆனந்தம், உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழ்ந்தால் தான் ஆனந்தம் என்றெல்லாம் தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால் பின் மனிதன் ஆனந்தமடைவது சாத்தியம் இல்லை.
           பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான, பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.
          பிரச்னையே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. பிரச்னையைத் தீர்க்க முடிவது தான் ஆனந்தம். தடங்கலே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. தடங்கலைத் தாண்டி முன்னேறுவது தான் ஆனந்தம். எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும், எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும் ஆனந்தம் தரும்.
            ஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம். ரோஜாவில் முள் என்றும் பார்க்கலாம். முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம். பாதி தம்ளர் காலியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். பாதி தம்ளர் நிறைந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும், எப்படிச் சொன்னாலும் அது உண்மையே என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை உங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் ஆனந்தமே.