தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/30/2010

மனிதா இது சரியா ? தவறா?


தொழில் நிமித்தமாக, ஒருவரின் வீட்டிற்கு சென்று இருந்தேன். அவர் வீட்டிலேயே சிறு தொழில் ஒன்றும் செய்து கொண்டிருக்கிறார். நாம் அவரை சந்திக்க போன போது, இரவு ஏழு மணி இருக்கும். வீட்டில் மின் தடைப்பட்டு இருந்தது. பக்கத்தில் எல்லாம் மின்சாரம் இருந்தது. அவரின் வீட்டில் மட்டும் மின் தடை. காரணம்?


எப்போதுமே பதினைந்தாம் தேதி தான் மின் கட்டணத்தை (கடைதி தேதியன்று) கட்டுவாராம். அன்று காலையில் திடீரென்று குழந்தைக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்ததில் மற்றும் பதற்றத்தில் ஞாபகமின்மை ஏற்பட்டு பணம் கட்டவில்லை. விளைவு. மாலையில் வந்து ப்யூஸ் பிடுங்கி விட்டார்கள். "கொஞ்சம் முன் கூட்டியே கட்டி இருக்கலாமே. இப்ப நமக்கு தானே சிரமம்" என்றேன்.


அவர் மட்டுமல்ல, நம்மில் நிறைய பேர் கடைசி நேரத்திலேயே, ஒரு பரபரக்கும் சூழ்நிலையிலேயே எல்லாவற்றையும் செய்கிறோம். நிச்சயம் அதனால் நமக்கு தான் சிரமம் என்பதை உணர மறுக்கிறோம். அலுவலர்களுக்கும் சிரமம். "பதினாலு நாளா எங்க போனிங்க" என்று அவரும் எரிச்சல் படுவார். சில சமயங்களில், கடைசி நாளில் மின் கட்டணம் செலுத்த வருபவர்களின் கூட்டத்தை, காவல்துறையினர் வந்து கட்டுபடுத்துவார்கள் என்று நண்பர் சொல்ல கேட்டிருக்கிறேன்.


பல்வேறு சமயங்களிலும், நாம் கடைசி நேரங்களிலேயே பல காரியத்தை செய்கிறோம். பணமின்மை என்கிற ஒரு காரணத்தை தவறாமல் வைக்கிறோம். அது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் எப்போதும் பணமின்மையை மட்டும் சொல்லி கொண்டிருக்க முடியாதே. வாடகைக்கு குடி இருக்கும் பட்சத்தில், எத்தனை பேர் வாடகை பணத்தை முதல் சில தேதிகளுக்குள் தருகிறார்கள்.


சிலருக்கு சம்பளத் தேதி சற்று முன் பின்னாக இருக்கலாம். சிலர் வார சம்பளம் வாங்கலாம். அதனால் சில தாமதங்கள் நிகழலாம். அது விதி விலக்கானவை. ஆனால் வேண்டுமென்றே தாமதப்படுத்தி கொடுப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். பணம் வைத்திருப்பார்கள். ஆனால் தர மாட்டார்கள். இழுத்தடித்து, அலைய வைத்து கொடுப்பதில், அவர்களுக்கு ஒரு சந்தோசம். "எதுக்கு வேகமா கொடுக்கணும். அவன்கிட்ட பணம் இல்லையா" என்று நினைப்பார்கள். நம் கடமையை செய்ய, நாம் தர வேண்டியதை தர எவ்வளவு விருப்பப்படுகிறோம்.


நாம் இதை விளையாட்டாக நினைக்கிறோம். ஆனால் அது நம் குணாதிசயத்தை காட்டும் கண்ணாடி என்பதை உணர மறுக்கிறோம். "அவர் எந்த விஷயத்திலும் கரெக்ட்டானவர் இல்ல" என்பதை பிறர் உணர வாய்ப்பளிக்கிறோம். சிலர் கடைசி நேரத்தில் தான், எந்த ஒரு விஷயத்திற்குமே பணத்தை திரட்டும் முயற்சியில் இறங்குவார்கள். பணம் கிடைக்காத பட்சத்தில் பொய்கள் தான் வந்து விழும். மனிதர்களை மனிதர்கள் இப்படி செய்ய முடியும். ஆனால் சில நிறுவனங்கள் நம்பகத்தன்மை இல்லாத காரணத்தினாலேயே பின் தேதியிட்ட காசோலைகளை பெறுகிறார்கள். மனிதனின் சில நடத்தை விதிகள், சரியற்று போவதால் தான் பல புதிய புதிய வழிகள் வருகின்றன. போஸ்ட் பெய்ட் ,போய் ப்ரி பெய்ட் சிம் வந்துள்ளது. முன்பெல்லாம் உபயோகித்தால் தான் பில் வரும். இப்போது உபயோகப்படுத்துவதற்கே பணம் செலுத்த வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் மாசக் கணக்கில் பாக்கி. DTH ஆபரேட்டரிடம் பாக்கி சொல்ல முடியுமா. "பணத்தை கட்டிட்டு பாரு" என்பார்கள்.


ஒன்றாந்தேதி பணம் கட்ட வேண்டும் என்றால், முந்தைய மாத இருபதாம் தேதியே அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். மனிதனின் வெற்றிக்கு திறமை, அதிர்ஷ்டம் என்று பல காரணங்கள் சொல்ல பட்டாலும், எல்லாவற்றையும் தாண்டி - எல்லாவற்றிலும் ஒழுங்கு என்கிற அம்சமே ஒருவரை நிரந்தர வெற்றியாளனாய் வைத்திருக்கும்.

நிச்சயம், நம் ஒழுங்கு பிறரை ஈர்க்கிறது. அது நமக்கு சில வாய்ப்புகளை பெற்று தருகிறது. சின்ன சின்ன விஷயம் தானே என்று நாம் எதையும் இளக்காரமாக நினைக்காமல், சின்ன செயல்களுக்கு ஒரு முனைப்பையும், பெரிய செயல்களுக்கு ஒரு வித முனைப்பையும் காட்டாமல் எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து செய்து வாழும் வாழ்க்கை மிக மிக சரியாக இருக்கும். நம்மை அளவற்ற  ஆனந்தத்தில் ஆழ்த்தும் ...

11/29/2010

பிரம்மாவின் அமிர்தம் (தண்ணீர்)




வேதங்களைப் பற்றிய (அல்லது) அதை சுற்றிய சிந்தனைகள் மட்டும் தான் இப்போது. அதனாலேயே என்னவோ இந்த தண்ணீர், தண்ணீர் பத்திகளைப் படித்ததும் இதையும் என் சேகரிப்பில், எனது எண்ணத்தின் வெளிபாடுடன் 
தோன்றியது. உங்களுக்கும் பயன்படலாம். படித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் (பொறுமையும்) இருந்தால் மகிழ்ச்சி.


யாகங்கள் / ஹோமங்களின் பொது பெரும்பாலும் "மந்த்ர புஷ்பம்" என்ற "யோபாம் புஷ்பாம் வேத" என்ற மந்திரத்தை புரோஹிதர்கள் கூட்டாக உச்சானை செய்ய கேட்டிருக்கலாம். அதன் பொருள் என்ன? தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும். (நண்பர் ஒரு புரோகிதர்)


சப்தங்களின் அதிர்வை தண்ணீர் உணருமா? எப்படி உணர்கிறது? அதன் பலன் என்னென்ன? அறிந்து கொள்ள Dr.Masaru Emoto , என்ற ஜப்பானிய விஞ்ஞானியின்  தளத்தை பாருங்கள். ஆராய்ச்சிகளின் மூலம் அறியத் தந்தவற்றை இந்த செய்தியில்  பாருங்கள் .

இந்த  பிரச்சினைக்கு என்ன rate என்ற விகிதத்தில், பணத்தைக் கொடுத்தால் சுகபோகங்கள், வியாதி தீருதல், கணவன் மனைவி பிரியாத வாழ்வுக்காக மந்திரங்கள் ஜபிக்கப் படும் என்பதையெல்லாம் நம்பும் அவசரத் தீர்வுகளைத் தேடும் வேகவிரும்பிகளாக ஆகி விட்ட நாம், இது அப்படியல்ல
சற்று நிதானிக்க வேண்டிய தருணம் - என்று world water day மூலம் UNCED 94-ஆம் வருடம் முதல் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆமாங்க!!! இவங்க நார்த் அமெரிக்கா-காரங்கதான் ... இனிமேயாவது கொஞ்சம் கேட்டுப்போம்.


கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதையாக, நம்மிடமே இயற்கையை பாதுகாக்கும் எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும், அவற்றை கரையானுக்கு போட்டுவிட்டு, யாருக்கும் ஈமெயில் ஒரு pdf அல்லது pps கோப்புக்களை forward to all என்று ஒரு send button-னை click செய்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட முடிகிறது. தற்போதைய / வருங்கால தலைமுறைகளுக்கு நம்மிடம் கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் சிலவற்றையேனும் எடுத்துக் கொடுக்கவும், அவற்றை பின்பற்றி இருப்பதை பாதுகாத்துக் கொடுக்கவும் எவ்ளவோ விஷயங்கள் கனிமங்களாகவும் சுலோகங்களாகவும் ஒளிந்து கிடக்கின்றன. இப்போது யாரும் படிப்பதில்லை, யாருக்கும் புரியவதுமில்லை, ஆனாலும், long-term perspectives-களோடு எழுதப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கங்களாக மட்டுமே வேதங்களை என்னால் பார்க்க முடிகிறது. (எனது தேடுதலில்)


வேதங்களில் இயற்கையையும் இயற்கையை சார்ந்தவற்றையும் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் பாடல்படுத்தப்பட்டிருக்கிறது. நமக்கெல்லாம் யார் சொன்னா என்ன, யாராவது ஒரு வியாபாரி தன் லோகோ-வோடு "Save Water, Save Environment, Save Energy" என்று அதை இங்கிலிஷில் சொன்னால் மட்டுமே கேட்போம். அப்போத்தானே நமக்கும் பெருமை. என்னவோ போங்க.


அதில் ஒரு சில உதாரணங்கள் இங்கே. எப்போதோ இதை படித்து நம் முன்னோர்கள் "ஆமா இதைப் போயி" என்று சிரித்திருக்கலாம். அதன் பலனைத்தான் நாம் இன்று "Save... Save" என்று கூவிக் கொண்டிருக்கிறோம்.

  • ரிக் வேதம் (6:48:17) மரங்களை வெட்டக்கூடாது, அவை காற்றை தூய்மை படுத்துகின்றன
  • யஜுர் வேதம் (5:43) வானத்தை கிழிக்காதீர்கள், ஆகாசத்தை மாசுபடுத்தாதீர்கள்
  • சரக சம்ஹிதம் -- ஒரு காடு அழிந்தால் ஒரு நாடு அழிகிறது, மீண்டும் ஒரு காட்டை உருவாக்குவதை விட எளிதாக ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதால், காடுகளை காக்க வேண்டும். காடுகளின் உள்ள மிருகங்கள் காட்டின் வளர்ச்சிக்கு தேவையாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பது நம் சடங்கு எனக் கருத வேண்டும்.
=======================================
"அம்ருதம் பிரம்மா பூர் புவஸுவரோம்"


அம்ருதம்: தண்ணீர்
பிரம்ம: உயிர் (அ) வளர்ச்சி (அ) அசைவு உடைய அனைத்தும்
பூர்: ஐம் பூதங்களைக் கொண்ட உலகம்
ஸுவ: தெய்வீகத்தன்மை கொண்ட (அ) உடையதாகக் கருதப் படும் எதுவும்
ஓம்: Universal Sound


தண்ணீர் உயிர்களின் அமிருதம், அதுவே அசைவுடைய உயிர்களைக் கொண்ட இந்த உலகத்தின் அசைவுக்கும், சுவர்க்கத்தின் இயக்கத்திற்கும், ஓம் என்ற நாதம் தோன்றவும் ஆதாரமாக அமைகிறது.

காகூ தீர்; காகூ நீர்; காகூ பேத் பிசார் || நானகா பகத் ப்ரியா ஹோ
(சீக்கிய "ஷபத்" -- குரு அர்ஜன் தேவ் ஜி [ராக் கௌரீ-- பன்னா 213]

காகூ - சிலர்
தீர் -நதிக்கரை / நீர்நிலைக்கு அருகிருக்கும் மணற்பரப்பு
நீர்- தண்ணீர்
பேத பிசார் - வேதங்கள்
நானக் - குறு நானக்ஜி
பகத் - பகவான் / கடவுள்


சிலர் கரைகளில் வாழ்கிறார்கள்; சிலர் தண்ணீரிலேயே வாழ்கிறார்கள்; சிலர் வேதங்கள் படிக்கிறார்கள்; நானக்கிற்கு இறைவன் மீது அன்பும் (பக்தி) என்கிறார்.

அப்ஸ்வன்தர்ம்ரித்மப்யு பேஷஜம் || [4/4 அதர்வவேதம்]


அப்ஸ்வன்தம் -->தண்ணீரில்
அம்ருதம் --> அமிருதம் இருக்கிறது
அப்யு --> அதுவே மேன்மையான
பேஷஜம் --> மருந்தாக இருக்கிறது


ரிக் வேதத்தின் ஜலஸுக்தம் என்ற புத்தகத்தில்:


யா ஆபோ திவ்ய உத(tha) யா சவன்தி, ரவநித்ரிமா உதத் வா யா ஸ்வயஞ்சா:
சமுத்ரார்தா யா: ஷுசைய: பா(p)வகாரத; ஆபோ தேவீரிஹ மாமவன்து||


தண்ணீரானது சுவர்க்கத்திற்கு நிகரான மலைமுகடுகளில் இருந்து பூமிக்கு வருகிறது. நதி ரூபமாகி வேகம் கொண்டு பாய்கிறது. ஓடையாகித் தவழ்கிறது. பூமியைத் தோண்டுவதன் மூலம் ஊற்றாகி குட்டைகள் மற்றும் கிணறுகளில் பெருகுகிறது. இவ்வாறும் பயணித்து சமுத்திரத்தில் சேர்க்கிறது. என்னை புனிதமாக்கி என்னை வாழச்செய்யும் தண்ணீரே! என்னைக் காப்பாய்.


என்று நீர்நிலைகளை வணங்கச் சொல்கிறது.


லதுமய ஸ்மிருதியில்
"வித்தோபேக்ஷம் பவேதஷ்டிம் தடாகம் பூர்தமுச்யதே
ஆராமஷ்ச்ச விஷேஷேன தேவத்ரோணச்ததைவ ச||" என்று சொல்லப் பட்டிருக்கிறது.
அதாவது, தடாகம் என்பது விசேஷமாக அமைக்கப் பட்டத் தோட்டமும் நீர்நிலையும் கூடிய இடமாக இருக்கிறது. அழிந்துவிட்ட தடாகங்கள், கிணறுகள், மற்றும் குளங்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய உதவுபவன் உலகில் உள்ள ஜீவராசிகளை காப்பதின் புண்ணியத்தைப் பெறுகிறான்.

தண்ணீரை எப்படி பாதுகாக்கலாம் என்று வேதங்கள் கூறுகின்றன? இதையேதான் நாமும் இன்றும் சொல்லி (மட்டும்) கொண்டிருக்கிறோம்.


  1. நீர்நிலைகளில் கிணற்றில் எச்சில் துப்புவதோ, குப்பைகளைப் போடுவதோ கூடாது.
  2. நீர்நிலைகளுக்கு அருகில் மலஜலம் கழிப்பது பாவச் செயல். (சென்னையின் முகமாக கூவம் இருக்கும் கதியை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்)
  3. வீடுகளுக்கான உபயோகத்திற்கு என்று இந்த நீர் நிலைகளில் இருந்து தினமும் தேவையான அளவுக்கு நீர் சேகரிக்க வேண்டும். அன்றைய தேவைக்கு போக மிகுந்ததை மறுநாள் காலை மீண்டும் நீர் நிலையிலேயே விட வேண்டும். (கொசு உற்பத்தி தவிர்க்கப்படுகிறது)
  4. ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒருமுறை மக நட்சத்திரம் கூடிய நாளில் நீர்நிலைகளை தூர் வார வேண்டும் (மகாமகம் உற்சவமாகிப் போனது)
  5. நீரில் மண் / சகதி முதலியவற்றை வீசக் கூடாது.

11/28/2010

காளமேகம் (15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர்)

தமிழ்ப் புலவர்களின் வரிசையில் காளமேகம் ஒரு அற்புதமானவர்.
(நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்), சிலேடை கவி (ஒரே பாடல் இரு பொருள்), நிந்தா ஸ்துதி கவி (வசை பாடுவது போல் இருக்கும் ஆனால் உட்பொருள் போற்றுவது இருக்கும்) போன்ற கவி வகைகளில் சிறந்து விளங்கியவர்.
       தமிழிலக்கணத்தின் பலரும் தொட்டுப் பார்க்காத வகைகளை மிக அழகாகக் கையாண்டவர்.
வரதன் என இயற்பெயர் கொண்டவர்.
கோயில் உதவியாளராக இருந்தவர்.
மோகனாங்கி என்பவளிடம் அன்பு கொண்டு சைவ சமயம் சேர்ந்தவர்.
அம்பிகையின் அருளால் கவித்திறன் பெற்றவர். திருவானைக்கா உலா, மூவர் அம்மானை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம் போன்ற பாடல் தொகுப்பை எழுதியவர்.


மற்றவர்கள் கொடுக்கும் குறிப்புகளுக்கேற்ப, வெண்பாக்களை நொடிப்பொழுதில் பாடி அசத்திக் காட்டுவார். இவரின் மிக அழகிய, நயமிக்க பாடல் சிலவற்றைக் காண்போம்.


தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.


காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).


அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார்.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?


தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)


பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..

அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பரிய மாமன் உறிதிருடி; - சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு
எண்ணும் பெருமை இவை..


வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கஇக் காசினியில் அல்ஆர்
பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா இல்லாத
தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.


ஆலங் குடியானை ஆலாலம் உண்டானை
ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார்? - ஆலம்
குடியானே ஆயின் குவலயத்தோர் எல்லாம்
மடியாரோ மண்மீதிலே.


பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்குக் கால்பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!


ஒன்றுஇரண்டு, மூன்றுநான்கு, ஐந்துஆறு, ஏழ்எட்டு
ஒன்பதுபத் துப்பதி னொன்று - பன்னிரண்டு
பதின் மூன்றுபதி னான்குபதி னைந்து
பதி னாறுபதி னேழ்பதி னெட்டு.
வாரிக் களத்துஅடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவுஆகும் - சீர்உற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை ஆம்.
ஆடிக் குடத்துஅடையும் ஆடும்போ தேஇரையும்
முடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டை
பற்றில் பரபரஎனும் பாரில்பிண் ணாக்கும்உண்டாம்
உற்றிடும்பாம்பு என்எனவே ஓது.
சுருக்குஅவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்
பொருக்குஉலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்
கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்!
ஆண்டி குயவா! அடா!உன்பெண் டாட்டிதனைத்
தோண்டிஒன்று கேட்டேன் துரத்தினாள் - வேண்டிஇரு
கைக்கரகம் கேட்டேன்நான் கால்அதனைத் தூக்கியே
சக்கரத்தைக் காட்டினாள் தான்!

நன்றி :பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்

11/27/2010

பைக் ஓட்ட பணிவான பத்து அறிவுரைகள் ......

சென்ற ஒரு வாரமாக என்னால் வீட்டில் இருந்து அலுவலகம் செல்லவோ ,
வேறு எங்கவாது செல்ல ரொம்ப பயமா இருக்கிறது ,காரணம் அந்த அளவுக்கு சாலை நெரிசல் அதிகமாகிவிட்டது, சரி என்ன செய்ய ? அதற்கு காரணம் என்ன என என் மனதில் போட்டு குழப்பியதில்  நாம் மாறி ,நம்மை சுற்றி ஒரு பத்து 
பேரை மாற்ற முயற்சிப்போம் என தேடியதில் சில அறிவுரைகள் ...... 

 

1 .மிதமான வேகத்தில் சீராக ஓட்டுங்கள்!


எப்போதும் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலேயே செல்லுங்கள். உங்கள் மொத்தப் பயண நேரத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. வேகமாகச் செல்லும்போது, மாற்றி மாற்றி பிரேக்கை அழுத்தியும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியும் ஓட்ட நேரிடும். இப்படி வேகமாக ஓட்டினால், ஏராளமான எரிபொருள் விரயமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


2தேவை இருந்தால் மட்டும் பிரேக்கைப் பயன்படுத்துங்கள்!


ஒரு நல்ல ரைடரால் நிற்க வேண்டிய இடங்களைச் சரியாகக் கணிக்க முடியும். வேகமாகச் செல்லும் பைக்கில் பிரேக்கை உபயோகிக்கும்போது, சக்தியைப் பெருமளவில் விரயம் செய்கிறோம். வளைவுகளை முன்கூட்டியே கவனித்துச் சென்றால், பிரேக்கை உபயோகிக்காமல் செல்ல முடியும்.


3கிளட்ச்சைக் கைவிடு!


தேவையில்லாமல் கிளட்ச்சோடு பின்னிப் பிணைந்து, அதைப் பிடித்துக்கொண்டே பைக் ஓட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். இந்தப் பழக்கம் பெட்ரோலைக் குடித்துவிடும்.


4ஏர் பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்!


இன்ஜின் மூச்சு விடுவதற்குக் காற்றை அனுப்புவது, இந்த ஏர் பில்டர்தான். தூசு துரும்புகள் இன்ஜின் பாகங்களை சீக்கிரம் தேய்மானத்துக்கு உட்படுத்தும். அதோடு, தூசு புகுவதால் ஏற்படும் கார்பன் படிவம் சைலன்ஸரை அடைத்துக்கொண்டு, இன்ஜினை திணற வைக்கும். இதனால், பைக் பர்பாமென்ஸ் பாதிக்கப்படும்.


5டயரின் காற்றழுத்தத்தை சோதியுங்கள்!


காற்றுக் குறைவான டயர்களால் பெட்ரோல் தேவை அதிகமாகிறது. 25 சதவிகிதம் காற்றுக் குறைவான டயர்களால், 5 சதவிகிதம் அதிக எரிபொருள் தேவையும், டயர்களின் ஆயுட்காலம் 25 சதவிகிதம் குறைவதும் ஏற்படும். அதே போல், தேய்ந்துபோன டயர்களாலும் பெட்ரோல் விரயமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


6பெட்ரோல் லீக் ஆவதைச் சோதியுங்கள்!


பைக்கின் பெட்ரோல் டேங்க், கார்புரேட்டர் மற்றும் ப்யூல் லைன் (Fuel Line) என பெட்ரோல் பயணிக்கும் அத்தனை இடத்தையும் சரிவரச் சோதியுங்கள். ஒவ்வொரு துளியாக வடிந்தால்கூட ஒரு நாளைக்கு 5 1/2 லிட்டர் எரிபொருள் விரயமாகிவிடும்!


7சிக்னல்களில் இன்ஜினை ஆப் செய்யுங்கள்!


ஐடியலில் பெட்ரோல் பெருமளவு விரயமாகும். ரயில்வே கேட், போக்குவரத்து நெரிசல், சிக்னல்கள் ஆகியவற்றைக் கடக் கும்போது பைக்கை ஆப் செய்து எரிபொருளைச் சேமியுங்கள்.


8இன்ஜினை நல்ல கண்டிஷனில் வைக்கவும்!


அவ்வப்போது இன்ஜினைச் சரியாக டியூன் செய்துகொண்டால், 6 சதவிகிதம் வரை பெட்ரோலைச் சேமிக்கலாம். பைக்கில் அதிகப் புகை வெளியானாலோ, இழுவைத் திறன் குறைந்தாலோ, உடனடியாக சர்வீஸ் சென்டருக்குப்போய் இன்ஜினைச் சோதியுங்கள்!


9பேட்டரியை அவ்வப்போது சோதியுங்கள்!


எலெக்ட்ரிகல் உபகரணங்கள் எப்போதும் நல்ல நிலையில் இருப்பது முக்கியம். எனவே, ஒரிஜினல் உதிரி பாகங்களை மட்டுமே வாங்கிப் பொருத்துங்கள்.


10அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் பைக்கை சர்வீஸ் செய்யுங்கள்!


உங்கள் பைக்கின் முக்கியச் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்த சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்வது, நீங்கள் கொடுக்கும் பணத்துக்கும் வாகனத்துக்கும் நன்மை பயக்கும்!

முயற்சி செய்வோம் !         முயன்றால் எதுவும் சாத்தியம்தான் !!

11/26/2010

சத்தியம் இது சத்தியம் (முதல்நாள் வார்த்தை)


சத்தியம் இது சத்தியம்
முதல்நாள் வார்த்தை....
மறுநாள் போயி  குடிக்கப்
போகும் வரை ...


எதற்கு குடிக்கிறாய் என்று
கேட்டாலும் உன்னிடம்
ஆயிரம் காரணங்கள் உண்டு...
காலைமுதல் மாலைவரை
உழைக்கும்போது தெரியாத
மயக்கம் இரவு ஆனதும்
மயக்கம் வாந்தியுடன்...


நீ வருவாய் சாப்பிட
என்று காத்திருக்கும்
குடும்ப அங்கத்தினரின்
பசிப் புலம்பல்கள் உனக்கு
கேட்க வாய்ப்பில்லை....


கர்ண  வள்ளலைப் போல‌
மயக்கம் தெளியும்முன்
வாரிவாரி வழங்கினாய்
தெளிந்தபின் அதனை
தேடுவது பரிதாபம்....


இருக்கும்போதே அனுபவிடா ராஜா....
என்ற உன் எண்ணம்தெரியாமல்
 நீ இல்லாமல் போனதும் ஆற்ற
முடியாதுயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்.....

11/25/2010

தப்புக்கும் தவறுக்கும்


தப்பு என்று தெரிந்தும்
யோசிக்கத் தோணுது
தப்பு தப்பாய்...


தப்புசெய்து பழக்கப்பட்ட‌
அவன் திருந்தி நல்வழியில்
செல்கையில் தவறு செய்யும்போது
வேதனையில் துடித்தான்.


அவனிடம் கேட்டேன்
தப்புக்கும் தவறுக்கும்
உள்ள வித்யாசம்
என்னவென்று..?..

11/24/2010

எல்லாம் தெய்வம் கண்டீர்........


உயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,
மேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்
                                                                         ---பாரதியார் ----

11/23/2010

இளையயோரைப் பகையாதே

ஒரு நாள் செல்வந்தர் ஒருவர் காட்டு வழியே பயணித்துக் கொண்டிருந்தார். மூன்று திருடர்கள் அவரை அடித்து அவரிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டனர்.


முதல் திருடன் அவரைப் பார்த்து "இப்போது இவனிடம் எதுவுமே மிஞ்சவில்லை. இவனைக் கொன்று விட்டால்தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் இவன் காவல்காரர்களிடம் சொல்லி விடுவான்" என்கிறான். இப்படி சொல்லிக் கொண்டே தன்னிடம் இருந்த குறுவாளை எடுக்கிறான் முதல் திருடன்.


இரண்டாவது திருடன் "பொறுமையாக இரு.. நமக்கு வேண்டியது செல்வங்கள்தானே. அவைதான் கிடைத்து விட்டனவே. இவனைக் கொல்வதால் என்ன லாபம்? இவனை மரத்தில் கட்டிப்போட்டு விட்டு நாம் ஓடிவிடலாம்" என்று கூறுகிறான். மூன்றுபேருமாக செல்வந்தனை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள்.


சிறிது தொலைவு சென்றதும் மூன்றாம் திருடனுக்கு மனதில் ஒரு கவலை ஏற்படுகிறது. "பாவம் அந்த செல்வந்தன். உதவிக்கு யாரும் கிடைக்கவில்லையென்றால் பசி-தாகத்தில் இறந்து விடுவான். காட்டு விலங்குகள் அவனை சாப்பிட்டுவிடும்." என்று பரிதாபத்தோடு அவன் மட்டும் திரும்பி வந்து செல்வந்தனை கட்டிலிருந்து விடுவித்தான். மூன்றாம் திருடன் செல்வந்தனை பொதுப்பாதை வரை அழைத்து வந்து விட்டுவிட்டு "இந்தப் பாதையில் நேராகச் சென்றால் உன் கிராமம் வந்து விடும்" என்று கூறிவிட்டுச் செல்கிறான்.


வழியில் மகாராஜாவின் படையொன்று இவரைத் திருடன் என்று கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். மகாராஜாவின் அந்தரங்கப் பணியாளர் ஒருவருக்கு இச்செல்வந்தரைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால் விடுதலை செய்யும்படி மகாராஜாவுக்கு பரிந்துரை செய்கிறார். மகாராஜாவும் உண்மையறிந்து விடுதலை செய்கிறார். இதனால் மகாராஜாவிற்கு மாதம் தவறாமல் தான் ஈட்டும் செல்வங்களில் ஒரு பகுதியை அனுப்பித் தருகிறார் செல்வந்தர். மகாராஜாவும் செல்வந்தரும் நல்ல நண்பர்கள் ஆகினர். செல்வந்தர் எப்போது வேண்டுமானாலும் அரண்மனைக்குள் சுதந்திரமாக வந்து போகும் படியாக அமைந்தது இந்த நட்பு.


ஒரு முறை தன் இல்லத்து விழாவுக்கு மகாராஜாவை அழைக்கிறார் செல்வந்தர். மகாராஜாவும் தன் அந்தரங்கப் பணியாளருடன் வருகிறார். அந்தரங்கப் பணியாளரை விருந்தின்போது அலட்சியத்துடன் நடத்தி வெளியே நிற்கும்படி செய்கிறார் செல்வந்தர்.


இதனால் மனம் வருந்தும் அந்தரங்கப் பணியாளர் இச்செல்வந்தருக்கு எப்படியாவது புத்தி புகட்ட வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு முறை மகாராஜாவின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மகாராஜாவின் காதில் படும்படி "இந்த செல்வந்தனை அடக்குவார் இல்லாமல் போய்விட்டதே.. இப்படி அந்தப்புரம் வரை செல்கிறானே!" என்று புலம்பினார். அவ்வளவுதான். அந்த செல்வந்தர் வருவதை தடை செய்யும் படியும் தன்னை சந்திக்கவே முடியாதபடியுமாக உத்தரவிட்டார் மகாராஜா. செல்வந்தருக்கோ ஒரே குழப்பம் - என்னவாயிற்றோ என்று. மிகவும் மனம வருந்தினார். அந்தரங்கப் பணியாளரின் நினைவு வந்து அவரை வீட்டிலேயே சந்திக்க சென்றார் செல்வந்தர். "இளையயோரைப் பகையாதே" என்கிறார் அந்தரங்கப் பணியாளர். அடாடா இதுதான் நடந்ததா.. என்று மனம் வருந்துகிறார் செல்வந்தர். இதைச் சரி செய்யும்படி வேண்டிக் கொள்கிறார்.


மறுநாள் மகாராஜாவின் அறையை சுத்தம் செய்யும் போது 'இதென்ன! மகாராஜா சாப்பிடும் போதெல்லாம் தும்மல் வந்து உணவை இறைக்கிறாரே" என்று புலம்புகிறார். என்ன உளறுகிறாய் என்று மகாராஜா கோபிக்கவும் பணியாளர் "வயதானதால் இரவு உறக்கம் வரவில்லை.... இப்படித்தான் அரைதூக்கத்தில எதையேனும் உளறிவிடுகிறேன் மகாராஜா.. என்னை மன்னியுங்கள்." என்கிறார். மகாராஜாவும் இவரை முழுமையாக நம்புகிறார். செல்வந்தர் பற்றிய செய்தியும் புரளிதான் என்றறிந்து செல்வந்தரை மன்னித்து நண்பனாக ஏற்கிறார்.

எப்படியோ கதைன்னு ஒன்று சொன்னால் கருத்து சொன்னால்தானே கதை முடிந்ததாக அர்த்தமாகும்.... கருத்தை இந்தக் காலத்துக்கு ஏற்றமாதிரி மாற்றிக் கொள்ளுங்கள்.... பெரிய ஆளுமைகள், அல்லது தன்னை ஆளுமையாக நினைப்பு கொண்டிருப்பவர்களின் நட்பும், அவர்களின் கார் ஓட்டிகள், சமையல்காரர்கள், பெர்சனல் அஸிஸ்டன்டு-கள், ஆஃபிஸ் பாய்கள் போன்றவர்களின் பகையும் ஆபத்துக்கு வழிவகுக்கும். ஒரு புன்னகையை மட்டுமே இவர்களுக்கு எப்போதும் தரத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

11/22/2010

இப்படியும் வெற்றியா ?

சென்ற வாரம் நான் என் நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்ததில் ,எனக்கு தோன்றிய எனது எண்ணத்துடன் சில கதைகளையும் சேர்த்துள்ளேன் ......

ஒரு man - hero வாக இருந்தான்.
அடுத்த கட்டமாக, ஒரு பிரமாண்டமான வளர்ச்சி நிலை.
உலகை காக்கும் பொறுப்பில், முதல் நாள் காலடி எடுத்து வந்தான்.
வழியில் ஒருவரை சந்தித்தான்.

ஹீரோ விடம் பேசியவன், "உங்களிடம் இருக்கும் அபாரமான திறமைகளும்,  அதீத   சக்திகள் மட்டும் உங்களின் வெற்றிக்கு காரணம் ஆகி விடும் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டான்.


உயிரை பணயம் வைத்து ஆரம்பிக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு கேள்வி ஹீரோவின் தன்னம்பிக்கையை ஆட்டம் காண வைத்தது. பலசாலியின்
பலவீன மனம் முந்தி கொண்டு கேட்டது:
"என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்."


"எல்லாம் சரி. ஆனால் வாஸ்து படி, உங்கள் ஜட்டி தப்பான இடத்தில் இருக்கிறது. அதை pant உக்கு வெளியில் போட்டீர்கள் என்றால்............."


"நான் வெற்றி பெற வேண்டும். எதையும் செய்வேன். திறமைகள் சக்திகள் எல்லாம் அப்புறம்தான்."


செய்தான்..........
அவனின்  திறமைகளும் சக்தியும் man, superman ஆக செய்தது.


ஆனால், தன் அறிவுரைதான் அவரின் வெற்றியின் ரகசியம் என்று வாஸ்து படி உடையை மாற்ற சொன்னவர், வெளியில் சொல்ல ஆரம்பிக்க ..............


வாஸ்துக்கு பின் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால்,
அபத்தங்கள்தான் அரங்கேறி கேலிக்குரியதாகின்றன.

        எங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர், யார் சொல்லியும் கேளாமல், வாஸ்து ஜோசியரை நம்பி, நன்கு நடைபெற்று கொண்டிருந்த தன் வியாபாரம் மேலும் விருத்தி ஆக தன் வீட்டை முழுதும் மாற்றி கட்டினார். குளியறை இருந்த இடத்தில் வரவேற்பு அறையும், வரவேற்பு அறை இருந்த இடத்தில் அடுக்களையும், படுக்கை அறை இருந்த இடத்தில் குளியல் அறையும், அடுக்களை இருந்த இடத்தில் மாடிப்படிகளும், முன் பக்கம் இருந்த வீட்டு வாசலை வேறு பக்கம் நோக்கியும் மாற்றி நிறைய செலவு செய்து கட்டிய மூன்று வருடங்களுக்குள், இன்று அந்த வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டுக்கு வரும் நிலைக்கு வந்து விட்டார். வியாபாரம், படு மோசமான நிலையில் இருக்கிறது. 

            ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து பொழப்பு  நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ என தோன்றியது .......

11/21/2010

ஹிட்லரின் கொடுமைகளில் நடந்த கொலைகள்


சர்வாதிகாரம் என்பதற்கு பொருள் அடால்ஃப் ஹிட்லர் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஹிட்லர் லட்சக்கணக்கான கொலைகளில் சில..


முதல் உலகப்போரில் 40000 குழந்தைகள் கொல்லப்பட்டன. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் ஹிட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இது பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது.
சிறைகளில் சித்திரவதைக்கூடம் இருக்கும், சிறையே சித்ரவதைக்கூடமாக இருந்தது ஜெர்மனியில், ஹிட்லரின் ஆட்சி காலத்தில்.1933 ஜெர்மனியில் ரெய்க் ஸ்டாக் சிறை தீக்கிரையான போது அரசியல் மற்றும் ராணுவ எதிரிகளை அடைப்பதற்காக உருவாகப்பட்டது நாஜி சிறைச்சாலைகள். யூதர்களை தேடிப்பிடித்து கைது செய்து நிர்வாணமாக சிறைக்கு அனுப்புவார்கள்,


சிறைக்கு வரும் போது இறந்து விட்டால் அவன் அதிஷ்டசாலி. அல்லாமல் சிறைக்கு வந்தால் காற்று புகாத அளவுக்கு மூடப்பட்ட அறையில் ஆட்டு மந்தை மாதிரி மனிதைகளை அடைத்து விஷ வாயுவை செலுத்தி மூச்சுத்திணறி ஒவ்வொருவராக செத்துமடிவதை பார்த்து மகிழ்வார்கள். துப்பாக்கியை பரிசோதிக்க யூதர்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டார்கள், மருத்துவ பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி எடுத்தார்கள், தோலைஉரித்தும், வெந்நீரில் மிதக்கவிட்டும் மகிழ்ந்தார்கள்.


1942 - ம் வருடம் ஆஸ்விச் சேம்பர் என்ற புதிய சிறையை கட்டினார் ஹிட்லர். அந்த சிறையில் 15 நாட்களுக்கு ஒரு ரொட்டித்துண்டு மட்டுமே கொடுப்பார்கள், அதை சாப்பிட்டு சாகாமல் இருந்தால் அவன் பரிட்சையில் பாஸ், இந்த செய்தி தெரிந்து அப்பாவி யூதர்கள் காவலர்களுக்கு பணம் கொடுத்து ஆஸ்விச் சேம்பருக்கு வரதொடங்கினார்கள், ( உடனே வரும் சாவை கொஞ்சநாள் தள்ளிப்போடலாம் என்று ) கைதிகள் எண்ணிக்கை அதிகமானதை பார்த்த காவலர்கள் ரொட்டித்துண்டு கொடுப்பதை நிறுத்தி விட்டு விஷ வாயுவை செலுத்தி கொல்ல ஆரம்பித்தார்கள்.


இரண்டு ஆண்டுகளில் ஆஸ்விச் சேம்பரில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சம்


ஹிட்லரின் கொடுமைகளில் சில....









11/20/2010

வெள்ளைமன நட்பு ....

 நிலா நிலா ஓடி வா என்றால்


நில்லாமல் வந்து விடும் என்று நினைத்த பருவம்.
எழுதும் குச்சியை பொம்மை ஆக்குவதோ
எதுவும் இல்லாமல் ஊசி ஆக்குவதோ
என்ற கவலை மட்டும் இருந்த பருவம்.
கண்ணீரால் கத்தி சாதிக்க முடியாததையும்
கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்.
அ ஆ இ ஈயும் அம்மா இங்கே வாவும்
அறிந்தாலே அறிவாளி என்று இருந்த பருவம்.
அழ வைக்காமல் இருந்தாலே -
நட்பு என்று புரிந்தும் புரியா பருவம்.
ஆதாயம் தேடி வந்ததில்லை;
அழகு பார்த்து சேர்ந்தது இல்லை;
செல்வத்தின் அளவு தெரிந்ததில்லை;
சொல்வது கூட எல்லாம் புரிந்ததில்லை.
பால் வடியும் முகத்துடன் என் அருகில் இருந்த
பால்ய தோழி, இன்று இருக்கும் -
இடமோ உருவமோ பருவமோ முகமோ நானறியேன் -
வெள்ளை மனதில் வெளிப்பட்ட அந்த நட்பின் வெளிச்சத்தில்,
நாட்கள் கடந்தும் நாடுகள் தாண்டியும்
நல்ல நண்பர்களை கண்டு கொண்டு நலமுடன் - நான்.
நீ எங்கிருந்தாலும் இறை அருள் இருக்க
நீண்ட வேண்டுதலுடன், நினைத்து வாழ்த்துகிறேன்....

11/19/2010

அன்பே கடவுள்

நான் பலரிடம் "விட்ட" கதைகளை விட்டு தள்ளுங்க. அந்த கதை எல்லாம் இப்போ வேணாம்! உண்மையிலுமே, கதை சொல்ல போறேன். கதை வேண்டாம் என்று இருக்கிறவங்க, இங்கேயே..........பாருங்க.


பல கதை புத்தகங்கள் படித்து இருந்தாலும், பலரிடம் கதை கேட்டு இருந்தாலும், என் நண்பரிடம்  கேட்ட கருத்துள்ள கதைகளில், என்னை மெருகேற்றி கொள்ளும் அம்சங்களும் அமைந்து இருந்ததால், அவற்றை மறக்க முடியாது.
அவற்றில் ஒன்று:
அன்பே கடவுள்:
        மார்டின் என்பவன், தினமும் ஜெபங்கள் செய்வதிலும் ஞாயிறு தவறாமல் ஆலயம் செல்வதிலும், ஜெப கூட்டங்களுக்கு தவறாமல் செல்வதிலும் இருந்தான். நாட்கள் ஆக ஆக, எப்படியும் ஒரு நாளாவது இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை, பேராசையாய் வளர்ந்து கொண்டு வந்தது.

      ஒரு நீண்ட ஜெபத்துக்குப் பின், தன்னை சந்திக்க இறைவன் எப்படியும் வர வேண்டும் என்று உருக்கமாய் ஜெபித்து விட்டு சென்றான்.
       அன்று இரவு கனவில், ஒரு பேரொளி தோன்றியது. அந்த ஒளியின் நடுவில் இருந்து வந்த குரலில்: "நாளை நீ, என்னை காண்பாய்."
        சந்தோஷத்துடன், மதிய விருந்து தயாரித்தான். இறைவனுக்கு பரிசாக கொடுக்க, ஒரு பெரிய சால்வை/போர்வை பரிசாக வாங்கி வந்து வைத்தான்.
      மாலை நான்கு மணி ஆனது. இறைவன் வரவில்லை.
ஒரு வயதானவர், காலை நொண்டி கொண்டு அவர் வீட்டு வாசலில் வந்து நின்று உணவு கேட்டார். முதலில், அவருக்கு உணவு மறுத்து விட்டு உள்ளே சென்று விட்டான், மார்டின்.
மீண்டும் அந்த முதியவரின் குரல் கேட்டு, மனது கேட்காமல், உள்ளே இருந்த உணவில், தன் பங்கை எடுத்து முதியவருக்கு கொடுத்து உண்ணக் கொடுத்தான். முதியவர், சந்தோஷமாக சாப்பிட்டு விட்டு வாழ்த்தி விட்டு சென்று விட்டார்.


மாலை மணி ஐந்து ஆனது. இறைவன் வரவில்லை.


வெளியில் கடைத்தெரு வரை சென்று , இறைவன் வருகிறாரா என்று பார்த்தான். மெல்லிய மழைச்சாரலில், ஒரு இடத்தில் ஒதுங்கி நின்ற ஒரு ஏழைப் பெண்ணையும், குளிரில் வாடி கொண்டு இருந்த அவளது கைக்குழந்தையும் கண்டான். கண்டும் காணாதது போல அவர்களை கடந்து வீட்டுக்கு வந்தவனுக்கு, மனதில் ஒரு நெருடல். இறைவனுக்கு வாங்கி வைத்து இருந்த அந்த சால்வையை எடுத்து கொண்டு மீண்டும் வெளியே சென்றான். அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுத்து விட்டு, பால் வாங்க கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, வீடு திரும்பினான்.


மாலை ஏழு மணி ஆனது. இறைவன் வரவில்லை.


அவனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டிக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனது. அவருடன் அவரது 14 வயது பேரன் மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, மார்டினை உதவிக்கு அழைத்தான்.
தான் அங்கு உதவ சென்று இருந்த நேரம், இறைவன் வந்து விட்டால்............... தயங்கிய மார்டின், சிறுவனின் முகம் கண்டு, நிலைமையை உணர்ந்து கொண்டு, அவனுடன் சென்றான். பாட்டியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, அவருக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்து விட்டு, வேலைக்கு சென்று இருந்த அவரின் மகனுக்கும் தகவல் அனுப்பி விட்டு, அவர் வரும் வரை காத்து இருந்தான். பாட்டி, நன்றாக இருப்பதை அறிந்து கொண்டு, இரவு, வீட்டுக்கு வந்தான்.


இரவு பத்து மணி ஆனது. இறைவன் வரவில்லை.


இறைவன் வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இறைவன் இல்லையோ? தன்னை ஏமாற்றி விட்டாரோ? என்ற குழப்பங்களுடன், பைபிள் எடுத்து வாசிக்க உட்கார்ந்தான்.


மத்தேயு 25: " பசியாய் இருந்தேன், உண்ணக் கொடுத்தீர்கள்;
தாகமாய் இருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்;
அன்னியனாய் இருந்தேன், என்னை சேர்த்து கொண்டீர்கள்;
உடை இல்லாதிருந்தேன், எனக்கு உடை தந்தீர்கள்;
நோயுற்று இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்;
காவலில் இருந்தேன், என்னை பார்க்க வந்தீர்கள் ....................
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்."


இரவு பத்தரை மணி ஆனது. இறைவன் வந்து விட்டு சென்றதை புரிந்து கொண்டான்.


நான் புரிந்து கொண்டது: கடவுள் இருக்கிறார் என்று என் சுயநல வாழ்க்கை நலத்துக்காக மட்டும் நம்புவது, இறை நம்பிக்கை அல்ல. ஆலயம் செல்வது மட்டுமே ஆராதனை ஆகாது. கடவுளை தேடி, அங்கும் இங்கும் அலைவதை விட - அதற்காக நிறைய செலவழிப்பதை விட - நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம், அன்புடன் நம் கடமையைச் செய்தால் - மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால்

11/18/2010

அன்பின் அடையாளங்கள் எது ?

           நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களுக்கு அது அப்பா அம்மாவாகக்கூட இருக்கலாம்.சங்கடமான கட்டங்கள் வரும்போது நம்மையும் சேர்த்து ஏதேனும் சொல்லிவிடுகிறார்கள்.ஏன் நாம்கூடத்தான் சொல்லிவிடுகிறோம்.நாம் உடனே வேதனைப்படுகிறோம்.அட..சே! எப்படி இருந்தவர் இப்படி மாறிவிட்டார் என்று இந்த ஒரே ஒரு சம்பவத்தை வைத்து முடிவிற்கு வருகிறோம்.
          அவர்களும் காலம் முழுதும் அவர்களுக்குக் கீழ்ப்படிவாய் இருந்ததையோ இப்போது தோளுக்கு மேல் வளர்ந்திருப்பதையோ உலக அறிவுகளோடு மனம் பக்குவப்பட்டிருப்பதையோ யோசிப்பதில்லை.
            மாறாக... மனப்பாதிப்புகளைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை.
நினைப்பதேயில்லை.மனங்கள் கொஞ்சம் தணிந்து ஆறிய பிறகாவது ஏன்...என்ன ஆயிற்று உங்களுக்கு? இப்படியெல்லாம் கோபப்படவே மாட்டீர்கள்! இப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லவே மாட்டீர்களே?’என்று கேட்கும் மனநிலை இருப்பதில்லை எமக்கு.எம் கவலையெல்லாம் நாம் அடைந்த பாதிப்பைப் பற்றி மட்டும்தான்.
           இதேநேரம் சின்ன வார்த்தையாய் இருந்தாலும் எங்களால் எங்களைப் பெற்று வளர்த்தவர்கள் மனம் பாதிக்கப்பட்டு இருப்பதைப் பற்றியும் கவலையேயில்லை.
           இப்படி நிலைமை மோசமாயிருக்க மனம் விட்டுக் கதைக்கவோ முன்பைப்போல நெருங்கிப் பழகவோ மனம் இணங்காமல் தள்ளி இருத்தலே நல்லதென மனம் ஒதுங்குவது சரியாகுமா.இத்தனை கால அன்பிற்கும் இது எப்படி ஒரு முடிவாகும்!
           இந்த இடத்தில்தான் கவனமாக இருத்தல் நல்லது.உறவுகள் பிளவாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.என் அனுபவமும் கூட.எதையும் பெரிதுபடுத்தாமல் அவர்கல் வயதில் பெரியவர்கள்.பேசவோ திட்டவோ உரிமை இருப்பதாய் நினைத்துக்கொண்டு அவர்களை சுகநலம் விசாரித்துப்பாருங்கள்.அழுதேவிடுவார்கள்.
           இதில் நன்மைகளும் உண்டு.அவர்களே அவர்கள் தங்கள் பிழையை உணர்ந்து தவிப்பார்கள்.தாங்கள் மனம் நோகப் பேசியும் திரும்பவும் தங்களைத் தேடி வருவதும் தங்கள் மேல் அக்கறைப் படுவதும் இன்னும் இன்னும் அன்பைக் கூட்டும்.மனதை இளக வைக்கும்.
          இதைவிட நாங்களும் உன் மனம் நோகப் பேசிவிட்டோம் இனி இப்படி ஏதும் வராது என தங்கள் மனம் விட்டுக் கதைத்து இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டு அன்பை இன்னும் இருமடங்காக்கி நிலைமையை இலேசாக்கிவிடும்.
          இப்படியான நல்ல அணுகுமுறைகள் இருக்க நத்தையாய் உள்ளிழுத்துக் கொள்வதும் தொட்டால் சிணுங்கியாய்ச் சுருங்கிக் கொள்வதும் உண்மையான அன்பின் அடையாளங்கள் அல்ல!உங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் வாழ்வில் நிச்சயம் இருக்கும்.பகிர்ந்துகொள்ளுங்கள்.நிச்சயம் எல்லோருக்குமே பயன்படும் !
 

11/17/2010

தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் -2


   தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம்  என்ற தலைப்பில், ஸ்ட்ராடெஜி அண்ட் பிசினெஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில், இன்னும் பத்தாண்டுகளுக்காவது நீடித்து நிற்கக் கூடியதான மிகச் சிறந்த கருத்துக்கள் என்று ஒரு பத்துக் கருத்துக்களின் பட்டியலில், இந்த முதல் ஐந்தை முந்தைய பதிவு.. பார்த்திருக்கிறோம்! இந்தக் கட்டுரையே
2005 இல் வெளி வந்தது தான் என்றாலும் இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதனாலேயே அதன் கருத்தை வைத்து எழுதப் பட்ட பதிவு அது. அந்த முதல் காரணங்கள்!
1. Execution
2. The Learning Organization
3. Corporate Values
4. Customer Relationship Management.
5. Disruptive Technology


இந்த ஐந்தாவதான டிஸ்ரப்டிவ் டெக்னாலஜி --- Disruptive Innovation! இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் அதற்கான சுட்டி  லிங்க் இருந்ததைப் பார்த்து, அவர் சொன்னதைப் படித்திருப்பீர்கள்  என்று நம்புகிறேன்.

ஒரு சின்னக் கதையைப் பார்ப்போம்!


1904 இல் அமெரிக்காவில் மிசெளரி மாநிலத்தில் செயின்ட் லூயி என்ற இடத்தில் ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருந்த சமயம். ஒரு கடையில் ஐஸ் க்ரீம் விற்பனை நடந்து கொண்டிருந்தது. அடுத்த கடையில்,. சோளமாவினால் செய்யப் பட்ட வா ஃபர்கள் தயாரிக்கிற கடை ஒன்று.ஐஸ்க்ரீம் விற்பனை செய்கிற கடையில் ஐஸ்க்ரீம் வைத்துக் கொடுக்கிற கண்ணாடிக் கோப்பைகள் தீர்ந்துபோய்விட்டது. பக்கத்துக் கடையில் ஏதாவது செய்து தர முடியுமா என்று கேட்டதில் உருவானது தான் இன்றைக்கும் மிகப் பிரபலமாக இருக்கும் கோன் ஐஸ் க்ரீம்! இந்தக் கோன்களின் வசதி என்னவென்றால், அப்படியே ஐஸ்க்ரீமோடு சேர்த்து சாப்பிட்டு விடலாம்! தனியாக சுவை என்று இல்லாவிட்டாலும், ஐஸ்க்ரீமோடு சேர்த்து சாப்பிடும் போது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதல்லவா! இன்றைக்கு நமக்குப் பழகிப் போய்விட்டபடியால், இந்த யோசனையில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாகத் தோன்றலாம். ஆனால், அறிமுகம் செய்யப்பட அந்த ஆரம்ப நாட்களில் இந்த கோன் ப்ளஸ் ஐஸ் க்ரீம் மிகப் பெரிய சக்சஸ் பார்முலாவாக இருந்தது. இன்றைக்கும், உலகமெங்கும் ஐஸ்க்ரீம் வர்த்தகத்தில் கோன் ஐஸ்க்ரீம் செக்மென்ட் குறிப்பிடத் தகுந்த சதவீதம் இருக்கிறது.(இதை நான் நெட்வொர்க் கம்பெனி மூலமாக)


தனித்தனி சம்பவங்கள், உதாரணங்களைப் பிடித்துக் கொண்டு சென்றால் 
தொடர்ந்தால் விவாதம் திசைமாறித் தான் போகும். இதை மனதில் வைத்துக் கொண்டு மீதம் உள்ள ஐந்தையும் பார்த்துவிடுவோமா?


ஆறாவதாக, தலைவர்களை உருவாக்குதல்.


இதுவரை நமக்குக் கற்றுக் கொடுக்கப் பட்டதெல்லாம் தனக்கொரு பாதை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப்பான் என்ற மாதிரித் தான். இந்த மாதிரி நடந்து நடந்து நிறுவனங்களும் சரி, நாடுகளும் சரி குட்டிச் சுவராகிப் போனது தான் மிச்சம். தலைமை தாங்க என்னவோ சிலருக்கு மட்டுமே தகுதி இருப்பதுபோலவும், அந்த மாதிரி சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் அமர்த்தி வைப்பது என்பது எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை, நாம் தேர்ந்தெடுத்து சட்டசபை, நாடாளுமன்றம் என்று மட்டுமில்லை, தம்மாத்தூண்டு வார்டு கவுன்சிலர் வரை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் இல்லையா? நான் ஆளப் பிறந்தவன், ஆத்திரப் பட மாட்டேன் டைப் ஆசாமிகள் எவருமே உண்மையில் இல்லை. அப்படிச் சொல்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை. எவரை வேண்டுமானாலும், தலைமைப் பொறுப்புக்களைச் சுமப்பதற்குத் தயார் செய்ய முடியும்.


தலைமைப் பண்பு என்பது உத்தரவு போட்டு, அதை நிறைவேற்றுகிறார்களா என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதல்ல என்பதைப் புரிந்து கொண்டால் போதும். தலைமை என்பது மேல்மட்டம் என்பதாக இல்லாமல், சேர்ந்தே செயல்படும் அங்கமாக, ஒரு குழுவின் உயிரோட்டமாக இருக்குமானால் தலைமைப் பண்பு என்பது-- பொறுப்பை ஏற்றுக் கொள்வது, பொறுப்புடன்
செயல் படுவது, தவறுகளுக்குக் காரணம் யார் என்பதைப் பார்த்துத் தலையைச் சீவுகிற கத்தியாக இல்லாமல், தவறை எப்படி சரி செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ளும் புத்தியாக இருப்பது என்று வரிசையாக பாசிடிவான நிறைய விஷயங்களை எல்லோரிடத்திலும் விதைக்கலாம், வளர்க்கலாம் என்பதும் விளங்கும். ஆக முதலில் பார்த்த ஐந்து காரணங்களையும் தொடர்ந்து பற்றிக் கொள்ள வேண்டுமென்றால், ஆறாவதான இந்தத் தலைமைப் பண்பை உருவாக்குதல் மிகவும் அவசியமானதாக ஆகிறது.


மேலாண்மை, தலைமை பற்றிய கண்ணோட்டங்கள் நிறையவே மாறியிருக்கின்றன. இந்த ஒரு கருத்தை மட்டும் நிறையக் கோணங்களில் இருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.


ஏழாவதாக நிறுவனத்தின் பண்புகள், மூலக் கூறுகள் அல்லது DNA


எந்தவொரு நிறுவனமும் சில அடிப்படைகளின் மீது தான் எழுப்பப்படுகிறது. அந்த அடிப்படைகள் அடிபட்டுப் போய்விடாமல், வலுவாக இருக்கின்றனவா என்ற சோதனையே பெரும்பாலான நிறுவனங்களில் நிகழ்வதில்லை. ஏன் தோற்கிறோம் என்பது புரியாமலேயே, தொடர்ந்து பழைய தவறுகளையே செய்து கொண்டு தோற்றுக் கொண்டு இருக்கிற ஒரு புள்ளி ராசா வங்கியைப் பற்றி இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால் அதன் தலைமை நிர்வாகியாக இருந்த ஒருவர், வங்கிக்குள் உள்சுற்றுக்கு வெளியிடப்படும் ஹவுஸ் மாகசினில் வெளிப்படையாகவே புலம்பினார். மற்ற வங்கிகளைக் காட்டிலும், வட்டி குறைவு, சேவைக் கட்டணங்கள் குறைவு, வாடிக்கையாளர் காலைப் பிடித்து சேவை செய்வதில் கூட முதலிடம் தான் அப்படியிருந்தும் நம்மால் ஏன் அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியவில்லை, ஏன் இருக்கிற வாடிக்கையாளர்களையுமே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று கேள்விகளை எழுப்பியிருந்தார். கேள்விகளைக் கேட்கத் தெரிந்த அளவுக்கு, விடை தேடத் தெரியவில்லை என்பதாலோ, அல்லது விடை தேடத் தயாராக இல்லை என்பதாலோ, அந்தப் பொதுத்துறை வங்கி இன்னமும் அதே திரிசங்கு சுவர்க்கத்தில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் கண் முன்னாலேயே பூதாகாரமாக இருந்தும் அவர்களுக்கு இன்றைக்கு வரை கண்ணில் படவில்லை!


Consistency! Continuity! Competency!  இப்போது Core Banking என்று நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டி தொழில்நுட்பத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். தொழில் நுட்பம் வந்தாயிற்று! தொழில் நுட்பம் தெரிந்து வேலை செய்கிறவர்கள் இருக்க வேண்டுமே! ஆக அந்த நாலாவது C யும் இல்லை!

அந்த வங்கியை நம்பி, வாடிக்கையாளர் எவரும் தங்களுடைய வங்கித் தேவைகளை முடிவு செய்துவிட முடியாது. வாடிக்கையாளர் சேவை என்பது, சமாதானமான வார்த்தைகளில் பூசி மெழுகப் படுகிற செயலற்ற தன்மை மட்டுமே என்ற நிலைமைதான் அந்த வங்கியில் இன்னமும் நீடிக்கிறது.


இந்த உதாரணத்தை மனதில் வைத்துக் கொண்டு, ஒரு நிறுவனம் ஜெயிப்பதற்குத் தேவையான மூலக் கூறுகளைக் கொண்டிருக்கிறதா என்பது கொஞ்சமாவது புரிந்திரிக்கவில்லை என்பது தான் என் எண்ணம்  .


எட்டாவதாக, காலத்தோடு ஒட்டிய மாற்றத்திற்கான செயல்திட்டம்!
          மாற்றங்கள் தவிர்க்கப் பட முடியாதவைதான். நிறுவனங்களை பொறுத்தவரை மாற்றத்திற்குத் தயாராவதற்கே ஒரு செயல் திட்டம் இருந்தாக வேண்டும்.அப்படி செயல் திட்டமில்லாமல் செய்யப் படுகிற மாற்றங்கள், தலை நகரை மாற்றிய துக்ளக் தர்பார் மாதிரி, நோக்கம் என்னவோ சிறந்தது தான் ஆனாலும் திட்டமிடாமல் செய்யப்பட்டபோது ஏராளமான மக்களைக் காவு கொண்டதாகிப் போன மாதிரி ஆகிவிடக் கூடும். இந்த மாற்றங்களுக்கான செயல்திட்டத்தை வகுக்கும்போது, உத்தேசிக்கும் மாற்றங்கள் ஸ்தாபனத்தில் பணியாற்றும் மனிதர்களைப் பாதிக்கக் கூடியவை என்பதால், அவர்களுக்குப் புரிகிற மாதிரி, அவர்களைப் புதிய சூழ்நிலைக்குத் தயார் செய்கிற மாதிரிப் பக்குவமாகக் கையாள்வது என்பதில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு முதலில் தெளிவு வேண்டும். மாற்றங்கள், தலைமையில் இருந்து ஆரம்பமாக வேண்டும். அப்படி மாற்றங்களைப் படிப்படியாக நிறுவனத்தின் ஒவ்வொரு தளத்துக்கும் விரிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தனிநபர்/ஊழியருக்கும், மாற்றங்கள் எப்படி அவசியமானவை, எந்த அளவுக்குத் தயார் செய்து கொள்ளவேண்டும், மாற்றங்களால் சாதிக்க விரும்புவது என்ன என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இப்படி மாற்றங்களை நிர்வாகம் செய்வதில், அமுல்படுத்துவதிலேயே நிறையப் பேச முடியும். Change Management என்று கூகிளில் தேடிப் பாருங்கள்.

ஒன்பதாவது கருத்தாக, சிக்கல்களைப் புரிந்து கொள்வது, நிர்வகிப்பது.


ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள், அதில் எதிர்பார்க்கும் விளைவுகள் என்பவை கொஞ்சம் சிக்கலானவை தான். இரண்டும் இணைந்தும் கூட்டினால் நான்கு என்று தெளிவான விடை கணிதத்தில் கிடைப்பது போல, ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்யும்போது கிடைத்துவிடுவதில்லை. தொடர்ந்து கற்றுக் கொள்ளும் நிறுவனமாக, செயல்படுத்துவதில் தெளிவான நிறுவனமாக, அப்புறம் disruptive technology என்று பார்த்தோம் இல்லையா, அப்படிக் கிடைக்கிற சின்னச் சின்ன வாய்ப்புக்களைக் கூட சமயோசிதமாகப் பயன்படுத்தத் தெரிந்த நிறுவனமாக இருந்தால், எப்படிப்பட்ட சிக்கலான தருணத்தையும் ஈடுகொடுத்து வெல்ல முடியும்.

இந்த ஒன்பதாவது கருத்தில்,காம்ப்லெக்சிடி தியரி என்று கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கணிதம் கலந்த ஒரு முறையை வைத்து நிர்வாகம் செயல்படுவதை ஒரு முக்கியமான கருத்தாக முன்வைக்கிறார்கள். Complexity Theory என்று சொல்லப்படுகிற இந்த முறை உண்மையிலேயே நம்பத் தகுந்தது தானா, நீடித்து நிற்கக் கூடியதுதானா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அல்லது, இதன் பயன்பாட்டைக் காலம் தான் சரி அல்லது தவறு எனத் தீர்மானிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

பத்தாவதாக, Lean Thinking!  ஒரு நிறுவனம், ஊளைச் சதையைக் குறைத்து, கட்டுமஸ்தாக உடலை வைத்திருப்பது போல, விரையங்களை முழுமையாகத் தவிர்ப்பது, தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் தவறுகள் ஆரம்ப நிலையிலேயே களையப் படுவது, ஊழியர்களின் முழுத் திறமையையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.


இந்த ஒரு விஷயம் இரண்டாண்டுகளுக்கு முன்னால் வரவேற்கப்பட்டது போல இன்றைக்கு இல்லை. ஒரு கார்  நிறுவனம், தங்களுடைய நிறுவனக் கலாச்சாரமாக வைத்திருந்த ஒரு தொழில், நிறுவனப் பண்பு நேற்று வரை ஆதர்சமாகக் கொண்டாடப் பட்டது, அதைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க முடியாமல் தோற்றுப்போன மேற்கத்திய குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள், இந்த நிறுவனப் பண்பையே இன்றைக்குக் கேலி செய்யப் படுகிற ஒன்றாக மாற்றிவிட்ட சோகத்தையும்,  அந்த கார் நிறுவனம்  பிரச்சினையைத் தொட்டு இந்தப் பக்கங்களில் முன்னரே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.


1. Execution
2. The Learning Organization
3. Corporate Values
4. Customer Relationship Management.
5. Disruptive Technology
6. Leadership Development
7. Organaisational DNA
8. Strategy based Transformation
9. Complexity Theory
10.Lean Thinking


இந்தப் பத்தும் தான் இன்னும் கொஞ்ச காலத்துக்கு நீடித்திருக்கக் கூடிய கருத்துக்களாக, சொல்லப் படுகின்றன.

               நன்றி நண்பர்களே ! என் எழுத்துக்கும் ,சிந்தனைக்கும்
                   சரியான  பதிவாக இதை நான் எடுத்துகொள்வேன் ...

                     என்னுடன் இந்த பதிவு எழுத துணை நின்றவர்கள்
                                 திரு சங்கர் ,சிவகுமார்,மற்றும்  கூகுளே  

11/16/2010

இதுதான் காதலா?

என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா?


மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டுக் கொண்டால் - என்
அகம் வதைபடுகிறதே
அதுதான் காதலா?


இமைகளின் இயக்கம்
நிறுத்தி - நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?


அருகினில் நீ
இல்லாத போதும்
உன்னுடன் உறவாடி
உரையாடி மகிழ்கிறேனே
அதுதான் காதலா?


எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா?


யார் கேட்டும்
இல்லையென்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்கத் தோன்றுமே
அதுதான் காதலா?


பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு - நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே...
அதுதான் காதலா?


ஊரே நம்முறவை
காதலென்ற போதும்
நீமட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களென்று'...


எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...!

11/15/2010

தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம்.........




தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் குறித்துப் பதிவெழுதி பழக ரொம்ப ஆசை ....... ஒரு பொதுவான நோக்கத்தில் சேருகிற குழு ஜெயிப்பதற்கும், தோற்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இங்கே குழு என்று சொல்லும்போது, பொதுவான நோக்கத்தில் விருப்பத்தோடு பங்கு கொள்கிறவர்கள் என்று தான் அர்த்தம்!
               இங்கே, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில், கோஷ்டி, கோஷ்டிககுள் கோஷ்டி, அத்தனைக்கும் ஒரே பொது நோக்கம் என்ன என்றால், அடுத்த கோஷ்டியை சமயம் பார்த்துக் காலை வாருவது மட்டும் தான் என்ற கலாசாரக் கருமாந்திரத்தை ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்வதற்காக மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! காங்கிரஸ் கட்சியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளக் வேண்டிய ஒரே பாடம், ஒரு தலைமை, ஒரு பொது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறவர்கள் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது ஒன்று மட்டும் தான்! தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் என்று பேசுகிற இடத்தில் ஒரு கட்சியைப் பற்றி, அரசியலைப் பற்றிய பேச்சு ஏன் வந்தது என்று கேட்டால், இங்கே இந்தியச் சூழ்நிலையில் அரசியல் என்பது அங்கும் ,இங்கும் , எங்கும் புகுந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதால் தான்! தவிர்த்து விட்டுப் பேசுவதே கொஞ்சம் அதீதக் கற்பனையாக மட்டுமே நிற்கும்!
        ஸ்ட்ராடஜி அண்ட் பிசினஸ் தளத்தில், இன்னும் ஒரு பத்து வருடங்களுக்காவது நீடித்து நிற்கும் சில ஐடியாக்களைப் பட்டியலிட்டிருந்தது. ஒரு பத்துக் கருத்துக்கள் அப்படிப் பட்டியலிடப் பட்டிருந்ததைப் படித்து விட்டுக் கொஞ்சம் யோசிக்கலாமே! நம்முடைய நடைமுறை வாழ்க்கையில், நிறுவனத்தில், தொழிலில் இவை எப்படிப் பொருந்தும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு எனக்குள் எழுத
தோன்றியவை  !

             ஒரு உதாரணத்துக்காக எனக்குத் தெரிந்த வங்கித் துறையையே எடுத்துக் கொண்டு இந்தக் கருத்துக்களை உரைத்துப் பார்த்து, சரிதானா இல்லையா என்று சொல்ல முயற்சிக்கிறேன். எனக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்த அபிப்பிராயங்களைச் சொல்ல முடிகிறது. தவறு ஏதேனும் தெரிய வந்து, சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்ளவும் தயாராக உள்ளேன்.

முதலாவதாக, செயல்படுத்தும்விதம்!
           எவ்வளவு சிறந்த செயல்திட்டமாக இருந்தாலும் சரி, அது வெற்றி பெறுவது, அதை எப்படி நீங்கள் நடைமுறைப் படுத்துகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. மிகச் சிறந்த கன்செப்ட் கூட, மோசமான நடைமுறைப் படுத்துதலினால், கேலிக்குரியதாகப் போய்விடும்!
         பொதுத்துறை வங்கியான பின்னாலும் கூட, கொங்கணி வங்கி என்றே இன்னமும் அறியப்படும் புள்ளிராசா வங்கியில் கோர் பாங்கிங் வந்தாயிற்று! ஆனாலும் இன்னமும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், பின்தங்கியே இருக்கிறது. மிகச் சிறந்த கோர் பாங்கிங் பாக்கேஜ் தான்! ஆனால், முதல் கோளாறு, தன்னுடைய வாடிக்கையாளர்களை அறிந்து வைத்திருக்கும் விதத்தில் இருந்து தொடங்குகிறது.கோர் பாங்கிங்கில் இருக்கும் மிக அருமையான அம்சமே, வாடிக்கையாளரைப் பற்றிய முழு விவரங்கள், அதை வைத்துக் கொண்டு அவர் கேட்கும் வசதிகளை வழங்குவதில் உடனடியாக முடிவெடுக்கும் தொழில்நுட்பம் தான்! இந்த வங்கியில், வாடிக்கையாளருடைய விலாசம், தொலை பேசி எண், என்ன வேலை செய்கிறார் என்ற விவரங்களே முழுமையாக இருக்காது. வாடிக்கையாளர்களுடைய கையெழுத்தைப் புதுப்பிப்பதும் கூட மாமாங்கத்துக்கு ஒரு தரம், அல்லது இரண்டு மாமாங்கத்துக்கொரு தரம் தான்! இந்த வங்கியின் ஒரு கிளையில், பலசமயம் ஏடிஎம் இயங்காது ! என்ன காரணமென்று விசாரித்துப் பார்த்தால், மெஷினுக்குப் பணத்தை லோட் செய்வது யார் என்பதில் அந்தக் கிளையில் இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்குள் இருக்கும் பனிப்போர்! ஏடிஎம் வரவுசெலவை சரிபார்ப்பது எப்படி என்று கூட அந்த இரண்டு பேருக்குத் தெரியாது என்பது கொசுறுத் தகவல்!


இரண்டாவதாக, தொடர்ந்து கற்றுக்கொள்ளும் நிறுவனமாக இருப்பது!


            பெரும்பாலான பிரச்சினைகள், கற்றுக் கொள்வது என்பது தொடர்ச்சியான ஒன்று என்பதை மறந்து விடுவதால் எழுவது தான்! எவ்வளவு கோளாறுகள் இருந்தாலுமே, படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு செயல்படுகிற தன்மை தலைமையில் இருந்து கடைசி ஊழியர் வரை இருக்குமேயானால், அத்தகைய நிறுவனத்தை வெல்வதற்கு எவராலும் முடியாது.



புள்ளிராசா வங்கியின் மிகப் பெரிய பலவீனமே, அது கற்றுக் கொள்வதை ஒரு பண்பாகக் கொண்டிருக்கும் நிறுவனம் அல்ல! பொறுப்பைத் தட்டிக் கழிப்பது, ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்சாக இருக்க மட்டுமே தெரிந்த பல்லக்குத் தூக்கிகள் அல்லது ராஜ விசுவாசிகள், இது தான் அந்த வங்கியின் நீண்ட நாள் சரித்திரம்! Professionalism என்று சொல்கிற தேர்ந்த நிர்வாகம், தலைமை இருந்ததே இல்லை. தவறிப்போய் இரண்டு சந்தர்ப்பங்களில் மானேஜிங் டைரக்டராக வந்தவர்கள் ஒரு தொழில் முறை சார்ந்த முடிவுகளை மேற்கொண்ட போது அவர்கள் பாடு திண்டாட்டமாகப் போனது! 1980 களில் ஒருவர் வந்து, decentralisation என்று முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பரவலாக்க முயன்றார்! அடுத்தவனுக்குப் பல்லக்குத் தூக்கியே, முடிவெடுப்பதை அடுத்தவனிடம் விட்டே ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த அந்த வங்கியின் அதிகாரிகளிடம் வரவேற்பில்லை.


நான்கு ஜெனரல் மானஜர்கள்! ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி விசுவாசி கோஷ்டிகள்! அதில் பிரதானமான இரண்டு, தலைமை நிர்வாகிக்கு எதிராகக் கலகக் கொடிதூக்கி, ஊழியர்கள் சங்கம் ஒன்றைத் தூண்டிவிட்டு, தலைமை நிர்வாகிக்கு அரசியல் பின்னணியோடு ஆப்பு வைத்தது. இருபது வருடம் கழித்து இன்னொருவர் வந்தார்! ஜெனரல் மானேஜர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்! கீழே கையை வைக்கவில்லை, தலைமையில் இருந்து கடுமையான நடவடிக்கைகள் ஆரம்பித்துக் கடைசிவரை ஒரு ஒழுங்குக்கு வந்து வங்கி நிஜமாகவே சரிவில் இருந்து மீண்ட நேரம், இன்னொரு ஊழியர் சங்கம் கலகக் கொடி தூக்கியது! அரசியல் பின்னணி, தலைமை நிர்வாகியை இன்னொரு வங்கிக்கு மாற வைத்தது! புள்ளிராசாவுக்குப் புள்ளி கூடிக் கொண்டே வந்தது தான் மிச்சம்!


மூன்றாவதாக, நிறுவனப் பண்புகள்!


எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அதன் நோக்கங்கள் தெளிவாக வரையறுக்கப் பட வேண்டும்! அந்த நோக்கங்களை எப்படி அடையப் போகிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். ஊழியர்கள், வாடிக்கையாளர்களுடைய நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனம் இருக்க வேண்டும். கார்பரேட் பண்புகள் என்பது வளருகிற எந்த ஒரு நிறுவனத்திற்கும் மிக முக்கியமானது.




புள்ளி ராசா வங்கிக் கிளைகளில் மிஷன் ஸ்டேட்மென்ட், சிடிசன் சார்டர் இப்படிப் பல போஸ்டர்கள் தொங்கும்! அதற்கு என்ன அர்த்தம், பின்னணி என்பது அங்கே பணி புரியும் எவருக்காவது சொல்லப் பட்டிருக்குமா, புரிந்திருக்குமா என்பது சந்தேகமே! Six Sigma, TQM, இப்படி நிறுவனங்களில் நிறைய மாறுதல்கள் வந்து கொண்டிருந்தன. ஆரம்ப காலங்களில் மாற்றங்களைப் புரிந்துகொண்ட செயல்படுத்த முனைந்த இந்திய நிறுவனங்கள் மிகக் குறைவு தான்! பின்னால், இந்த கன்செப்டுகளைப் பேசுவதே ஒரு ஃபேஷனாகிப் போனது! புள்ளி ராசா வங்கியும் கூட அப்படித்தான்! போஸ்டர்களில் இருந்த வாசகங்கள், அரசியல்வாதிகள் தரும் வாக்குறுதிகளைப் போலவே வெறும் வார்த்தைகள் தான்!


நான்காவதாக, வாடிக்கையாளருடனான உறவு முறையை நிர்வகிப்பது!


முதலில் வாடிக்கையாளர் யார், அவர் எப்படிப்பட்டவராக இருப்பதை நிறுவனம் விரும்புகிறது என்பதைப் பொறுத்தே அந்த நிறுவனம் வாடிக்கையாளருடனான உறவு நீடித்திருப்பதா, அல்லது தற்காலிகமானதா, முறித்துக் கொள்ள வேண்டியதா என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கும்! ஒரு நல்ல நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடனான உறவு முறை நீண்ட காலத்துக்கு நீடிப்பதையே விரும்பும்! உறவின் தன்மையை, நிறுவனமும் வாடிக்கையாளரும் பரஸ்பரம் கொண்டிருக்கும் நம்பிக்கை, பயன்பாடு, ஆதாயம் இந்த மூன்றுமே தீர்மானிப்பதாக இருக்கும்.




The Power of Ultimate Six Sigma நூலில் அதன் ஆசிரியர் கெகி ஆர் போடே வாடிக்கையாளர்களை, நிறுவனத்திற்கும் அவர்களுக்குமிடையிலான உறவை, பரஸ்பர ஆதாயங்களின் அடிப்படையில், பிளாட்டினம், தங்கம், வெள்ளி, செம்பு, தகரம் எனத் தரம் பிரித்து, வாடிக்கையாளர்களுடனான உறவை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று விவரித்திருப்பதை, விரிவாக பார்க்கலாம். சுருக்கமாக பார்ப்பதற்கு , ஒரு வங்கியையே எடுத்துக் கொள்வோம்.




ஒரு வங்கியின் குறிப்பிட்ட ஒரு கிளையில் நான்காயிரம் வாடிக்கையாளர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். எண்பது:இருபது என்ற பரேடோ கோட்பாடின்படி, மிகக் குறைந்த சதவீதம் தான், ஒரு வரவு செலவின் பெரிய ஆதாயத்தைத் தருவதாக இருக்கும். அதையே தலைகீழாகப் பார்த்தால் எண்பது சதவீதப் பேரிடமிருந்து அந்த வங்கிக்கு எந்தப் பயனுமில்லை. ஒரு வாடிக்கையாளர், அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் பற்று இருக்கிறது! அவருடைய வரவுசெலவில் வங்கி வட்டியாக, வருடத்திற்குக் குறைந்தபட்சம், பதினைந்து லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது. இதர இனங்களில், கமிஷன், எக்ஸ்சேஞ் இனங்களில் இன்னும் ஒரு ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம்.


ஒரு சிறிய கிளை, அதன் மொத்த வருவாயே ஆண்டுக்கு ஒருகோடி ரூபாய்க்கும் கீழ் தான் என்ற நிலையில், இந்த வாடிக்கையாளர், அந்தக் கிளையின் மிக முக்கியமான வாடிக்கையாளராக, மிகக் கவனமாகக் கையாளப்படவேண்டிய, நீண்ட கால உறவுக்குத் தகுதியானவராக ஆகிறார்.


இன்னொருவர், அவரும் வங்கியில் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். மாதச் சம்பளம் பெறுகிறவர், சம்பளத்தில் மாதா மாதம் பிடித்தம் செய்கிற விதமாக! இவருக்கு இரண்டு மாதம் சம்பளப் பிடித்தம் ஆகவில்லை, கோர்பான்கிங்கில் பணம் இருப்பு இருக்கும் போது பாக்கி முழுதையும் பிடித்தம் செய்து விடுகிறமாதிரி ஏற்பாடு, தான் ஒப்புக் கொண்டபடி தவணையைக் கட்டவில்லை, அது பிடித்தமாகி இருக்கிறது என்பதெல்லாம் இவருக்கு முக்கியமில்லை, இப்போது மொத்தமாகப் பிடித்தது அவருக்குக் கஷ்டமாக இருக்கிறது. கத்த ஆரம்பித்து விடுகிறார்.


இன்னொருத்தர், செக் புக் வாங்கியிருக்கிறார், மினிமம் பாலன்ஸ் குறைகிறது, அதற்குக் கட்டணம் விதிக்கப் படுகிறது. அவர், மினிமம் பாலன்ஸ் மாதிரி விஷயங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை, அவரும் கத்த ஆரம்பிக்கிறார். இன்னொருவர், அவருக்கு ஒரு நாளைக்குப் பத்துத் தரம் பாஸ் புக் என்ட்ரி பண்ணியே ஆக வேண்டும்! கிளியரிங்கில் செக் வந்ததா, என்ன செக் வந்தது என்று அவருக்கு போன் செய்ய வேண்டும், அவர் இதோ கட்டுகிறேன் என்று சொல்வார், மாலை காஷ் கவுண்டரை மூடுகிற வரை, மூன்று நான்கு இன்ஸ்டால்மெண்டில் பணம் கட்டுவார், அப்போதும் கூட செக்கிற்குப் போதாது. மானேஜர் தற்காலிகமாக ஓவர்ட்ராப்ட் அனுமதிக்க வேண்டும்! இது தினசரி நடக்கும் கூத்து.


சுருக்கமாகச் சொன்னால், பலருடைய வங்கி வரவுசெலவுகளைக் கவனித்துப் பார்த்தால், அவை ஒன்றும் போற்றிப் பாதுகாத்துக் கொள்ளப் பட வேண்டிய லட்சிய உறவுகள் இல்லை என்பது தெரியும்! வாடிக்கையாளர் சேவை என்பது, ஒருவழிப்பாதை அல்ல என்பதே இங்கே நிறையப்பேருக்குப் புரிவதில்லை! அல்லது, நம்மைப் பற்றி நாம் மிகப் பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதை, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியும் அப்படியே அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சரியல்லவே!


கெகி ஆர் போடே சொல்வது இது தான்! நல்ல வாடிக்கையாளர் சேவை என்பது, வாடிக்கையாளரைத் தரம்பிரித்துக் கழிக்க வேண்டியவை எவை, காப்பாற்றிக் கொள்ள வேண்டியவை எவை என்பதைத் தெளிவாக வரையறுக்கும்போது, செயல்படுத்தும் போதுதான் கிடைக்குமென்கிறார்!
Customer Relational Management என்பது நிச்சயமாக எல்லாவற்றையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது அல்ல!
Win-Win என்று இரு தரப்புமே ஜெயிக்கிற மாதிரி இருப்பதில் தான் வெற்றிகரமான CRM இருக்கிறது!




ஐந்தாவதாக, தொழில்நுட்பமே பெரும் சவாலாக!
சவால்களைச் சமாளித்து முன்னேறிச் செல்லப் பெரும் ஊக்கமாக!


தொழில்நுட்பம் என்பது நிச்சயமாக பெரும் முன்னேற்றத்துக்கு அடிப்படை என்பதெல்லாம் உண்மைதான்! புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது பெரும்பாலான நிறுவனங்கள் சில அடிப்படையான தவறுகளைச் செய்கின்றன. முதலாவதாக, அவை தற்போதைய வாடிக்கையாளர்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுத்தப் படுகின்றன. அப்படி தற்போதைய வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு செயல்படுத்துவதாக நினைப்பதில் கூட, தங்களுடைய வாடிக்கையாளர்களை புரிந்து வைத்திருப்பது சரிதானா என்று சோதித்துப் பார்க்கக் கூட முயற்சி இருப்பதில்லை.


நேற்றுவரை சௌகரியமாகப் பழகிப்போன மனநிலையில் இருந்து விடுபடுவதற்கு, வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்குத் தயாராக, அதற்குத்தகுந்தபடி நடைமுறைகளைப் புதிதாக வடிவமைத்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முந்திக் கொள்ளும் நிறுவனங்கள் மட்டுமே ஜெயிக்கின்றன!

Disruptive Innovation இங்கே இந்த வார்த்தையின் பொருளென்ன, இது எப்படிச் செயல்படுகிறது என்பதின் சிறு விளக்கமும், ஒரு வீடியோவும்!




இது வரை ஐந்து காரணிகளைப் பார்த்தோம்!


மீதமுள்ள ஐந்தை அடுத்துப் பார்க்கலாம்.....!