தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/25/2010

எஸ் எம் எஸ் ஆபத்துக்கள்.




என்னுடைய இரண்டு அலைபேசி எண்களுக்கு, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து எஸ் எம் எஸ், அதிகபட்சம் இருபது எஸ் எம் எஸ் என்கிற எண்ணிக்கையில் குறுஞ்செய்திகள் வந்து குவிகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் அரும் செய்திகள் என்று பார்த்தால், ஒரு வாரத்தில் மூன்றோ நான்கோ தேறலாம். மற்றவை உபயோகமில்லாத செய்திகள். சில குறுஞ்செய்திகள் நாம் எப்பொழுதோ வெப் சைட்டில் பதிந்துகொண்டதால் வருபவை. அவைகளுக்கு எஸ் எஸ் எஸ் என்று பெயர் இடலாம் (சொந்த செலவில் சூனியம்)
என் உறவினர் ஒருவர் தவறாமல் (அவர்) விழித்திருக்கும் நேரங்களில் இரண்டு மணிக்கு ஒரு எஸ் எம் எஸ் என்று அனுப்புவார். எஸ் எம் எஸ் செய்திகளை, பொதுவாக கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.

# காதல் நட்பு - இவற்றின் மேன்மை உயர்வு குறித்து.
# புதிர்க் கேள்விகள்.
# புதிர்க் கணக்குகள்.
# பொது அறிவுத் துகள்கள்.
# ஜோக்குகள். (A + B + C)
# அறிஞர்கள் அன்று கூறியவை.
# நடப்பு செய்திகள்.
சில எஸ் எம் எஸ் மிகவும் பயனுள்ளவை - என் தம்பியிடமிருந்து முன்பு ஒருநாள் வாட்ச் என் டி டி வி என்று எஸ் எம் எஸ் வந்தது. அப்பொழுதுதான் நான் உடனே டீ வி பார்த்து, மும்பை தாக்குதல் தொடர்பான நேரடி கவரஜே பார்த்தேன். சில சமயங்களில் முக்கியமான இசை நிகழ்ச்சி டி வி இல் ஒளிபரப்பாகும்போது கூட, சகோதரர் எஸ் எம் எஸ் அனுப்பியது உண்டு.

நான் எஸ் எம் எஸ் அனுப்பியது என்று பார்த்தால் ஒரு மாதத்தில் இருபது
இருந்தால் அதிகம். ஆனால் ஜிமெயில் அல்லது யாஹூ மெசெஞ்சரில் உள்ள எஸ் எம் எஸ் அனுப்பும் வசதியை அடிக்கடிப் பயன்படுத்திக்கொள்வேன்.

ஒருமுறை எனக்கு எஸ் எம் எஸ் செய்த உறவினரை, தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர் அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து பேச ஆரம்பித்தேன். அவர் அப்படியா, அப்படியா எனத் தொடர்ந்து ஆச்சரியமாக விசாரித்துவிட்டு, இறுதியில் ஓர் உண்மையைக் கூறினார். அவருக்கு வேறு யாரோ அனுப்பிய செய்தியாம். அதைப் படித்துவிட்டு ஒன்றும் புரியாததால் (அந்த உறவினருக்கு ஆங்கிலம் கொஞ்சம் அரைகுறை) அதை வழக்கம்போல் எல்லோருக்கும் பார்வார்ட் பண்ணினாராம்.

உபயோகமில்லாத செய்திகளை அனுப்புபவர்களை நான் வேண்டிக்கொள்வதெல்லாம் காசு செலவழித்து எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பாதீர்கள். அதற்கு பதில் எல்லோரும், அதற்காகும் செலவை, ஓர் உண்டியலில் போட்டு வைத்திருங்கள். என்னை எப்பொழுதாவது நேரில் பார்க்கும்பொழுது, சேர்த்துவைத்திருக்கும் பைசாவை என்னிடம் காட்டுங்கள். நான் மேற்கொண்டு அதே அளவுக்கு பைசா உங்களுக்குக் கொடுக்கிறேன். இவ்வாறு செய்வதால், அனாவசியமாக ஏதோ ஒரு செல் கம்பெனி சம்பாதிக்கின்ற பைசா, உங்க நேரம், என்னுடைய நேரம் எல்லாமே நிறைய மிச்சமாகும். மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் உந்துதல் உள்ளவர்கள் இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

நம் வாசகர்கள் எல்லோருக்கும் ஒரு செய்தி சொல்கின்றேன். ஒருவர் நேற்று எனக்கு அனுப்பியிருந்த செய்தி ஒன்றில், தெருவில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் யாரையாவது பார்த்தால், உடனே ------- என்ற செல்லுக்கு சொல்லுங்கள். அவர்கள் அந்த சிறுவரின் படிப்புக்கு ஏற்பாடு செய்வார்கள். என்று இருந்தது. சும்மா இதைப் பற்றி கொஞ்சம் கூகிளிட்டுப் பார்ப்போமே என்று பார்க்கும் பொழுது, இந்த செல் எண்ணை தொடர்பு கொள்ளச் சொல்லி - ஒரு பிரபல இரண்டாம் கட்ட நடிகரின் இரசிகர் என்று கூறிக்கொண்டு, ஒருவர் இரண்டாயிரத்து ஏழாம் வருடம் - அந்த நடிகரின் இரசிகர் மன்ற பெயர் கொண்ட டாட் காம் வலைப் பதிவில் தன பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அந்த எண்ணைத் தொடர்புகொண்டு எதுவும் விசாரிக்க முடியவில்லை. வேறு எங்கோ ரி-டைரக்ட் ஆகிறது. இதில் மேற்கொண்டு மர்மங்கள் ஏதாவது இருக்குமா அல்லது இருக்காதா என்று தெரியவில்லை. பெயர் குறிப்பிடாமல், ஏதாவது செல் எண் மட்டும் குறிப்பிடப்பட்டு வருகின்ற எண்களை யாரும் தொடர்புகொள்ளாமல் இருப்பது (குறிப்பாக பெண்கள்) மிகவும் நல்லது.

சென்ற வருடம் எனக்கு வந்த போலீஸ் கமிசனர் ஆபீஸ் எஸ் எம் எஸ் ஒன்று, சென்னை நகர போலீஸ் மொபைல் எண் 9500099100 என்பதைத் தொடர்புகொண்டு புகார் எதுவும் கொடுக்கலாம் என்று கூறியிருந்தது. நமக்குத் தெரிந்த யாராவது இந்த எண்ணைப் பயன்படுத்தி இருப்பார்களா என்று அறிய ஆவலாக உள்ளது.

இறுதியாக நான் கூறுவது இவைகள்தாம்:
$ அனாவசிய எஸ் எம் எஸ் யாருக்கும் அனுப்பாதீர்கள். நேரமும், செலவும் மிச்சமாகும்.
$ பெயர் இல்லாத செல் எண் மட்டும் எங்கேயாவது பார்த்தால் அதைத் தொடர்பு கொள்ளாதீர்கள்.
$ உள்ளூர் போலீஸ் மொபைல் எண் எப்பொழுதும் கை(பேசி) வசம் வைத்திருங்கள்.
$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் கொடுக்காதீர்கள்.

முடிக்கும் முன்பு வாசகர்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வியோடு முடிக்கிறேன். பெரும்பாலான அலை பேசிகளில், குறுஞ்செய்தி வரும்பொழுது, கீழ்க்கண்டவகையில் சத்தம் (டிஃபால்ட்) செட்டிங் இருக்கும்.
மூன்று குறுகிய சத்தம் (பிப் பிப் பிப்)
இரண்டு நீண்ட சத்தம் (பீப் பீப்)
திரும்பவும் மூன்று குறுகிய சத்தம் (பிப் பிப் பிப்)
இப்படி கேட்கும் : " பிப் பிப் பிப் --- பீப் பீப் --- பிப் பிப் பிப்."
இதன் விளக்கம் என்ன? யாருக்காவது தெரியுமா?

2/24/2010

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர் சச்சின்!





















குவாலியரில் சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக 200 ரன்களை எட்டி வரலாறு படைத்தார்.

இதற்கு முன் இந்த சாதனையை வைத்திருந்த சயீத் அன்வர் இந்தியாவிற்கு எதிராக சுதந்திரக் கோப்பை போட்டியில் சென்னையில் 194 ரன்கள் எடுத்ததும், ஜிம்பாப்வே வீரர் 2009ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக எடுத்த 194 ரன்களும் உலக சாதனையாக இருந்து வந்தது.

இன்று அந்த சாதனைகளை சச்சின் முறியடித்தார். 40 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 3 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 60 ஓவர்களாக இருந்தபோதும் இந்த சாதனை நிகழ்த்தப்படவில்லை.

இங்கிலாந்தில் 55 ஓவர்கள் கிரிக்கெட் நடைமுறையில் இருந்தபோதும் ஒருவரும் இந்த மைல்கல்லை எட்டவில்லை. ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதுவும் 36 வயதான டெண்டுல்கர் மீதம் வைத்திருந்த இந்த சாதனையையும் நிகழ்த்தி கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னராக இன்று ஆனார்.

அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கைகள்:

1. சச்சின் டெண்டுல்கர் 200 நாட் அவுட் - 147 பந்துகள் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்கள்

2. கோவென்ட்ர்ய் 194 நாட் அவுட் - 156 பந்துகள் 16 பவுண்டரிகள் 7 சிக்சர்கள்

3. சயீத் அன்வர் 194 அவுட் - 146 பந்துகள் 22 பவுண்டரிகள் 5 சிக்சர்கள்

4. விவியன் ரிச்சர்ட்ஸ் 189 நாட் அவுட் - 170 பந்துகள் 21 பவுண்டரிகள் 5 சிக்சர்கள்

5. சனத் ஜெயசூரியா 189 அவுட் - 161 பந்துகள் 21 பவுண்டரிகள் 4 சிக்சர்கள்.

2/23/2010

எப்ப வருவ....?

கர்ப்பந்தான் பத்து மாசம்..
உன்னைக் காணவுமே பத்து மாசம்..
வருடத்தில் இரண்டு மாசம்..
வந்து செல்லும் என் வசந்தம்..
நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...
குழம்புதான் வைக்கிறேன்
பொடியும் புளியுமில்லாம..
குழம்புதய்யா என் மனசு..
சிறப்பாய்த்தான் வாழுகிறேன்...
நீ சென்ற பின்னே சிரிப்பில்லாம..
வயிற்றில் தங்கிய கரு கூட
வருத்தத்தில் வலுவிழந்து
விடை பெற்று போச்சுதய்யா...
வந்து செல்லும் வாழ்க்கையே
என்னை வாரிச்செல்ல எப்ப வாரே..?
வெளி வேலை., வங்கி வேலை .,
பள்ளிவேலை., பாட வேலை
எந்த வேலை செய்தாலும்
எந்துணையே நீ இல்லை........
கை கொடுத்த தெய்வமே...
என்னை கையோட அழைச்சுப்போ...
கஷ்டப்பட்டு நீ உழைக்க
உன் கால் மிதியாய்க் கிடப்பேனே ...
சொந்த வீடு., காரினிலே
என்னை சுகமாக இருக்க வச்சே..
உலகத்து வசதியெல்லாம்
பிள்ளைகளுக்கு செஞ்சு வச்சே...
அம்மா., அப்பா .,அண்ணன் .,தம்பி .,
மாமா., மாமி எல்லோரும் என்னோட...
என்னைக் கைப்பிடித்த கருணையே
என் கைபிடிக்குள் எப்ப வருவ........???

2/19/2010

புயலானவள்...

நான் புயலை ரசிப்பவன்..
ஊடலினூடே வரும்
என்னவளின்
சுவாசம்தானே எனக்குப் புயல் !?
ரசிக்கவே அவளை
ஊடலாய் சீண்டுபவன் நான்..

நான் தென்றலையும் ரசிப்பவன்..
என்னவளின்
சந்தோஷ சுவாசம்தான் அது !?
அதை ரசிக்க
ஊடலில்
தோற்பவனும் நானே...

என்னவளை
தென்றலாய்
நேசிக்கப் பலருண்டு
பாசத்திலும் நட்பிலும்..
புயலாயினும்
அவளை நேசிப்பது
நான் மட்டுமே
காதலில்..

தென்றலானவள் புயலாக
காரணமாயிரம்..
அப்புயலை
தென்றலாய் வீழ்த்தும்
காதலாயிரம்
புரியும் உரிமை
எனக்கு மட்டுமே...

என்னால்
காதலிக்கப்பட்டு
தென்றலாய் வீழவே
புயலாவாள் என்னவள்..

நீ!

நான் விருப்பப்பட்டது
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!
**
உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,
மின்னஞ்சல்கள் அவமதிப்பு,
குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!
**
உன் நினைவுகளே
வாழ்க்கை
என்றான பிறகு
நீ
தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன ?
**
குட்டி போடும்
என்று நினைத்து
குழந்தைகள்
புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல்
உன் நினைவுகள்
பத்திரமாய்..
**
செடி கொடி மரத்தில்
மட்டும்தான்
பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!
**
என்ன எழுதினாலும்,
உன்னுடைய
“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள்
தோற்று விடுகின்றன!
**
யாழினிது குழழினிது
மழலை சொல் இனிது
என்றேன்
தோழி, நீ அழைக்கும்
தொலைபேசி மணி
ஓசை கேட்கும் வரை..
**
என் கற்பனை வளத்தை
கொன்றவள் நீ..
என் கற்பனைகள்
உன்னைத் தாண்டிச்
செல்ல மறுக்கின்றன...
**
அத்தி பூத்தது...
உன்னை பார்த்தது
பார்த்த நாள் முதல் -
தினமும் பூத்தது!
**
உன்னிடம் பேச
எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
**
என்னை கொல்ல
வாள் வேண்டாமடி
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…
**
மன்னித்து விடு!
நான் உன்னை
மறக்க
மறந்துவிட்டேன்….
**
செடியில் பூத்துக்கொண்டே
உன் முகத்திலும்
பூக்க
எப்படி முடிகிறது
இந்தப் பூக்களால்??

ஆயகலைகள் அறுபத்து நான்கு ..

இன்று விஞ்ஞானம் எத்தனையோ புதிய புதிய விஷயங்களை தந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் ஆச்சரியப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன.
ஆனால் அந்தக் காலத்தில் ஆயகலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால் அத்தனையும் அறிந்த அறிவாளி என்று அர்த்தம் என்று இந்து மத புராணங்கள் சொல்கின்றன.
அந்த ஆயகலைகள் அறுபத்து நான்கு எது என்று உங்களுக்குத் தெரியுமா?
1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
11. மந்திர சாஸ்திரம்
12. சகுன சாஸ்திரம்
13. சிற்ப சாஸ்திரம்
14. வைத்திய சாஸ்திரம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரும்மம்
23. வீணை
24. வேணு (புல்லாங்குழல்)
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம்
27. அத்திரப் பரிட்சை
28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்)
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை
33. பூமிப் பரிட்சை
34. சங்கிராம விலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகருடனம்
37. உச்சாடனம்
38. வித்து வேடனம் (ஏவல்)
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை)
44. பைபீலவாதம் (மிருக பாஷை)
45. கவுத்துவ வாதம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம் பழகுவித்தல்)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது)
53. அதிரிசியம்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம்
63. கட்கத்தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்

காதல் ஆத்திச்சூடி...

நான் படித்ததில் சிறந்தது

அவளிடம் மதி மயங்கு!
உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்... சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!
உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள்.
அது அவர்கள் நட்பின் கடமை.
உன் காதலின் கடமை என்ன தெரியுமா?
உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும்.
மீண்டும் தொலைப்பதற்காக!

ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!
அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும்.
அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு.
குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டுத் திரும்பும் நள்ளிரவிலும் அவள் கண்ணில் படு.
எங்கெங்கும் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்.
இவன் ஒருத்தனா... இல்லை ஏழு பேரா என அவள் குழம்ப வேண்டும்.
குட்டையைக் குழப்பி மீன் பிடிப் பதைப் போல, அவள் மனதைக் குழப்பி மனதைப் பிடிக்கும் வித்தை இது!

இதயத்தை அலங்கரி!
ஒருத்தி நுழையப் போகிறாள் என்பது தெரிந்த நொடியிலேயே, உள்ளங்கை அளவிலிருந்து உலக அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடும் இதயம்!
ஆகவே இதயத்தை அலங்கரி.இனி அவளுக்கும் உனக்கும் ஏற்படப் போகும் நிகழ்வுகளின் ஆல்பங்களை அடுக்கிவைக்க, அதன் சுவர் முழுவதும் அலமாரிகளை அடி.
அவளை வரவேற்க வளைவுகளும், விளையாட ஊஞ்சலும், நீராடத் தடாகமும், துயில்வதற்கு மெத்தையும், முக்கியமாய் அவள் தன்னை அடிக்கடி அழகு பார்த்துக்கொள்ள அவளுயரக் கண்ணாடியும் அமை.
அவள் கேட்க, துடிப்புகளில் இனிய இசையை உண்டாக்கு. சீக்கிரம்...
அதோ அவள் வந்துகொண்டு இருக்கிறாள்!

ஈர்க்கும் படி நட!
இது கொஞ்சம் கஷ்டம்தான்.
ஆனால், அவளை ஈர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம்.
ஏன் என்றால், அவ்வளவு கஷ்டத் துக்கும் பரிசாகக் கிடைக்கப்போவது அவளின் அழகான இதயம். முதன்முதலாய் உன் கண்களை அவள் கண்கள் சந்திக்கிறபோதுதான் உன் காதல் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப் படுகிறது.கண்ணியம் என்பது அரசியலில் இருக்கிறதோ இல்லையோ, அவளை ஈர்க்கும் உன் முயற்சியில் அது இருந்தால், வெகு சீக்கிரமே அவள் மனதில் பட்டொளி வீசிப் பறக்கும் உன் கொடி!

உறுத்தாமல் பார்!
காதலிப்பதால் கிடைக்கும் சுகத்தில் பாதி சுகம் பார்த்துக் கொண்டு இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
பார்வைகள் ஒருபோதும் பார்ப்பதால் தீர்வதில்லை. மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.
உன் பார்வை அவள் அழகைத் தின்னக் கூடியதாக இருக்கக் கூடாது. அவள் அழகுக்கு மகுடம் சூட்டுவதாக இருக்க வேண்டும்.
உன் பார்வையால் தனது அழகு வளர்வதாக அவள் உணர வேண்டும்.
இப்படி எல்லாம் எப்படிப் பார்ப்பதென்று நீ எங்கேயும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை.
மனதில் காதலை மட்டும் வைத்து, ஒரு மலரைப் பார்ப்பதைப் போல் அவளைப்பார்.உனது கண்களால் உன் உள்ளத்தில் உள்ள காதலுக்கு ஓராயிரம் ஊற்றுக்கண்கள் திறக்கும்!

ஊதியமின்றிக் காவல் செய்!
உலகத்திலேயே அழகான வேலை, உன் காதலியைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி வேலைதான்.
நீ அவளைப் பின்தொடர்வதை அவள் தெரிந்துகொண்டால், எங்குவேண்டு மானாலும் துணிச்சலுடன் போவாள்.
அவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ 'எங்க போற' என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய்.
அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.என்றாவது ஒரு நாள். குரைக்கும் நாய்க்குப் பயந்தோ, பாய்ந்து வரும் மாட்டைக் கண்டோ அத்தனை பேரையும் விட்டுவிட்டு உன் பின்னால் ஓடி வந்து ஒளிவாள்.
அதுதான் உன் காவலுக்கும் காதலுக்கும் அவள் தரும் மரியாதை!

எதற்கும் வழியாதே!
தவறுதலாய் அவள் கைக்குட்டை கீழே விழுவதைப் பார்த்துவிட்டால் ஓடிப்போய் சிதறு தேங்காய்ப் பொறுக்கு பவனைப் போல் பொறுக்காதே.
செடிக்கு அடியில் கிடக்கும் மலரைப் போல் நிதானமாய் எடு.
அதை அவளிடம் தருகையில் 'உங்க கர்ச்சீப். மிஸ் பண்ணிட்டீங்க' என்று வழியாதே.
''இது உன் கர்ச்சீப்பா' என்று பந்தாவாகக் கேள்.
இன்னொரு தெய்வாதீனத் தருணத்தில் நீயும் அவளும் அருகருகே நிற்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலாம்.அப்படி அவள் அருகில் நிற்கையில் உனக்குக் கைகால்கள் உதறலாம். அல்லது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏகாந்தமாய் நமட்டுச்சிரிப்பு சிரிக்கத் தோன்றலாம்.இதில் நீ எதைச் செய்தாலும், உனக்கு அவள் போட்டுவைத்திருக்கும் மதிப்பெண் அம்பேல் ஆகிவிடும்.
ஒன்றும் தெரியாத பையனைப் போல அமைதியாய் நில்.
அமைதி ஓர் அற்புதமான வசிய மருந்து!

ஏகலைவனாய் இரு!
நீ எத்தனையோ காதல் காவியங் களைப் பார்த்திருக்கலாம்.
எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவை எதிலிருந்தும் உனக்கான காதலை நீ எடுத்திருக்க முடியாது.
அது அவளிடம் மட்டுமே கொடுத்தனுப்பப்பட்டு இருக்கிறது.
அதை, அவளை நீ பார்த்த நொடியி லேயே உன்னிடம் சேர்த்துவிட்டாள்.ஆகையால், காதலில் அவளே உனக்கு குரு.
அதற்கான குருதட்சணையாக, அவள் உன் உயிரைக் கேட்டாலும், ஏகலைவன் போல் யோசிக்காமல் கொய்து தரத் தயராய் இருக்க வேண்டும் நீ. ஆனால், அப்படிக் கேட்க அவள் ஒன்றும் துரோணர் இல்லை. என்றாலும் அவள் எப்போது எது கேட்டாலும் தருவதற்குத் தயராய் நீ ஏகலைவனாகவே இரு!


ஐம்புலனிலும் அவளை வை!
கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள்.
உன் காதலியும் இப்படித்தான் உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள்.ஆனால், அதற்கு முன்... உன் ஐம்புல னாலும் அவளை நீ காதலி.கண்களில் அவள் உருவத்தை வைகாதுகளில் அவள் குரலை வைசுவாசத்தில் அவள் வாசம் வை உதடுகளில் அவள் பெயரை வைஉணர்வில் அவள் உயிரை வை!

ஒரு நாள் காதலைச் சொல்!
அவள் மகிழ்வாய் இருக்கும் நேரம் பார்த்து, ''நான் ரொம்ப நாளாய் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவள் நீயா?' என்று கேள்.
புன்னகையை அடக்கிக்கொண்டு 'ஏன்... அவள் யாரென்று உனக்குத் தெரியாதா?' என்பாள்.
'அவளை நினைக்க ஆரம்பித்த பிறகு என்னையே நான் மறந்துவிட்ட தால், அவள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது' என்று சொல்.'
உன்னை ஞாபகப்படுத்திக்கொள். அவள் யாரென்பது தெரிந்துவிடும்' என்பாள்.
'அவளை நான் மறந்தால்தானே என் ஞாபகம் எனக்கு வரும்' என்று கேள். 'அவளை மறந்துவிட வேண்டியது தானே' என்பாள்.
'என் ஆயுள் காலம் வரை அவளை ஞாபகம் வைத்திருப்பேன்' என்பது நிஜமில்லைதான்.ஆனால், அவளை நான் ஞாபகம் வைத்திருக்கும்வரைதான்...'நான் உயிரோடு இருப்பேன் என்பது மட்டும் கண்டிப்பாய் நிஜம்' என்று சொல்.
'அப்படியானால் நீ காதலிக்கும் பெண் நான்தான்' என்பாள் தலையைக் குனிந்து.
'எனக்குத் தெரியும்' என்று சொல்.
செல்லமாய் கோபிப்பாள்.
பிறகு கண்டிப்பாய் கிடைக்கும் அழகான பிகு முத்தம்!

ஓர் உலகம் செய்!
அந்த உலகம் அற்புதமானது.அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்... கதகதப்பாய் மழை பெய்யும்.அந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே.நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.ஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம். அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள்.அதற்கின்னும் காலமும் கனிய வில்லை. ஆப்பிளும் கனியவில்லை!

ஒள
ஒளவியும் ஒளவாமலும் பழகு!
இது என்ன வார்த்தை என்று முழிக்காதே.
தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது.அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல.மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்... நீ பூமியாய்! காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது.ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!

அந்தந்த வயதில்...

இருபதுகளில்...

எழு!
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!
ஜன்னல்களைத் திறந்து வை!
படி! எதையும் படி!
வாத்சாயனம் கூடக்
காமமல்ல, கல்விதான்..
படி!
பிறகு
புத்தகங்களை எல்லாம்
உன்
பிருஷ்டங்களுக்குப்
பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா..
உன் சட்டைப் பொத்தான்,
கடிகாரம்,
காதல்,
சிற்றுண்டி,
சிற்றின்பம்
எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில்
விழுந்து விட்டால்,
எந்திர அறிவு கொள்!
ஏவாத ஏவுகணையினும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனித முகங்களை
மனசுக்குள் பதிவு செய்!
சப்தங்கள் படி!
சூழ்ச்சிகள் அறி!
பூமியில் நின்று
வானத்தைப் பார்!
வானத்தில் நின்று
பூமியைப் பார்!
உன் திசையைத் தெரிவு செய்!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலைச் சுகி!
காதலில் அழு!
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்
மணம் புரி!
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த இன்பம்
கையளவுதான்..
மிச்சமெல்லாம் உனக்கு!
வாழ்க்கையென்பது
உழைப்பும் துய்ப்புமென்று உணர்!
உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்... இன்னும்...
சூரியக் கதிர்கள்
விழமுடியாத ஆழத்தில்...
**
முப்பதுகளில்...

சுறுசுறுப்பில்
தேனீயாயிரு!
நிதானத்தில்
ஞானியாயிரு!
உறங்குதல் சுருக்கு!
உழை!
நித்தம் கலவி கொள்!
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒளித்து வைத்திருப்பான்..
கைப்பற்று!
ஆயுதம் தயாரி..
பயன்படுத்தாதே.
எதிரிகளைப் பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!
வேர்களை,
இடிபிளக்காத
ஆழத்துக்கு அனுப்பு..
கிளைகளை,
சூரியனுக்கு
நிழல் கொடுக்கும்
உயரத்தில் பரப்பு..
நிலை கொள்.
**
நாற்பதுகளில்...

இனிமேல்தான்
வாழ்க்கை ஆரம்பம்..
செல்வத்தில் பாதியை
அறிவில் முழுமையை
செலவழி..
எதிரிகளை ஒழி!
ஆயுதங்களை
மண்டையோடுகளில் தீட்டு!
ஒருவனைப் புதைக்க
இன்னொருவனைக்
குழிவெட்டச் சொல்!
அதில்
இருகையால் ஈட்டு..
ஒரு கையாலேனும் கொடு..
பகல் தூக்கம் போடு.
கவனம்!
இன்னொரு காதல் வரும்!
புன்னகைவரை போ..
புடவை தொடாதே.
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு!
இனிமேல்
இலட்சியத்துக்கு நீதான்
இலக்கு..
**
ஐம்பதுகளில்...

வாழ்க்கை, வழுக்கை
இரண்டையும் ரசி..
கொழுப்பைக் குறை..
முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்!
கணக்குப்பார்!
நீ மனிதனா என்று
வாழ்க்கையைக் கேள்..
இலட்சியத்தைத் தொடு
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!
**
அறுபதுகளில்...

இதுவரை
வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..
இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு..
மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு!
கிளியோடு பேசு!
மனைவிக்குப் பேன் பார்!
பழைய டைரி எடு
இப்போதாவது உண்மை எழுது..
**
எழுபதுக்கு மேல்...

இந்தியாவில்
இது உபரி..
சுடுகாடுவரை
நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ...
ஜன கண மண...

**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து

கடவுளைப் புரிதல்!


காலப்பள்ளத்தில்
மூடக் குழியில்
புராணப்புழுதி மூடிக்கிடந்தான் முருகன்..

தோண்டித் துடைத்து
விஞ்ஞானத் தண்ணீரில் கழுவினேன்.

ஒற்றைத்துணி சற்றே அசைவுற
நெற்றிச்சுடர் பற்றிப் பரவிட
வெற்றித்திரு வேலுக்கதிபதி
உயிர்கொண்டான்.

"கடவுளா நீ ?"என்றேன்.

"மூத்தகுடி காத்த
மூதாதை" என்றான்.

"குன்றில் ஏன் குடி?" என்றேன்.

"ஆதிமனிதன் குடில்
அதுதானே!" என்றான்.

"குளிர்மலையில் ஏன்
குறையுடை கொண்டாய்?" என்றேன்.

"இரையாகும் விலங்கைத்
துரத்திக்கொண்டே
இரைதேடும் விலங்குவிட்டு
உயிர்தப்பி ஓட-சுனைகள்
ஆறுகள்
நீந்திக் கடக்க-
தொங்கும் ஆடை
தொல்லையா இல்லையா?
இன்னொன்றும் நெஞ்சில் எழுது
நெசவுகண்டது குறிஞ்சியில் அல்ல
மறவாதே.. அது மருதம்" என்றான்

"படையலுக்கேன் முருகா
தேனும் தினைமாவும்... ?"

"சுடுதல், அவித்தல், சமைத்தல் என்னும்
அநாகரிகங்கள் அடையு முன்னே
காயும் கனியும் கிழங்கும் இலையும்
தானாய் விளைந்த தானிய மணியும்
தேனாய் வழிந்த திரவியப் பொருளும்
இருந்த உண்மை உணர்த்தவே."

"கொடியில்
சேவல் பறக்கும் சேதி என்னவோ?"

"வேட்டைக் களைப்பில்
மரணம்போல் உறங்கும் எங்களை
அதிகாலை எழுப்பும் முதற்பறவை அதுதானே..?"

"போகட்டும்
வேலோடு நீயலையும்
வினோதம்... ? "

"கல்லாயுதம் தோற்றவிடத்து
வேலாயுதம் கண்ட முதல்மனிதன் நான்!

வேலின் தொழில்கள்
விளம்பக்கேள்!

வேட்டைக்காட்டில் வெற்றி தந்ததும்
வேளாண்மைக்குக் காவல் தந்ததும்
மடவார் தம்மின் மானம் காத்ததும்
மாற்றார் வெருட்டி மண்புலம் காத்ததும்

முன்னோடிகளை விலங்குண்ணாமல்
அந்நாள் காத்த ஆயுதனாதும்

கைவேல் கைவேல் கைவேல் தானடா!
கைவேல் இல்லையேல் நீ நான் ஏதடா?"

"தாத்தா!" என்றேன்
"நான் பேரனே" என்றான் முருகன்

இருவர் தழுவல் இறுக்கத்தில்
நொறுங்கிச் சிதறிக் கிடந்தன
நூற்றாண்டுகளின் துகள்கள்.

**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து. "கொஞ்சம் தேநீர்நிறைய வானம்"

விவேகானந்தரின் பொன்மொழிகள்..


*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும்.
நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

*வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்!
தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.
சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.
இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது.
வீரர்களாகத் திகழுங்கள்!
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.

*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

*ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.

*ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

* ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!

*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

*எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.

*தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும்.

*அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும்.

*ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.

*அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.

*இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.

*தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.

*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).

*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

*பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

*கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

*உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

*மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

*சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

*அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

*உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.

*நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.

*இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.

* கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

* ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.

* உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.

*மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.

* உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும்.

* உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.

* உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.

* பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

* சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

*தியானம்
எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடையில் தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்!

*ஞானதீபம்
ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம். அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!

*மனதை அடக்கு
எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.

‘பொம்மையைக் கண்டு ஏன் பயப்படறே? உண்மையைக் கண்டு பயப்படு!’

கருணாநிதிக்கு பாடம் எடுத்த வாத்தியார் காமராஜர்!


சட்டமன்றத்தில் திமுக முதற்பெரும் எதிர்க்கட்சியாய் நுழைந்த நேரம்… நாவலர் நெடுஞ்செழியன்தான் எதிர்க் கட்சித் தலைவர். இரவு முழுவதும் பல்வேறு குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு சென்றிருந்தார். பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.

காமராஜர் அவரைப் பேசவே விடவில்லை. “அவர்கள் சொன்னது இருக்கட்டும்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாலும், காமராஜரின் இந்தத் ‘தொடர் தாக்குதலாலும்’ நாவலர் நெடுஞ்செழியன் திடீ ரென சட்டமன்றத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.

அப்போது எங்களுக்கெல்லாம் கட்டுமீறிக் கண்சிவந்த கோபம். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, காமராஜரின் அன்றைய கேள்விகளில் ‘நியாய ரேகை’ ஒளிவிடுகிறது.

அடுத்தது கலைஞர் பேச்சு!

அவரும் ‘இசைக்கருவிகள் முழங்கினால் நெற்பயிர் வளரும்’ என்பதற்கு அடுக்கடுக்கான காரணங்களை – ஆதாரங்களை எடுத்துக் கூறிக்கொண்டிருந் தார்.

காமராஜர் கேட்டார்… “சட்டசபையிலே இதை எல்லாமா பேசறது?”

“சட்டசபையில் என்ன பேசுவது என்று நீங்கள் எழுதிக்கொடுங்கள்… நாங்கள் பேசுகிறோம்!” என்று கூறிவிட்டுக் கலைஞர் அமர்ந்தார். திமுக- வின் சட்டமன்றப் பயிற்சிக்கு, காமராஜர் கைப்பிரம்பு தூக்கிய ஒரு ஆசிரியரே!

காமராஜர் பட்டப்படிப்பு படிக்காதவராக இருக்கலாம். ஆனால், அவரது பட்டறிவு, வாளின் கூர்மை போன்றது. அதனால்தான் அந்தப் படிக்காத மேதையைச் சுற்றி படித்த மேதைகளின் கூட்டம் மொய்த் துக் கிடந்தது.

பொதுக்கூட்டத்தில் அவருக்கு முன் பேசுபவர்கள் யாராவது வரம்பு மீறி எதிர்க் கட்சித் தலைவர்களைத் தாக் கினால், தடுத்து நிறுத்திவிடுவார். கவிஞர் கண்ணதாசனும் இந்தக் ‘கில்லட்டின் வாளில்’ பலமுறை மாட்டிக்கொள்வார். “அந்தக் கவிராயரை உட்காரச் சொல்லய்யா” என்று சத்தம் போட்டுச் சொல்வார் காமராஜர்.

அந்தக் காலத்தில் அவரைத் தாக்கி எதிர்க்கட்சிகள் பேசியது போல் வேறு எந்தக் காலத்தி லும் இல்லை எனலாம். ஆனால், “ஆளுங்கட்சிக்கு அரசாங்க வேலை! எதிர்க்கட்சிக்கு என்ன வேலை? நம்மைப் பத்திப் பேசற பிழைப்புதானே? அவன் பிழைப்பிலே ஏன் மண்ணைப் போடறே?” என்று வெளிப்படையாகவே கேட்பார்.

நையாண்டி படத்துக்காக (கார்ட்டூன்) கைது செய்கிற இந்தக் காலத்தையும் பார்க்கிறோம். அவரது காலத்தில் அவரைக் கன்னாபின்னா என்று நையாண்டி ஓவியம் வரைந்தபோது காமராஜர் கூறினார்… “பொம்மையைக் கண்டு ஏன் பயப்படறே? உண்மையைக் கண்டு பயப்படு! போ… போ..!”

‘ஹைதராபாத் வங்கியில் ஒன்றரைக் கோடி ரூபாய் போட்டிருக்கிறார் காமராஜர்’ என்ற வதந்தி பரவி – மேடைப் பேச்சாகி – அறைகூவல் வடிவில் வந்தது.

“எவனோ எதையோ சொல்றான்… விடு! எனக்கு யானைக்கால் வியாதின்னு யாராவது சொன்னா, ஒவ்வொருத்தர் கிட்டேயும் நான் போய் என் காலைக் காட்டிக்கிட்டா இருக்க முடியும்?” என்று கேட்டார் காமராஜர்.

அடேயப்பா! தன்னைப் பற்றியும் தனது நேர்மையைப் பற்றியும் எத்தனை அழுத்தமான நம்பிக்கை! அந்த நம்பிக்கை குறைகிற தலைவர்கள்தாம் தன்னைப் பற்றித் திறனாய்வு செய்கிறவர் தலையைத் திருகி சிதறு தேங்காய்போல வீசிட நினைக்கிறார்கள்.

அ.ராமநாதன்
நன்றி: ஆனந்த விகடன்

இப்படி ஒருவர் இருந்தாரா..!





வருஷத்தில் ஒரே ஒரு தினம்தான் நாம் காந்தியடிகளை நினைவு கூர்கிறோம். அவர் சமா திக்கு மலர் வைக்கிறோம். அதே வைஷ்ணவ ஜனதோ, அதே கதர்க்குல்லாய், அதே ராட்டை, அதே நூல். இந்தக் காலத்து இளைஞர்கள் காந்தியைப் பார்ப் பது ரூபாய் நோட்டுக்களில் மட்டுமே! அவர் வாழ்ந்த வாழ்வையும் செய்த தியாகங்களையும் இப் போது சொன்னால், ஐன்ஸ்டைன் கூறியதுபோல, இப்படி ஒருவர் இருந்தாரா என்பதை நம்ப மறுப்பார்கள்.

இப்போது காந்தியை நம் எல்லா உபாதைகளுக்கும் குற்றம் சொல்வது ஒரு கெட்ட பழக்கமாகிவிட்டது.

42-ஏ பஸ் குறித்த நேரத்தில் வராவிட்டாலும் கூட காந்திமீது பழிபோடுகிறோம். அவருடைய கிராமப்புறம் சார்ந்த பொருளாதாரம் நடைமுறைக்கு ஒவ்வாது என்று சொல்லி, கிராமங்களில் அநாவசியமான நுகர்பொருள் ஆசைகளை வளர்த்தி ருக்கிறோம். அவர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்புத் தராமல் நகரத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

அடுத்த வேளை சோற்றுக்கு ஏற்பாடு செய்யாமல், ஷாம்பூ எளிதாகக் கிடைக்கும்படி செய்திருக்கிறோம். இன்றும், சரியாகப் படித்துப் பார்த்தால் காந்தியின் கிராமப்புறம் சார்ந்த பொருளாதாரம்தான் நம் ஏழ்மையைப் போக்குவதற்கு ஒரே மார்க்கம்!

அடுத்த முறை நூறு ரூபாய் நோட்டிலோ, ஐந்நூறு ரூபாய் நோட்டிலோ காந்தியின் புன்னகை முகத்தைப் பார்க்கும்போது ஒரே ஒரு வைராக்கியம் எடுத்துக் கொள்ளுங்கள். அதைச் செலவழித்து உங்கள் சொந்தக் கிராமத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அங்கு ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்துவிட்டு வாருங்கள்.

‘இன்று நபிகள் நாயகம் இந்தியாவுக்கு வந்தால், என்னைத்தான் நிஜமான முஸ்லிம் என்று ஏற்றுக்கொள்வார். உண்மையான கிறிஸ்தவர்கள் மேற்கே இல்லை. இருந்திருந்தால் உலக யுத்தங்கள் வந்திருக்காது’ என்று காந்தி ஒரு கடிதத்தில் எழுதினார்.

இத்தகைய ஆழமான கருத்துக்களையாவது நினைவுகூரலாம்.”

-காந்தி தரிசனம் கட்டுரையிலிருந்து…

2/14/2010

காதலர் தினத்தில் கவிதையை காதலிப்பவர்களுக்கு...

நீயின்றி நானில்லை
என்பதல்ல காதல்…
எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்!

இந்த உலகத்தில் நான்
யாரோ ஒருவன் இல்லை…
யாரோ ஒருத்திக்கு நானே
உலகமாய் இருக்கின்றேன்!

நமக்கான இடைவெளியில்
காற்றோடு அன்பையும் விதைத்த உனக்கு
என்னிடமிருந்து
என்ன வேண்டும் என்றேன்...
எதுவுமே வேண்டாம் என்றாய்
என் அழகான திடுக்கிடலை
அன்பாக ரசித்தபடி...
பிறகுதான் சொன்னாய்.
உன்னைத்தவிர என்று!

2/12/2010

தற்கொலைக் கவிதைகள்

1.
தற்கொலைக்கு

விஷம் வாங்கிவர பயணிக்கின்றன
என் கால்கள்.
முட்டாள்தனமென்று புத்திசாலிகள்
தூற்றலாம்;

மக்கள்தொகையிலொன்று குறைந்ததென்று
எதிரிகள் மகிழலாம்.

ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகள்
நான்கைந்து அழுகைகள்
சில உதடு பிதுக்கல்கள்

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்
கொஞ்சம் பிரிவுக் கவிதைகள்

இவை எதைப் பற்றிய பிரக்ஞையுமின்றி
நிகழலாம் இவனது
மரணம்.

விஷம் வாங்கிகொடுத்த
வேலைக்காரனென்று நசுக்கப்படலாம்
நானும்.

2.
தோல்விகளால் நிரம்பியவன்
வெற்றிகளால் நிரம்பியவனை
சந்தித்தான்

கொஞ்சம் மெளனம்
கொஞ்சம் வன்மம்
கொஞ்சம் பரிகாசம்
கொஞ்சம் நஞ்சு
இருவருக்கும் இடையே
மிதந்து கொண்டிருந்தது.

கடைசியாக,
அறிவுரைகளுடன் நகர்ந்தான்
வென்றவன்
தோல்வியுடன்.

படித்ததில் பிடித்தது

இருந்து என்ன

ஆகப் போகிறது

செத்துத் தொலைக்கலாம்

செத்து என்ன ஆகப் போகிறது

இருந்து தொலைக்கலாம்.

காதல் விதைகள்

ஒரு நாளில் எத்தனை முறை உன்னை நினைக்கிறேன் என்பதை ஒரு நாளில் எத்தனைமுறை சுவாசிக்கிறேன் என்பதைக்கொண்டே கண்டுபிடிக்கிறேன்.

இலையுதிர்காலத்தில்தான் உன் வருகை நிகழ்ந்தது. மழைகண்டவுடன் தலைதூக்கும் சிறுபுல்லாய் சிலிர்த்து எழுந்தது என் தேசம். என் நிரந்தர இளவரசி நீ.

ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்றாய் ஓர் இரவில். என்னைத்தவிர அதென்ன ஜலதோஷம் உனக்கு பிடித்திருக்கிறதென்று இரவெல்லாம் திட்டித்தீர்த்தேன். உன்னையே சிந்தித்தேன். நீ தேன்.

என் கவிதைகளை சுவாசிக்கும் உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.இதழோர புன்னகையையும் எனக்கான நேசத்தையும் தவிர.

உன் கனவுகளை ஆட்கொள்கிறேன் என்றாய். உன் உறக்கம் கெடுத்த கனவை திட்டுவதா இல்லை கனவில் வருகின்ற என்னை திட்டுவதா என்கிற குழப்பத்தில் உறங்கிப்போகிறேன். சத்தமின்றி என் கனவில் கண்சிமிட்டி சிரிக்கிறாய் நீ.

சைக்கிளில் நீ பயணிக்கும்போதெல்லாம் துயரங்களால் நிரம்பித்திரிவேன். என் இளவரசி பயணிக்க வேண்டியது பல்லக்கில் அல்லவா?

யாருமற்ற கடற்கரை,அழகான அந்தி,ஒற்றை நிலா,பாதம்தொடும் அலை,அருகில் நீ. சொர்க்கத்தை விவரிக்க சொன்னால் இப்படித்தான் விவரிப்பேன்.

கோடையொன்றில் கொடைநாட்டில் கன்னம்தொடும் பனிக்காற்றின் நடுவில் செம்பருத்திப்பூ உன்னுடன் விரல்கோர்த்து நடக்கவேண்டும். கவிதைகளால் உன் இதயம் நிறைப்பேன் அக்கணம்.

காற்றை மொழி பெயர்த்தால் இசை. நேற்றை மொழிபெயர்த்தால் சரித்திரம். நம் காதலை மொழிபெயர்த்தால் நீ,நான்,நாம் மற்றும் வெண்ணிலா.

இத்தனை அழகான நேசத்தை சுமந்து திரிகிறேன். இத்தனை அழகான உன் நினைவுகளை சுமந்து திரிகிறேன்.நாடோடி என்கிறது உலகம். காதலோடி என்கிறது உள்மனம்.

தங்கமீன் இரண்டு ஒன்றாக நீந்துகிறது.ஊரெல்லாம் சொல்கிறது இதுபோல் அழகு வேறில்லையென்று. முட்டாள்கள் கறுப்புமீன்விழியாள் உன்னை பார்த்ததில்லை போலும்.

நாம் சந்திக்கும் முதல்பொழுதில் மழைக்குபின் மரங்களடியில் உன் விரல்கோர்த்து நடக்கும் தருணத்தை உனக்கு பரிசளிப்பேன்.

க’விதை’க்குள் விழுந்து விருட்சமென வளர்ந்து வனமாக அடர்ந்து கிளைத்து பூத்து நிற்கும் நந்தவனம் நீ.

[காதலர்களுக்கு Advance காதலர்தின நல்வாழ்த்துகள்]

2/06/2010

கலைக்காக(திரைப்படம் )

அடி


ஓவியப்பெண்ணே

உன்னையுமா

விட்டுவைக்கவில்லை

உலகம்

ஓவியத்தில்கூட

ஒளிவு மறைவு

வேண்டாமென்கிறது

ஒட்டுத்துணி

கலைக்காகத்தானே

என்று

கலைந்தெறிப்படுகிறது

கன்னியமான ஆடை

அசந்துபோய் பார்க்கிறது

அற்ப உலகம்

ஆதாம் ஏவாளின்

அந்தகால ”நிஜமாய்”

இந்தக்கால

கலையழகியை

ஆண்டவன் கொடுத்த

அற்புதபெண்ணழகு

கலைகளுக்காக

காவுகொள்ளபடுகிறது

கற்பும் மானமும்

காற்றில் பறக்க....

தோழி

வழக்கமாய்

கடற்கரை வளாகத்தில்

நாம் சென்று விட்டால்

எங்கிருந்தோ,

பூக்கூடையோடு வந்து

பேரம் பேசாமல்

முழம் போட்டு அளக்காமல்

கைநிறைய

மல்லிகைப்பூவைக்

கொடுத்துவிட்டு செல்வாளே

ஒரு பெரியம்மா...

அவளை நினைவு இருக்கிறதா...

சமீபத்தில் நான் மட்டும்

கடற்கரை மணலில்

நடந்தபோது

அவள் எதிபபட்டாள்...

என்னை அடையாளம் "கண்டு"

"பாப்பா எப்படி இருக்கு"

ஆவலோடு நலம் கெட்டாள்...

அவள் என்னை மாதிரியே

உன்னை மறக்கவில்லை...

நமக்கான நிகழ்வுகளை

அவள் மறக்கவில்லை...

அவள் மட்டுமல்ல

நானும்தான்...!

நாம் சென்ற

உணவு விடுதிகள்...

திரையரங்குகள்...

ஆலயங்கள்...

துணிக்கடைகள்...

நகைக்கடைகள்...

நண்பர்கள் வீடு...

அமர்ந்து பேசிய

ரயில்நிலையங்கள்...

இங்கெல்லாம் இப்போது

நான் மட்டும் செல்கிறேன்...

அந்தப் பூக்கடைப்

பெரியம்மாவைப்போல்...

என்னைப் பார்த்ததும்

உன்னை அடையாளம் சொல்லி...

எல்லோரும் உன்னை

விசாரிக்கிறார்கள்...

நீயும் தனியாக

செல்லும் போது

என்னைப் பற்றி

உன்னிடமும் இப்படித்தானே

நலம் கேட்பார்கள்

தோழி...

இதையெல்லாம்

சொல்லித் தொலைக்க

எனக்குக் கவிதை இருக்கிறது...

உனக்கு ?...
 
நன்றி :சினஹன்

காதல் ஓவியம்

கவி எல்லாம் நிஜமாகுமென்று

காலமெல்லாம் காத்திருந்தும்

காதல் தூரிகை கடைசியில்

வரைந்தது... கன்னங்களில்

கண்ணீர் துளிகளையே...
மச்சி நீயும்


பச்சை காட்டி

உச்சி குளிர

வைத்தாய் - இன்று

கொச்சைத் தமிழில்

பேச்சை மாற்றி

மூர்ச்சையாக்கி

விட்டாய்....