தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/19/2012

சிவராத்திரியில் எவ்வாறு தரிசனம் செய்ய வேண்டும்?




சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிடவேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.

லிங்கம் உருவான சிவராத்திரி: சிவன் அபிஷேகப் பிரியர். சிவராத்திரியன்று அவருக்கு அபிஷேகம் நடந்த வண்ணம் இருக்கிறது. சிவலிங்கம் ஏன் வட்ட வடிவமாக இருக்கிறது தெரியுமா? வட்டமான ஸ்வரூபத்துக்குத் (வடிவம்) தான் அடி முடியில்லை. ஆதியில்லை, அந்தமுமில்லை. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது. இது சரியான வட்டமாக இல்லாமல், நீள் வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சமே நீள் வட்டமாகத் தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டாலும் கிரகங்களின் அயனம் (பாதை) நீள் வட்டமாகத்தான் இருக்கிறது, என்று நம் நவீன விஞ்ஞானம் சொல்வதும், ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ஒற்றுமையாக இருக்கிறது. அன்போடு பக்தி செய்து உருகினால், சிவன் விரைவில் அகப்பட்டு விடுவார். அன்பினால் மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் என்பதால், அவருக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் இருக்கிறது. கேட்ட மாத்திரத்தில் அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல் தான் ஆசுதோஷி. சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்தது (உருவானது) சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில். அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து (உள் வாங்கி) அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதை விட ஆனந்தம் வேறு இல்லை.

2/16/2012

பொருத்தமான பணி




உங்களுக்கு பொருத்தமான பணி எது?-



நல்ல சம்பளத்தில், நல்ல வேலை வேண்டும் என்று ஆசைப்படும் அதேநேரத்தில், நாம் எந்த வேலைக்குப் பொருத்தமானவர்கள் என்பதையும் ஆராய வேண்டும். நம்முடைய திறமைகள், தகுதிகள் மற்றும் பின்னணிகள் குறித்து சுய பகுப்பாய்வை மேற்கொண்டாலொழிய, பொருத்தமான பணியை நாம் பெறுவதென்பது இயலாத காரியமே. எனவே சுய பகுப்பாய்வு தொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.


தொழில்ரீதியிலான பகுப்பாய்வு


வேலை தேடுதலில் உள்ள மிகப் பிரதானமான அம்சம் என்னவெனில், உங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தையும், தொழில்முறை குறிக்கோள்களையும் பகுப்பாய்வு செய்வதாகும். ஏனெனில், நம்மில் பெரும்பாலானோர், உள்ளார்ந்த திறன்கள் மற்றும் விருப்பங்களைக் கண்டு கொள்வதில்லை. இதனால்தான், பல்வேறான சிக்கல்களை சந்திக்கிறோம். நேர்முகத்தேர்வின்போது, சம்பிரதாயமாக கேட்கப்படும் "உங்களைப் பற்றி சொல்லுங்களேன்" என்ற கேள்விக்கு சாதாரணமாகவும், தெளிவாகவும் பதில்சொல்ல பலரும் திணறுவர். எனவேதான், உங்களின் உள்ளக்கிடக்கையைப் பகுப்பாய்வு செய்வது முக்கியமான செயல்பாடு என்கிறோம். கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பாருங்கள்,


1. வாழ்க்கையில் நான் என்ன செய்ய விரும்புகிறேன்?


2. என்னுடைய பணி நோக்கங்கள் என்னென்ன?


3. என்னுடைய நீண்டகால லட்சியங்கள் என்னென்ன?


4. அடுத்த 5 அல்லது 10 வருடங்களில் எனது நிலை என்னவாக இருக்கும்?


5. எனது குறுகியகால பணி குறிக்கோள் என்ன?


6. எனது பணி விருப்பங்கள் என்னென்ன?


7. எனது பணி முன்னுரிமைகள் என்னென்ன?


மேற்கூறிய கேள்விகளுக்கு தெளிவான பதிலளித்து பழகிவிட்டாலே போதும், உங்களின் வேலை விஷயத்தில் ஒரு தெளிவான முடிவை உங்களால் எடுக்க முடியும்.


பின்புல பகுப்பாய்வு


ஒரு வேலையைத் தேடும் முன்பாக உங்களது கல்வி மற்றும் தொழில்முறை பின்னணிப் பற்றி யோசித்துக் கொள்ள வேண்டும். மேலும், எந்த வகையான பணி நிலைகள் உங்களுக்கு ஒத்துவரும்? நீங்கள் விரும்பும் பணி நிலைகளுக்கு ஏற்றவாறு உங்களின் கல்வித் தகுதி இருக்கிறதா? போன்ற அம்சங்களையும் விரிவாக யோசிக்க வேண்டும். ஏனெனில், உங்களிடம் சிறந்த கல்வித் தகுதிகள் இருக்கலாம் மற்றும் பிரமாதமான அனுபவங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பணிக்கான நேர்முகத் தேர்வின்போது, அப்பணிக்கு நீங்கள் எவ்வாறு பொருந்துகிறீர்கள் என்பதை மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள். எனவே, நேர்முகத்தேர்வின்போது, உங்களது கல்வி மற்றும் அனுபவப் பின்னணி குறித்து குறைந்தபட்சம் 2 நிமிடங்கள் வரை நேர்மறையாக பேசுவதற்கு பயிற்சி எடுக்கவும்.


திறன் மதிப்பீடு


ஒவ்வொரு விதமான பணியை செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட விதமான திறன்களும், தகுதிகளும் தேவைப்படும். எனவே, உங்களிடம் இருக்கும் திறன்கள் மற்றும் தகுதிகள் பற்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும். இத்தகைய மதிப்பாய்வானது, உங்களின் உள்ளார்ந்த மற்றும் கற்றல் மூலமான திறன்கள் ஆகிய இரண்டையும் சார்ந்தது. உள்ளார்ந்த திறன் என்பது உங்களது ஆளுமையோடு தொடர்புடையது. கற்றதன் மூலமான திறன்கள் மற்றும் உள்ளார்ந்த திறன்களுக்கு சில உதாரணங்கள்


கற்றல் மூலமான திறன்கள்


கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங், டேட்டா ப்ராசஸிங், மார்க்கெடிங், வாகனம் ஓட்டுதல், நிர்வாகம், கலந்துரையாடுதல், வெளிநாட்டு மொழி, பிசினஸ் ரைட்டிங், இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ், பேரம்பேசும் திறன், பொதுமக்கள் தொடர்பு, தொழில்முறையாக பேசுதல், கவனித்தல், மேலாண்மை, திட்டமிடுதல், ஒருங்கிணைதல், பொதுக்கூட்ட உரை, விற்பனை, மேற்பார்வை, நேர மேலாண்மை, கற்பித்தல் மற்றும் பயிற்சி.


உள்ளார்ந்த திறன்கள்


சூழலுக்கேற்ப மாறிக்கொள்ளுதல், பகுப்பாய்வு செய்தல், அழுத்தம் திருத்தமாக பேசும் திறன், உறுதித்தன்மை, பரந்த மனப்பான்மை, தைரியம், படைப்புத்திறன், முடிவெடுத்தல், ராஜதந்திரம், விவேகம், சுயதிறம், தொலைநோக்குப் பார்வை, கற்பனைத்திறன், முன்முயற்சி, தலைமைத்துவம், உற்சாகப்படுத்தல், சீரிய நோக்கம், பொறுமை, விடாமுயற்சி, வளமை, அக்கறை, உடல்திறன் மற்றும் குழு ஒருங்கிணைப்பு


முதலில், உங்களிடம் இருக்கும் திறன்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக, நீங்கள் சேரக்கூடிய பணிக்குத் தேவையான திறன்கள் எவை என்று அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.


பொருத்தமான பணியைத் தேடுதல்


உங்களுக்குப் பொருத்தமான பணியைத் தேடுவதில் பலவிதமான நுட்பங்களை கையாள வேண்டும். தொழில்முறை சார்ந்த நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுதல், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரித் தோழர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், பலவிதமான இணையதளங்களில் தேடுதல் உள்ளிட்ட பலவிதமான வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்களுக்கான பொருத்தமான பணியைத் தேடலாம்.






இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளின் வகைகள்-


ஒரு நேர்முகத் தேர்வு செயல்பாட்டைப் பொறுத்தவரை, கேள்வி-பதில் பகுதிதான், அனைத்திற்கும் தலையாய அம்சமாக விளங்கி, அந்த செயல்பாட்டிற்கே அர்த்தத்தைக் கொடுக்கிறது. பொதுவாக, எந்தமாதிரியான கேள்விகள், நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், நேர்முகத் தேர்வின்போது, அவற்றை எளிதாகப் புரிந்து, தெளிவாக பதிலளித்து வெற்றிபெற ஏதுவாக இருக்கும். பொதுவாக, 7 வகையான கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும். அவற்றின் விபரங்கள்;


வெளிப்படையான கேள்விகள்


உங்களை இலகுவாக உணரவைத்து, ஊக்கப்படுத்தி பேச வைப்பதற்கே இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும், உங்களை தீவிர சிந்தனைக்குள் தள்ளும் வாய்ப்பை அதிகப்படுத்தவும் இந்தவகை கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,


1. உங்களைப் பற்றி சொல்லுங்கள்


2. உங்களின் விருப்ப விஷயங்கள் மற்றும் செயல்பாடுகள் என்ன?


3. உங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் என்ன?


4. கலப்பு பொருளாதாரத்தின் நன்மைகள் என்ன?


5. இந்திய பொருளாதாரத்தில் பன்னாட்டு கம்பெனிகளின் தாக்கம் எப்படி?


Closed கேள்விகள்


இந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள், முந்தையப் பகுதி கேள்விகளிலிருந்து மாறுபட்டது. உதாரணமாக,


1. உங்கள் படிப்பை எப்போது முடித்தீர்கள்?


2. பட்டப்படிப்பில் உங்களது பாடப்பிரிவு என்ன?


3. உங்களின் முதல் தொழில்முறைப் பயிற்சியை எங்கே பெற்றீர்கள்?


4. உங்களுக்கு டேட்டா ப்ராசஸிங் தெரியுமா?


விசாரணைக் கேள்விகள்


இந்தவகை கேள்விகள், ஒரு தலைப்பு அல்லது விஷயம் பற்றி விரிவாகப் பேசும் பொருட்டு, உங்களை உற்சாகப்படுத்த கேட்கப்படுகின்றன.


Reflective கேள்விகள்


ஒரு இன்டர்வியூவில், நீங்கள் சொன்ன விஷயங்களை, நேர்முகத் தேர்வுகளை நடத்துபவர் புரிந்துகொண்டதை உறுதிசெய்ய இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,


1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், தனியார்மயமாக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?


2. இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன், சரியா?


3. திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றுதானே நீங்கள் கூறுகிறீர்கள்?


Loaded கேள்விகள்


ஒரு கடினமான அல்லது சிக்கலான சூழலை சமாளிக்கும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? என்று சோதித்து அறியும் பொருட்டு, இவ்வகை கேள்விகள் உங்களிடம் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,


1. நீங்கள் மிகவும் குள்ளமாக இருக்கிறீர்கள், இதை ஒரு ஊனமாக நீங்கள் கருதவில்லையா?


2. பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்திலேயே ராமர் கோயில் கட்டப்பட வேண்டுமா?


Hypothetical கேள்விகள்


இத்தகைய கேள்விகளும் Loaded கேள்விகளைப் போலத்தான். ஒரு செயற்கையான சூழ்நிலை உங்களுக்குத் தரப்பட்டு, அதற்கேற்ப நீங்கள் எவ்வாறு முடிவெடுக்கிறீர்கள் என்ற வகையில் உங்களது திறனை சோதிக்க இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,


1. நிறுவனத்தின் லாரி மோதியதால் ஒரு தொழிலாளி காயமடைந்துள்ளார். இதனால் கொதிப்படைந்த இதர தொழிலாளர்கள், நிறுவனத்தின் இதர வாகனங்களை அடித்து நொறுக்க எத்தனிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையை ஒரு மேலதிகாரி என்ற முறையில் எவ்வாறு கையாள்வீர்கள்?


2. உங்கள் சக ஊழியர்களில் ஒருவர், நிறுவனத்திற்கு ஒவ்வாத ஒரு காரியத்தைப் பணத்திற்காக செய்வதை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். சிகிச்சைப் பெறும் தனது நோயாளி தாயாருக்காக அவர் இந்தத் தவறை செய்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியவருகிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?


Leading கேள்விகள்


உங்களிடமிருந்து சாதகமான பதில் வருகிறதா? என்பதை சோதிக்க இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,


1. எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் நமது நிறுவனம் சந்தையில் முன்னனியில் இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?


2. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன என்ற கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?


3. நமது நாட்டின் பொருளாதார அமைப்பில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?


மேற்கூறிய கேள்வி வகைகளை கையாளும் முறைகள்


ஒரு கேள்விக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்ற முறை, நீங்கள் அளிக்கும் பதிலைவிட முக்கியமானது. இதன்மூலம் உங்களது தகவல்தொடர்பு திறன் வெளிப்படுகிறது. கேள்விகளை கையாளும் முறை குறித்து சில விரிவான ஆலோசனைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.


கவனித்தல்


ஒரு நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை சரியாக கவனிக்காத பட்சத்தில், சரியான பதில்களை வழங்க முடியாது. எனவே, கவனம் என்பது மிக முக்கியம். இன்டர்வியூ எடுப்பவர், பேசும்போதே நீங்கள் குறுக்கே பேசக்கூடாது. எதிலும் அவசரப்படக்கூடாது. அவர் முழுவதுமாக பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேற்றப்படுவீர்கள்.


நுட்பம் முக்கியம்


நீங்கள் அளிக்கும் பதிலானது, நுட்பமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். தேதி, நேரம், நபர், இடம் போன்ற விஷயங்களை தெளிவாக தெரிந்துகொண்டு, தவறின்றி பதிலளிக்க வேண்டும். உங்களுக்கு தேதி, நபர் போன்ற நுட்பமான விஷயங்கள் சரியாக தெரியவில்லை எனில், அவற்றை குறிப்பிட வேண்டாம். ஏனெனில், முழுமையற்ற மற்றும் தவறான பதில்கள் உங்களது வாய்ப்பினை குறைக்கலாம். இன்டர்வியூ நடத்துபவரை ஏமாற்ற நினைக்க வேண்டாம். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். தவறான பதிலை தருவதைவிட, பதில் தெரியாது என்று ஒப்புக்கொள்வது நல்லது. அது உங்கள் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தும். ஏனெனில், அனைவருக்கும், அனைத்தும் தெரிந்திருக்காது. உங்கள் குறையை ஒப்புக்கொள்வதில் தவறில்லை.


சுருக்கமாக பதிலளித்தல்


என்ன கேள்வி கேட்கப்படுகிறதோ, அதற்கு ஏற்றவாறு சுருக்கமான, தெளிவான பதிலை கூறுங்கள். கேள்வியை நன்கு கவனித்தல் முக்கியம். நீளமான பதில் சிறப்பான பதில் என்று அர்த்தமல்ல. ஒரு கேள்விக்கு பதிலளிக்க 1 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம், அது மிகவும் சிக்கலான கேள்வியாக இருந்தால் தவிர.


குறிப்பான பதில்


பலர், நேர்முகத் தேர்வில் பதிலளிக்கும்போது, கேள்விக்கு தொடர்பில்லாது விஷயங்களையும் சேர்த்துப் பேசுகின்றனர். இதன்மூலம் கேள்வி கேட்பவரை கவர முயல்கின்றனர். ஆனால் இது தவறு. கேள்விக்கான சரியான பதிலை அளிப்பதே, குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் பொருத்தமானவர் என்ற எண்ணத்தை கேள்வி கேட்பவரிடம் விதைக்கும். சரியான, முறையான மற்றும் சிறப்பான வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது. கேள்விக் கேட்பவரை குழப்பும் விதத்தில் பதிலளிக்க வேண்டாம்.


தெளிவான பதில்


நேர்முகத்தேர்வில் நீங்கள் கூறும் பதிலானது, தெளிவானதாகவும், நேரடியானதாகவும் இருக்க வேண்டும். "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இன்னொருமுறை சொல்ல முடியுமா? போன்ற கேள்விகளை இன்டர்வியூ நடத்துபவர்கள் கேட்காத வண்ணம் உங்களின் பதில் இருக்க வேண்டும். உங்களுடைய மொழித்திறன், உங்களின் தொழில்திறனை பிரதிபலிக்கிறது. எனவே, தெளிவாக பேசத் தெரிந்தவரே, இன்டர்வியூ நடத்துபவர்களை கவர முடியும்.


நேர்மறையாக பதிலளித்தல்


உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை வெளிக்கொணர, வேண்டுமென்றே உங்களிடம் எதிர்மறை கேள்விகள் கேட்கப்படலாம். எனவே, நீங்கள் எதிர்மறை கேள்விகள் கேட்கப்பட்டாலும்கூட, நேர்மறையாகவே பதிலளிக்க வேண்டும். அப்போது, உங்களின் வாய்ப்புகளை நீங்கள் அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.


தர்க்கரீதியான பதில்கள்


உங்களின் தர்க்கரீதியிலான சிந்திக்கும் திறனை அளவிட, அதுதொடர்பான கேள்விகள் கேட்கப்படும். தர்க்கம் மற்றும் பகுத்தறிவற்ற பதில்கள், உங்களின் ஒருங்கிணைக்கப்படாத மற்றும் அமைப்பற்ற ஆளுமைத்திறனை வெளிப்படுத்தும். எனவே, பதிலளிக்கையில் இதுபோன்ற அம்சங்களில் மிகவும் கவனமாக இருக்கவும்.


வழக்கமான கேள்விகள்


ஏறக்குறைய, அனைத்து இன்டர்வியூக்களிலும், சில வழக்கமான கேள்விகள் எப்போதுமே கேட்கப்படும். எனவே, அதுபோன்ற கேள்விகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உங்களின் நண்பர்களை வைத்து, ஒரு மாதிரி இன்டர்வியூ நிகழ்ச்சியையும் நடத்திப் பார்க்கலாம். இதன்மூலம் ஒரு நடைமுறைப் பயிற்சியை நீங்கள் பெறலாம்.


பொதுவாக அனைத்து இன்டர்வியூக்களிலும் கேட்கப்படும் சில கேள்விகள்


1. உங்களைப் பற்றி சொல்லுங்கள்,


2. உங்களின் விருப்பங்கள் மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் என்னென்ன?


3. பணி தொடர்பாக உங்களின் திட்டங்கள் என்னென்ன?


4. நாங்கள் ஏன் உங்களை இந்தப் பணிக்கு அமர்த்துகிறோம்? அல்லது இந்தப் பணிக்கு நீங்கள் எவ்வாறு பொருத்தமானவர்?


5. எங்கள் நிறுவனத்தில் சேர நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்?


6. உங்கள் பணி அனுபவம் குறித்து சொல்லுங்கள்.


7. உங்களைப் பொறுத்தவரை, ஒரு சிறந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்வது என்றால் என்ன?


8. படிப்பில் நீங்கள் செய்த சில சாதனைகளைப் பற்றி கூறுங்கள்


9. இந்தப் பணியை நீங்கள் விரும்புவதற்கான காரணங்கள் என்ன?


10. தற்போது நீங்கள் செய்துவரும் வேலையில் உங்களின் பொறுப்புகள் என்னென்ன?


11. உங்களின் சாதக அம்சங்கள் என்னென்ன?


12. நீங்கள் பணியில் சந்தித்த ஒரு சவாலான பிரச்சினை மற்றும் அதைத் தீர்க்க நீங்கள் கையாண்ட வழிமுறை ஆகியவற்றைப் பற்றி கூறுங்கள்.


13. உங்கள் பலவீனம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?


14. உங்களை நீங்கள் எவ்வாறு மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள்?


15. நீங்கள் ஒரு வழிகாட்டியா? அல்லது வழிநடப்பவரா?


16. எங்கள் நிறுவனத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் பணிபுரிய உத்தேசித்துள்ளீர்கள்?


17. நீங்கள் விரும்புவது முழுநேரப் பணியா? அல்லது பகுதிநேரப் பணியா?


18. சற்று கீழ்நிலைப் பணியாக இருந்தாலும், சிறிதுகாலத்திற்கு அதை ஒப்புக்கொள்வீர்களா?


19. எங்களின் நிறுவனத்தில் எப்போது சேர விரும்புகிறீர்கள்?


இதுபோன்ற கேள்விகளுக்கு, நேர்மறையான, நம்பிக்கையான, சாதுர்யமான, தெளிவான, சுருக்கமான, எளிமையான முறையில் பதிலளிக்க பயிற்சி எடுக்க வேண்டும். பின்னர், வெற்றி தானாக உங்களைத் தேடிவரும்.



2/15/2012

சேகுவாரா.



உறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளிபடும் இளமை, பச்சை நிறத்திலான தொள தொளத்த காற்சடை, பூட்சுகளும், கருப்பு தொப்பியும் அதில் சிகப்பு நட்சத்திரமும் அவரோடு ஒட்டி பிறந்த அம்சங்கள் போல தோன்றின. யார் இவர்? இவர்தான் பல புரட்சிகளை உருவாக்கியவர். உலகெங்கும் உள்ள இளைஞர்களை வசீகரித்து, திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய ஏதோவொன்று மனிதர்களின் இதயத்துக்குள்ளும், மூளைக்குள்ளும் கலந்துவிட்டிருக்கிறது.



அவர்தான் சே குவாரா அல்லது சே என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவாரா. 1928 ஜூன் 14-ஆம் நாள், அர்ஜெண்டினா ரோசாரியோவில் பிறந்த சே, வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆஸ்த்துமா நோயால் அவதி பட்டாலும், உடற்பயிற்சி, வேட்டை, மீன் பிடித்தல், மலையேறுதல் போன்றவற்றில் அதிகம் ஈடுபாடு கொண்டார். 1952-இல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவரான இவர், பிற்காலத்தில் இலட்சிய வீரர் என்று உலகளவில் பேரெடுத்தார். மாணவர் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.


பட்டம் பெற்ற பிறகு, தனது மோட்டார் சைக்கிளிலேயே குவாதமாலாவிற்கு சென்று, அங்கு கம்யூனிச ஆதரவாளராகிய ஜெக்கபோ அர்பென்ஸ் குஸ்மானின் ஆட்சியில் (1951-54), அரசாங்க மருத்துவ சேவகனாக பணிபுரிந்தார். அதோடு அர்பென்ஸ் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்து வந்தார். அர்பென்ஸ் ஆட்சி வீழ்ந்த பிறகு, சேகுவாரா மொக்சிகோவிற்கு சென்று, மார்க்சிஸ்ட் பாப்புலர் சோசலீஸ்ட் கட்சித் தலைவர் வின்செண்ட் லொம்பர்டொவுடன் தொடர்பு கொண்டார். அங்கு சேவிற்கு, அரசு மருத்துவமனையில் டாக்டர், மற்றும் தேசிய பல்கலைகழக மருத்துவ ஆசிரியர் என்று இரண்டு பொருப்புகள் கொடுக்கப்பட்டது.


1956-இல், சே, காஸ்ட்ரோவை எதெச்சையாக சந்தித்தார். காஸ்ட்ரோவின் கொரில்லாப் போரில் ஈர்க்கப்பட்டசேகுவாரா, மருத்துவ சேவையின் பேரில் அப்படையில் இணைந்தார். ஜூலை 1956-இல், மெக்ஸிகன் காவலாளிகளால் பிடிக்கப்பட்ட சேகுவாராவும், தோழர்களும் விடுவிக்கப்பட்டபின், டிசம்பர் 1956-இல் கிரான்மா இலட்சியப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு போராளியாகவும், பின் இராணூவ தளபதியாகவும், அதன் பின் கமாண்டராகவும், காஸ்ட்ரோவிற்கு அடுத்த மனிதராகவும் இருந்த மனிதராகவும் இருந்த சேகுவாராவின் தலைமையில் 1958-இல் சாந்தா கிளாராவை கைப்பற்றினார்கள். 1959 கியூபா புரட்சிக்குப்பின், சேவிற்கு கியூபா குடியுரிமை அளிக்கப்பட்டதோடு, ஹவானாவில் லா கபானா துறைமுகத்தில் கமாண்டராக இருந்தார். பிறகு இராணூவ உத்தரவு பிறப்பிற்கும் துறையின் தலைவராக இருந்து கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தி வந்தார்.


அதைத் தொடர்ந்து, தொழிற்துறை தலைவராகவும், பின் தேசிய வங்கியின் தலைவராகவும், 1961-இல் வர்த்தக அமைச்சராகவும் பதவியேற்றார். தேசியமாக்குவதில் கவனம் செலுத்தி, இறக்குமதிகளைக் குறைத்து, தொழிலாளர்களை அரவணைத்துக் கொண்டார். கியூபாவின் பொருளாதாரம் வெகுவாக மேம்பாட்டைக் கண்டது. இராணுவத்தில் எந்த பொறுப்பும் இல்லாத போதும் சேகுவாரா இராணுவ உடையில், நட்சத்திரம் கொண்ட தொப்பியில், புரட்சிகரமான எழுத்துகளை பிறருக்கும் வாசித்து காட்டும் அந்த காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.


சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல். சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம். அந்த இதயத்தைச் சுட்டுக் கொன்றது அமேரிக்க தலைமையிலான பொலிவிய நாட்டு இராணுவம். அவரது மரணத்தின் தடயங்களையும், அவர் உடலையும் புதைத்து மறைத்தாலும், சேகுவாரா மக்களின் மனதில் இன்னும் எழுந்துக்கொண்டே இருக்கிறார்.


சே குவாரா புரியாதவனுக்கு புதிர். புரிந்தவனுக்கு புரட்சிக்காரன். ஏழைகளை அன்போடு அரவனைப்பான். எதிரிகளை கண்டால் அடியோடு அழித்திடுவான்.


சேகுவாரா இவன் வாழ்க்கை ஏடுகளை படித்தால், படிப்போர் இதயங்களில் போராட்ட குணங்களை விதைப்பான். மருத்துவனான இவன் மனதில் மக்கள் விடிவுக்கு, சமூக மருந்து எது? என்ற கேள்வி எழுந்தது.


பணக்காரர்களுக்கு மருந்தும் மருத்துவ வசதிகளும் பரவலாக கிடைக்கிறது. ஏழைக்கோ, அது ஏன் எட்டாக் கனியாகிறது? ஏழைகள் என்ன மரண தண்டனைக் கைதிகளா?


எதிரிகள் யார் என ஆராய ஆரம்பித்தான். ஓரே சமுதாயத்தில் ஏன் ஏற்ற தாழ்வு? ஆட்சி முறையின் கேடா? சமுதாய அமைப்பு முறையில் கேடா?


உழைக்கும் வர்கத்துக்கு இந்த உலகமே உயில்! என்று எழுதிய நம் பாட்டன், கார்ல் மார்க்ஸ் சொன்ன புத்தியை புத்தகத்தில் படித்தான். அது புதிராக இருந்தது. புரிய தொடங்கியது. புத்தி அது பொழிவடைந்தது.


உலகத்தையே உறுவாக்கும் உழைக்கும் வர்கம், உரிமை இழந்து கிடக்கிறது. உண்மையை மறந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. உட்கார்ந்து திண்ணும் உளுத்துப்போன முதலாளிவர்கம் ஆட்சியமைத்து ஆட்டிப்படைக்கிறது.


வர்க போருக்கு வக்காலத்து வாங்க துணிந்தான் வக்கீலாய் வந்த பிடேல் காஸ்த்ரோவோடு இணைந்தான். சொர்க பூமியை சொர்ப்ப பூமியாக்கிக் கொண்டிருக்கும் பத்திஸ்தாவின் கொடுங்கோலை எதிர்த்து, அமேரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்ட முடிவு செய்தனர்.


ஓர் அர்ஜெண்டீனா மருத்துவன், ஒரு கியூபாவின் வக்கீல். மக்களின் மைந்தன் சேகுவாரா. மன்னின் மைந்தன் பிடேல் காஸ்த்ரோ. மக்களின் நலன் மீட்க போராளியானார்கள்.


கியூபா மக்கள் விடியலுக்காக சிறிய படையோடு சீரிபாய்ந்து கலம் இறங்கினார். போராட்டத்தில் மக்களின் ஆதரவை வென்றனர், கியூபாவில் புரட்சி செய்தனர், அதில் வெற்றி கொண்டனர். அமேரிக்க குள்ள நரிகளையும். முதலாளித்துவ ஓநாய்களையும் விரட்டியடித்தனர்.


கியூபா புரட்சி மட்டும் போதுமா? கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் எல்லை போடனுமா? காஸ்த்ரோ கியூபாவை வழிநடத்தட்டும். தன் வழி உலக வழி. ஒரு புரட்சி போதுமா உலகம் மாற? ஒவ்வொன்றாய் வெடிக்கட்டும் புரட்சிகள் ஆயிரம். மக்கள் தான் விடுதலையின் விழுதுகள். அடிமை சங்கிலியை அருத்தெடுத்து விடியலை வீதிக்கு கொண்டுவரும் விடிவெள்ளி.


எங்கெல்லாம் மக்கள் அடிமைபட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் புரட்சி வீரன் உறுவாக வேண்டும்.


சேகுவாரா இறக்கும் தருவாயில் (09.10.1967) இறுதிவார்த்தையாய் சொன்னது…


"சுடு கோழையே! நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்!"


இன்றும் சே போராடும் ஒவ்வோரு இளைஞனின் இதயத்தில் புரட்சி விதையாய் முளைக்கிறான்.


சே காங்கோவிற்கு புறப்பட்டான். போராடும் போதனைகள் அங்கே போதவில்லை. மீண்டும் கியூபாவிற்கு வந்து புரட்சியை உலகிற்கு கொண்டு சொல்ல முற்பட்டான்.


போலி வேடத்தில் பொலிவியா காட்டிற்கு புகுந்தான். புரட்சி படை அமைத்தான். கொரில்லா போரை துவங்கினான். அமெரிக்கா இவனை அழித்துவிட கங்கனம் கட்டியிருந்தது.


கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது. சேகுவாராவை விடிய விடிய தேடியது. பொலிவிய இராணுவத்தின் உதவியோடு சேகுவாராவை உயிரோடு பிடித்தது. மறுநாள் உயிரை உடலிலிருந்து பிரித்தது. இறந்தான் சே என முதலாளித்துவம் இன்புற்றது. இணையில்லா புரட்சிவீரன் இறந்துவிட்டானா என்று மக்கள் உறைந்து போனார்கள்.


அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! –சேகுவாரா.


2/04/2012

ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காது

சில சமயங்களில் நல்ல ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காது. மென்டரிங் எனும் வார்த்தையை தமிழ்ப்படுத்த முடியாமல் வழிகாட்டுநர், குரு-சீடர் முறை போன்ற தோராயமாய் அதே பொருளைத்தரும் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டியுள்ளது. மிகப்பொருத்தமான மாற்று வார்த்தை கிடைக்காதவரை அதே ஆங்கில வார்த்தைகளை தமிழுக்கு தத்தெடுத்துக்கொள்வது தவறில்லை. மென்டரிங் மிகச்சிறந்த வார்த்தை மட்டுமல்ல, அது ஒரு தத்துவம்; தொடர்செயல். சமீபகாலமாக, நமது நிறுவனத்தில் மென்டரிங் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. நமது செயல்முறைகளிலும் அது பிரதிபளிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தாய், தனது குழந்தைக்கு சாப்பிட, நடக்க, பேச, எழுத சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை இயல்பாய் எதிர்கொள்ளத் தேவையான திறனை விதைக்கும் செயல்முறையை, நமது பணிச்சூழலில் மூத்தப்பணியாளர் இளம் பணியாளருக்கு ஏற்படுத்தித் தருவதே மென்டரிங் எனலாம். ஒரு குருவின் கடமை சீடருக்கு சொல்லித்தருவது இல்லை, சீடர் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்ற தத்துவம் மென்டரிங்குக்கும் மிகப்பொருத்தம். அன்பே சிவம் படத்தில் கமல், மாதவன் மீது தனது கருத்தை திணிக்காமல், அவர் போக்கில் தன்வயப்படுத்தி, சகமனிதர்கள் மீதான பெருங்கருணையை மாதவனிடம் உண்டாக்குவது மென்டரிங் பற்றிய நல்ல பதிவு. “நான் ஒரு எறும்பைக் கொன்றேன், எனது மூன்று குழந்தைகள் அதை அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற ஜென் கவிதையை படித்தபோது, எனக்குள் சிலிர்த்தது. சூழலின் எல்லாப் பக்கத்திலும் நம்மால் காணமுடியாத கண்கள் இருக்கின்றன. அறியாமல் நான் செய்யும் வன்முறையை, தவறை சுற்றிலும் பல கண்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றன. நான் என்னை ஒழுக்கப்படுத்திக்கொள்ளாமல் மென்டரிங் முறையில் நேர்மையாக பங்கெடுக்கமுடியாது என்றே தோன்றியது.
நாம் புழங்கும் சமூகம், நமக்கு மிகமுக்கிய மென்டராக இருந்து வருகிறது. ஒருமுறை வறட்சியின் பிரச்னைகள் குறித்து சிவகங்கை பகுதியில் ஒரு விவசாயியிடம் பேசிக்கொண்டிருந்த போது, “மழை பெஞ்சா நெல்லை விப்போம்; பெய்யலனா நெலத்த விப்போம்” என்று பேச்சுவாக்கில் அவர் கூறியது கேட்டு அசந்துபோனேன். வறட்சி; அதன் விளைவு; அதனை அவர்களின் வாழ்க்கை முறையோடு இயல்பாய் பொருத்திக் கொண்ட பக்குவம் இதையெல்லாம் யோசித்தபோது, அவர்களுக்குச் சொல்ல எந்த செய்தியுமில்லாமல் நான் நின்றிருந்தேன். சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தில், “தெருக்களில் இறங்கித் தேடும்போது, எல்லாம் கிடைக்கும். நமது கேள்விகள் அனைத்துக்கும் தெருக்களில் பதிலுள்ளது” என்ற வசனம் வரும். அது சத்தியமான உண்மை. கிராமத்துக்கு சென்று திரும்பும் ஒவ்வொறு முறையும் கிராமம் எனக்கு ஏதாவதொரு செய்தியை சொல்லித்தந்து அனுப்பும் மென்டாரிங் முறை எப்போதும் உற்சாகமான அனுபவம்.

2/03/2012

முகப்பு நான் கரடி

வாழ்க்கை தான் எவ்வளவு எதிர்பாராமைகள் நிறைந்தது. நமக்கான மகிழ்ச்சியும் ஆபத்தும் அடுத்தடுத்த வினாடிகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதே வாழ்வை இன்னும் சுவாரசியமாக்குகிறது.  இது மனிதருக்குத் தான் என்றில்லை. உலகின் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். இந்த காணொளியில் ஒரு கரடிக்குட்டியின் உயிர் போராட்டம், பதைபதைப்பை தாண்டி பல படிப்பினைகளை நமக்கு தருகிறது. இது முழுமையான ஒரே வீச்சில் அமைந்த காணொளியாக இல்லாமல் சின்னச் சின்ன எடிட்டிங் மற்றும் சில டிங்கரிங் வேலை செய்யப்பட்டாலும் உணவுக்கான போராட்டத்தை விட உயிருக்கான போராட்டம் வலிமை மிக்கது என்பதை பலமாக நிறுபிக்கிறது. கடைசி சில வினாடிகள் மனதை நெகிழச்செய்பவை. இந்த வீடியோ ...

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8N2FXeDHfM8&noredirect=1 

 

நன்றி : பொதுஜனம்    

2/01/2012

பிரச்சனையும் தீர்வுகளும்…



நமது வாழ்க்கையும் பணிச்சூழலும் பிரச்சனைகளால் நிரம்பியவை. உண்மையில் அவை நமது வாழ்க்கையை அர்த்தமாக்க அவசியமானவை கூட. நீ உனது பயணத்தில் எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை என்றால் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம் என்ற வாசகத்தை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது
பிரச்சனையை தீர்ப்பதில் எப்போதும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அந்த பிரச்சனையை ஆதாரமாக வைத்து தீர்வை நோக்கிப் பயணித்தல், மற்றொன்று தீர்வை ஆதாரமாகக் கொண்டு பிரச்சனையை சந்தித்தல். எடுத்துக்காட்டாக கீழே கொடுக்கப்பட்ட நிகழ்வை கவனியுங்கள்:
முதன்முதலில் நாசா நிறுவனம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் போது விண்வெளி நிகழ்வுகளை காகிதத்தில் பதிவு செய்யும் பணியில் சிக்கலை சந்தித்தனர். அப்போதிருந்த பேனா, வெற்றிடத்தில் ஈர்ப்பு விசை இல்லாத்தால் வேலை செய்யாது. விண்வெளியின் வெற்றிடத்திலும் வேலைசெய்யும் பேனாவினை கண்டறிவதில் பெரிய தொழில்நுட்பம் தேவைப்பட்டது.
 பிரச்சனை மையத் தீர்வு: நாசா ஏறக்குறைய 120 இலட்சம் டாலர்கள் செலவு செய்து 10 வருட கால இடைவெளியில் வெற்றிடத்திலும் வேலை செய்யும் பேனாவினை கண்டறிந்தனர். அந்த வகைப் பேனா வான்வெளி, ஆழ்கடல் என எல்லா நிலையிலும் வேலை செய்யும்.
தீர்வு மையத் தீர்வு: இதே பிரச்சனையை ரஷ்யர்கள் சந்தித்தபோது அவர்கள் கண்டறிந்த உடனடியான மற்றும் எளிமையான தீர்வு… “பென்சிலை உபயோகித்தல்…”
பெரும்பாலான மேலாண்மைத் தத்துவங்கள், இரண்டாவது முறையை வலியுருத்துகின்றன. நாம் பிரச்சனையை மையமாகக் கொண்டியங்கும் போது தீர்வினை எளிமைப்படுத்தாமல் சிக்கலாக்கிக்கொள்கிறோம். ஆனால் தீர்வினை மையங்கொண்டு இயங்கும் போது, மாற்று வழிகளில் நமது சிந்தனை செயல்படச்செய்கிறது. உண்மைதானே!