தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/25/2010

வாழ்வை வளமாகிய நண்பனே --- நூல்கள்!


தோழனே
இது புத்தகமல்ல
இதைத் தொடுபவன்
என்னையே தொடுகிறான்
நீயும் நானும் நெருக்கமாகிறோம்
இதோ...இதன் பக்கங்களிலிருந்து
உன் கரங்களுக்குத் தாவுகிறேன்.


"புல்லின் இதழ்கள்" என்ற கவிதையின் மூலம் புதுக்கவிதையை உலகத்திற்கு அடையாளப்படுத்திய வால்ட்விட்மனின் கவிதை வரிகள் இவை. புத்தகத்தின் மகத்துவத்தை உணர்த்துகின்ற உன்னத வரிகள் இவை.(எனக்கு பிடித்தமான கவிதை)


புத்தகம்...


இதயங்களை இணைக்கும் நடப்புப் பாலம்
அறியாமை என்னும் இருட்டை நீக்கும் சூரியன்
அறிவுத் தாகத்தைத் தணிக்கும் அதிசய நீரூற்று
ஞானம் தரும் போதி மரம் ....


இப்படி எழுதிக் கொண்டே இருக்கலாம். புத்தகங்களை நேசிப்பவர்கள் வாழ்க்கையை நேசிப்பவரகளாகிறார்கள். அறிவை விரிவு செய்வதற்கும், புரட்டிப் போடுகின்ற வாழ்க்கையின் வேக  சுழற்சியில் உலர்ந்து போகின்ற மனசை ஈரப்படுத்திக் கொள்வதற்கும், வற்றிப் போய்க் கொண்டிருக்கின்ற அன்பு, ஈகை, கருணை, பாசம், பரிவு போன்ற நல்லுணர்வுகளை  மாற்றிக் கொள்வதற்கும், அறியப்படாத உலகை அறிவதற்கும், மனிதர்களின் சாதனை அறிவின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் புத்தகம   பெரிதும் துணை புரிகின்றது.


"புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது'' என்பார் "பிளேட்டோ."


தான் வாசித்த, நேசித்த புத்தக அறைக்கு "மன நல மருத்துவ நிலையம்'' என்று பெயர் வைத்தான் எகிப்து நாட்டு அரசன் "பாரோ".


"மன நல மருத்துவ நிலையம்'' - எவ்வளவு அர்த்தம் நிறைந்த மொழி. மனிதனை முழுமையடையச் செய்து சரியான பாதைக்குத் திரும்ப வைப்பது புத்தகம்தான். திரும்பிப் பார்க்க வைப்பதும் புத்தகம்தான். அதனால்தான் புத்தகங்களை காலமென்னும் கடலில் கட்டப்பட்டிருக்கின்ற கலங்கரை தீபங்கள் என்று புகழ்கின்றோம்.


படிக்கும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய சிந்தனைகளைத் தரக்கூடிய ஆற்றல் புத்தகத்திற்கு உண்டு. புத்தகங்கள் சிறந்த நண்பர்கள். "உன் நண்பன் யாரெனக் காட்டு. உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பது பழமொழி. நீ படிக்கின்ற புத்தகங்களைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன்''. இது இன்றைய புது மொழி.(எப்படி நாங்களும் பஞ்ச் வசனம் பேசுவோம் )


அறிவுச் சுரங்கமாய்த் திகழும் புத்தகங்களைப் படிப்பது நல்லதுதான். அதைவிட நல்லது தேடித் தேடிப் படிப்பது. "தேடுங்கள் கண்டடைவீர்கள்'' என்பது விவிலிய வாக்கு. அந்தத் தேடலில் தத்துவ ஞானியானவர்கள் பலர். அவர்களுள் ஒருவரை உங்களுக்கு அடையாளப்படுத்துகிறேன்.


அவர் யார் என்று அறிய உங்களுக்கு ஆவல்தானே, இதோ ஒரு இடுக்கையின்  வழியாக அவரை அறிமுகப் படுத்துகிறேன்.


அந்தக் கடிதத்தைப் படித்ததும் விழிகள் வியப்பால் விரிந்தன. அப்படியென்ன அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது? அது சாதாரணக் கடிதமல்ல. இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்குச் சென்ற கடிதம். அந்தக் கடிதம் சொன்ன செய்தி இதுதான்.


இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் ரஷ்யாவிற்கு வருகிறார். இரண்டு நாட்களுக்கு அவர் தங்குவதற்கு இரட்டைக் கட்டில் உள்ள அறையை ஒதுக்கி வைக்கவும்.


வியப்பால் விழிகள் விரியக் காரணம் இந்த வாசகம்தான். துணைக்குடியரசுத் தலைவரோ திருமணம் ஆகாதவர். தனிச்செயலரைத் தவிர வேறுயாரும் கூட வரவில்லை. தனிச் செயலருக்குத் தனியறை ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டது. இந்தச் சூழலில் இருவர்படுக்கும் வசதியுடன் அறை கேட்டதுதான் வியப்பிற்கே காரணம்.


கடிதத்தில் கேட்டிருந்தபடியே அறையை அவருக்கு ஒதுக்கி வைத்திருந்தார்கள். முதல் நாள் இரவு முடிந்து மறுநாள் காலை அறையைத் திறந்தபோதுதான் விடை கிடைத்தது.(தப்பு தப்ப நினைக்காதீங்க )அவர் படுத்திருந்த பகுதியைத் தவிர கட்டிலின் மற்ற இடங்களில் எல்லாம் புத்தகங்கள். குவியல் குவியலாய்ப் புத்தகங்கள். தினந்தோறும் குறைந்தது. நான்கு மணி நேரம் படிப்பதைக் கடமையாகக் கொண்டவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். வெளி நாட்டுப் பயணத்தின்போதும் அவருடன் கூடவே புத்தக மூட்டையும் பயணிக்கும். அந்தப் புத்தகங்கள்தான் அவரைச் சிறந்த அறிஞராக்கி, தலைசிறந்த ஆசானாக்கியது. தத்துவ ஞானியாகவும் மாற்றியது. அதனால்தான் அவரது பிறந்தநாளான செப்டம்பர் ஐந்தாம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி  மகிழ்கின்றோம்.





ஒரு மனிதனுடைய குணநலப் பண்புகளை உயர்த்தி, துய்மைப்படுத்தி சிந்திக்கவும், சிறந்த முறையில் வாழவும் செய்பவை புத்தகங்கள்தான்.


புத்தகத்தை வாசித்ததன் காரணமாக தங்களுக்குள் இருக்கும் கதவு திறக்கப்பட்டு பலர் மகான்களாகவும், மகாத்மாக்களாகவும் மாறி இருக்கின்றார்கள்.


மோகன்தாஸ் காந்தியாக இருந்தவரை மகாத்மா காந்தியடிகளாக மாற்றியது - ஜான்ரஸ்கின் எழுதிய "கடையனுக்கும் கடைத் தேற்றம்'' என்ற புத்தகம்.


வெங்கட்ராமனாக இருந்த வரை மகான் ஸ்ரீரமணமகரிஷியாக மாற்றியது, சேக்கிழார் எழுதிய 'பெரிய புராணம்' என்ற புத்தகம்.


33 ஆண்டுகள் லண்டன் நூலகத்தில் கிடந்து கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்'' என்ற புத்தகம் உலக சமுதாயத்தை, உழைக்கும் வர்க்கத்தை உயர்த்திப்பிடித்தது.(அட நம்ம கம்யூனிஸ்ட் )


டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', 'அன்னகரீனா'வும் உலக இலக்கியத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றவை. இப்படி மன மாற்றத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் புத்தகங்களே சாட்சியங்களாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.


காளிதாசன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள் இப்போது இல்லை. ஆனால் அவர் எழுதிய 'சகுந்தலம்'' இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கின்றது.


வாழ்வாங்கு வாழ வழி சொன்ன வள்ளுவரும், கவித்தலைவன் கம்பரும் இன்று இல்லை. ஆனால் அவர்கள் எழுதிய திருக்குறள் இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. இராமாயணம் இலக்கியச் சுவைக்கு மகுடம் சூட்டி நிற்கின்றது. இதுதான் புத்தகத்தின் மகத்துவம்.


"புத்தகங்கள் காலத்தின் விதை நெல்'' என்பார் பாவேந்தர் பாரதிதாசன். ஆம் ஒரு விதை நெல் தான் பல நெல் மணிகளை உற்பத்தி செய்கின்றன. புத்தகங்களில் பொதிந்திருக்கின்ற கருத்துக்களும் விதை நெல்லாய்த்தான் பலரை உருவாக்குகின்றது.(இப்படித்தான் நம்ம கவிஞர் உருவானங்க )


உலக வரலாற்றில் இடம் பெற்ற மாவீரன் அலெக்ஸாண்டர் உலகையே வெல்ல வேண்டும் என்று கனவு கண்ட உலகத்தின் முதல் தன்னம்பிக்கையாளன். அவனது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.


அலெக்ஸாண்டர் சிறுவனாக இருந்தபோது போர்ப் பயிற்சியைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்கின்றார் தந்தை பிலிப். ஒவ்வொரு பயிற்சியின்போதும் வெற்றியை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்த அலெக்சாண்டர் ஒரு நாள் தோற்றுப் போகிறான்.


எதற்காகத் தோற்றாய்? தந்தை பிலிப் கேட்கிறார்.


"அப்பா எப்போதும் நானே ஜெயித்து விடுவதால் இதோ இவன் அழுது விடுகிறான். அதனால்தான் சந்தோஷத்திற்காக ஒரு முறை தோற்றது போல் நடித்தேன்'' என்றான் அலெக்ஸாண்டர்.


மகனுக்குள்ளிருந்த மனிதாபிமானத்தை ரசித்தாலும் அவர் "மகனே! உன் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடு. ஆனால் யாருக்காகவும் உன் வெற்றியை மட்டும் விட்டுக் கொடுக்காதே. இந்த உலகம் வெற்றி பெற்றவர்களை மட்டுமே பேசும்'' என்றார்.


யாருக்காகவும் உன் வெற்றியை விட்டுக் கொடுக்காதே, இந்த மந்திரச் சொல்லைப் படித்தபோதும், ஒவ்வொரு முறை படிக்கின்றபோதும் இருள்படிந்த என் விழிகளில் வெளிச்சத்தின் வெற்றியை உணர்ந்தேன் . நான் புரட்டிய இந்தப் புத்தகம் என்னையும் புரட்டியதை உணர்ந்தேன்.


தூங்கச் செய்வது புத்தகமல்ல. எந்தப் புத்தகம் நம்மைத் தூங்க விடாமல் செய்கிறதோ அந்தப் புத்தகம் தானே நல்ல புத்தகம். இதை மெய்யாகவே உணர்ந்தேன். அலெக்ஸாண்டரின் வரலாற்றில் மட்டுமல்ல, இன்னொரு நிகழ்வு.


இத்தாலி மக்களின் எழுச்சித்தலைவன் கரிபால்டியிடம் ஒரு வீரன் கேட்டான். "நாங்கள் போரிட்டால் எங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது. காயமும் மரணமும்தானே?''


கரிபால்டி சொன்னான். "நீங்கள் காயப்படலாம், மரணிக்க நேரலாம். ஆனால் இத்தாலி விடுதலை பெறும்.''


கடைசி வார்த்தையைப் பாருங்கள். இத்தாலி விடுதலை பெறும், எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை. இப்படி நல்ல புத்தகங்களைப் படிக்கப் படிக்க அவை நம்மையும் புரட்டிக் கொண்டே இருக்கும்.


என் இனிய நண்பனே, நல்ல புத்தகங்களைத் தேடித் தேடிப் படியுங்கள். வாழ்க்கைக்கான நல்ல வழிகள் தெரியும். எந்த வழியில் போவது என்று தெரியாமல் திகைப்பவர்களுக்குப் புத்தகங்கள் நல்ல திசைகாட்டிகள். திசைகள் தெரிந்து விட்டால் தேடுவது எளிதில் கிடைத்துவிடும்.


முன்பெல்லாம் இளைஞர்களின் கைகளில் புத்தகங்கள் இருக்கும். ஆளுமை சம்பந்தப்பட்ட அடையாளமாக இருந்தது. இன்றைக்கு எங்கே அந்த இளைஞர்கள்?


குழந்தைகளுக்கு வயலின் கற்றுத் தருகிறார்கள், கராத்தே கற்றுத் தருகிறார்கள். நாட்டியம் கற்றுத் தருகிறார்கள். நல்ல புத்தகங்களை வாசிக்கக் கற்றுத் தருகிறார்களா? பாடப் புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லும் பெற்றோர்களை என்ன சொல்வது? புத்தகங்களின் நடுவேதான் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.(ஐயோ நான் சொன்னது பள்ளி புத்தகம் இல்லப்பா )
"புத்தகங்களுக்காகச் செலவழிப்பது செலவல்ல மூலதனம்'' என்பார் அறிஞர் எமர்சன். எனவே புதிய தலைமுறையை உருவாக்கப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம்.

விரும்பிய புத்தகத்தை விலை கொடுத்து
வாங்கிப் படிப்பவன் தான் வாசகன், வாங்குபவனிடம்
வாங்கிப்படிப்பவன் வாசகன் அல்ல யாசகன்
என்பார் கவிஞர் வாலி.
புத்தகத்தை யாசிக்காமல், வாங்கி வாசிப்போம். வாசிக்காத நாட்களெல்லாம் சுவாசிக்காத நாட்களே!

( நண்பர்களே உங்கள் உறவினர் ,நண்பர்கள் ,மற்றவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் பரிசு ஏதாவது கொடுத்தால் புத்தகமாக கொடுங்கள் அது அவர்களுக்கு உபோயகமாகவும்,நமக்கு புத்தகமேல் காதல் ஏற்படும்,இதை நான் தொடர்ந்து வருகிறேன் என்பதையும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்  )

இடுக்கை : அ.ராமநாதன்                                    நன்றி : எனது நூலகம்

5/22/2010

முதல் விந்திலேயே தொடங்கி விடுகிறதா தற்கொலை எண்ணம்?

கொடைக்கானல் SUICIDE FALLS

எல்லோருக்கும் எப்போதாவது, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது தற்கொலை எண்ணம் தோன்றியிருக்கலாம்.
உதாரணத்திற்கு காந்தியடிகள் ´சத்திய சோதனை´ என்னும் புத்தகத்தில் தான் தற்கொலை செய்து கொள்ள முயன்ற நிகழ்ச்சியை குறிப்பிட்டு கூறும் போது, "அதை இப்போது நினைத்தாலும் நகைச்சுவையாக இருக்கிறது" என்பார்.

அவரைப்போல் தான் நம் அனுபவமும், இப்போது நினைத்தாலும் சிரித்துவிட்டு போகிறோம்.
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகளா? அல்லது கோழைகளா? தற்கொலைக்கு முயன்று வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் காரியத்தில் சாதித்து வெற்றி கொண்டவர்களா? என்ற ஆராய்ச்சியும் எனக்கு அடிக்கடி வருவது உண்டு.

தற்கொலை என்னும் போது வாழத் துப்புக்கெட்டவன், தோல்வியைத் தாங்காதவன் என்ற கண்ணோட்டத்திலேயே தற்கொலைகளைப் பற்றிய விமர்சனங்கள் வைக்கின்றோம்.
எனக்கும் அப்படித்தான் தற்கொலை பற்றிய விமர்சனம் முதலில் இருந்தது. ஆனால் பக்குவப்பட்ட மனத்திடத்துடன் காரண காரியங்களை ஆராயும் போது, வரலாற்று நிகழ்வுகளை அலசிப்பார்க்கும் போது, தற்கொலை செய்து கொண்டவர்களின் உணர்வுகளை விவரிக்க முடியாததாகவே இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரில் தோற்றதும் ஜப்பானிய ராணுவத் தளபதிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர். அது தோல்வியின் தாக்கமா? தேசீய உணர்வின் தாக்கமா? என்ற கேள்வி எழுகின்றது.(நான் கேள்விப்பட்டு தெரிந்தது )

‘சில்வியா ப்ளாத்’ மிகச் சிறந்த பெண் கவிஞர்.
அவரின் கவிதைகளில் வரும் வரிகளும் ஒவ்வொன்றும் தன்ணுணர்ச்சி உடையவை. மிகுந்த வீரியத்துடன் சிதறடிக்கும் சொற்கள். ஆனால் வாழ்க்கையில் அவர் தேர்ந்தெடுத்த கொடூரமான முடிவு தற்கொலை செய்து கொண்டது.
அந்த தற்கொலையைக் கூட வித்தியாசமான முறையில் செய்திருந்தார். தன் தலையை oven-க்குள் வைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.(இவரை சமீபத்தில் போட்டோவில் பார்த்து தெரிந்துகொண்டேன் )

இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது...
சில வருடங்களுக்கு முன் நண்பரின் உறவினர் வீட்டுக்கு  சென்றிருந்த போது  வீட்டில் இளம்பெண் போட்டோவுக்கு மாலை போடப்பட்டிருந்தது. எப்படி இறந்தார் என்ற போது அவர்கள் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது.

21- வயதுடைய அந்த பெண் ஜன்னலில் நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார். அவரின் அண்ணன் திட்டி உள்ளே போகச் சொல்லி இருக்கிறார். அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தில் அந்த பெண் பாத்ருமில் தாழ்போட்டுக் கொண்டு மண்ணென்னையை ஊற்றி தீ வைத்துக் கொண்டுவிட்டார்.

தீயில் கருகி கதறி துடித்த அவரை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போவதற்குள் உடல் முழுவதும் தீயில் கருகி போய் இருந்ததாம். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, டாக்டரிடம் அந்த பெண்,
´என்னைக் காப்பாற்றுங்கள்´ என்று கதறியிருக்கிறார். ஏதோ கோபத்தில் சட்டென இப்படி செய்துவிட்டதாக போலீசில் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதன்பின் 6-மணிநேரத்திற்குள் இறந்திருக்கிறார்.

அதே போல் மற்றொரு சம்பவம். 85-வயது மதிக்கத்தக்க வயதான பெண்மணி. தன் கணவரின் பென்சன் பணம் வந்தவுடன் மொத்தமாக பிடுங்கிக் கொள்ளும் மருமகள். மகனின் அலட்சியம் தன் சொந்த வீட்டிலேயே ஒருமுலையில் முடக்கப்பட்ட கொடூரம்.
மருமகளிடம் மோசமான வார்த்தைகளில் அர்ச்சனை. அடிக்கடி திட்டு வாங்கிக் கொண்டு ஒருவேளை சாப்பாட்டுக்காக அவமானப்பட்டுக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல் காலையில் அதே சண்டை. அளவு கடந்த அவமரியாதையில் வாழப்பிடிக்காத அவர் "இப்படி இருப்பதை விட செத்து போய்விடலாம்" என்று சொல்ல...
மருமகள், "உனக்கு அவ்வளவு சீக்கிரத்தில் சாவு வராது, நீயே ஏதாவது செய்து கொண்டால் தான் உண்டு என்று சொல்ல..."
மாமியார் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.(நாள்தாளில் ஒன்றில் படித்தது)

´சில்வியா ப்ளாத்´ மரணம் மிக திட்டமிட்டு நிதானமாக செய்திருக்கிறார் என்கிறார்கள். மாமியாரின் தற்கொலை மனஉளைச்சல். பிறரை சார்ந்து இருக்க வேண்டிய நிலையின் இயலாமையில் எடுத்த முடிவாக இருக்கிறது.
இளம் பெண்ணின் மரணம் தான் சடாரென ஏற்பட்ட கோபத்தில் எடுத்த முடிவு.

சில நொடிகளில் தடுமாறும் உணர்வுகள் என்னென்ன விளைவுகளை நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களும் பாதிப்பை கொடுத்துவிடுகிறது!

தங்கள் உயிரை அழித்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் இல்லையென சட்டம் சொல்கிறது. ஆனால் இவர்களின் சூழல்களை ஏற்றுக் கொள்ளவோ, அதை தாங்கும் வலிமை இல்லாமல் இருக்கும்போதோ, நிதானமாக எடுக்கும் தற்கொலை முடிவுகளையும், அதை விமர்சிக்கும் உரிமையும் நமக்கில்லை என்று தான் தோன்றுகிறது.

ஆம், மனிதனுக்கு எங்கே இருந்து வருகிறது தற்கொலை எண்ணம்?
"முதல் விந்திலேயே தொடங்கி விடுகிறதா தற்கொலை எண்ணம்?"

இடுக்கை : அ.ராமநாதன்

5/17/2010

நம்பினால் நம்புங்கள் .........(நான் படித்தது)















முன்னால் அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் ஆபிரகாம் லிங்கனும், ஜான் எப். கென்னடியும். இதைத் தவிர இவர்களுக்குள் சில நம்பமுடியாத ஒற்றுமைகள் உள்ளன. நம்பினால் நம்புங்கள்.....


அமெரிக்க காங்கிரஸ் கீழ்சபைக்கு லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு       1846.
அதே இடத்துக்கு கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1946.


லிங்கன், கென்னடி இரண்டு பெயர்களும் ஆங்கிலத்தில் ஏழு எழுத்துக்களை கொண்டுள்ளன.

 வெள்ளை மாளிகையில் வசித்த போது இரண்டு அதிபர்களின் மனைவியரும் தங்கள் மகனை இழ்ந்தனர்.


இருவரும் கொல்லப்பட்டது வெள்ளிகிழமையில் தான்.


இருவரும் தலையில் சுடப்பட்டு இறந்தனர்.


லிங்கன் கொல்லப்பட்டது போர்டு திரையரங்கில்.
கென்னடி கொல்லப்பட்டது போர்டு காரில்.


லிங்கனின் செகரட்டரி பெயர் கென்னடி.
கென்னடியின் செகரட்டாரி பெயர் லிங்கன்.


இருவருமே தென் பகுதி அமெரிக்கர்களால் (Southern part of USA) கொல்லப்பட்டனர்.


இருவருக்கு அடுத்து பதவிக்கு வந்தவர்களும் தென் பகுதியைச் சார்ந்தவர்கள்.


லிங்கனுக்கு அடுத்து பதவிக்கு வந்தவர் ஆன்ட்ரூ ஜான்ஸன்.
கென்னடிக்கு அடுத்து பதவிக்கு வந்தவர் லின்டன் ஜான்ஸன்.


ஆன்ட்ரூ ஜான்ஸன் பிறந்த ஆண்டு 1808.
லின்டன் ஜான்ஸன் பிறந்த ஆண்டு 1908.


லிங்கனை கொன்ற ஜான் வில்கின்ஸ் பூத் பிறந்தது 1839ல்.
கென்னடியை கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் பிறந்தது 1939ல்.


இரு கொலையாளிகளின் பெயர்களும் மூன்று வார்த்தைகளையும் பதினைந்து எழுத்துக்களையும் கொண்டிருந்தன.

பூத் திரையரங்கில் இருந்து தப்பி ஓடி குடோனில் பிடிபட்டான்.
ஆஸ்வால்ட் குடோனில் இருந்து தப்பி ஓடி திரையரங்கில் பிடிபட்டான்.

நம்பமுடிகிறதா?

இடுக்கை : அ.ராமநாதன்


5/14/2010

பில்கேட்ஸ்... !!!!

எனது சிறு வயதிலிருந்து வெற்றியாளர்களை பற்றி படிப்பது பிடித்தமான ஓன்று .அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் "பில்கேட்ஸ் " பற்றி நான் படித்து தெரிந்து கொண்டவற்றை நானும் , நமது வாசகரும்  இணைந்து தமிழில் தந்து உள்ளோம்  .


வெற்றியாளர்களில் இரண்டு வகை...


உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை...


பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।'உழைக்க மட்டுமல்ல... உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்...' - இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.


பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் 'பாட'த்தைத் தொடங்கிவிட்டார்। கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் 'லேக்சைட் (Lake Side) பள்ளி'யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர்.


அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான 'பேசிக்'கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், 'இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது' என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர்.அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। 'அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை' என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.


பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு'க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!


கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடும் 'டேட்டா என்ட்ரி' வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை.


துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, 'டிராஃப்- ஓ -டேட்டா' (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, 'இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்' என்று அமெ-ரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.


இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் 'பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்' இதழில் 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800' என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், 'உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது' என்று அள்ளிவிட்டனர்.


உண்மையில் அவர்களிடம் 'அல்டெய்ர்' ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.
'எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்' என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் உருவானது.இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்-தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்।
இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் 'பேசிக்' புரோகிராமோடு நிற்காமல் 'ஃபோர்ட்ரான்', 'கோபால்' ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார்.


அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்-யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ।பி।எம்। மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்பு-முனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்-வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.
குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ।பி।எம்., நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்தது.


அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்... அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆப-ரேட்டிங் சிஸ்டம்...


இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை.
சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிபாரிசு செய்தது। ஆனால், அந்த இன்னொரு நிறுவனத்-துடன் ஐ।பி.எம்மால் உடன்பட முடியவில்லை. பந்து திரும்பவும் பில்கேட்ஸ் கோர்ட்டுக்கே வந்தது.

இந்தமுறை “சரி” என்றார் கேட்ஸ்। அதுதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை!


இத்தனை குறுகிய காலத்தில் 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கு தெரியும்। 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த 'க்யூடாஸ்' (QDOS) என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற விலைக்கு வாங்கி-னார்। அதில் மராமத்து வேலைகள் செய்து,


தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி 'டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்' (ஞிளிஷி) என்ற பெயரில் ஐ।பி.எம். கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். 'பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி' என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது. தன் தயாரிப்புதான் பவுடர் பூசி 'ஐ.பி.எம்'- கம்ப்யூட்டரோடு சக்கைபோடு போடுகிறது என்று 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியபோது, பில்கேட்ஸ் பணத்தால் அடித்து, அந்த நிறுவனத்தின் வாயை அடைத்தார்.


உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு என்ற தத்துவம் அவருக்குக் கைவந்ததானது!
ஐ।பி।எம். நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த சாமர்த்தியம்தான் பில்கேட்ஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான பாடம்.


என்னதான் 'ஐ।பி.எம்.' நிறுவனம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால், அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. ஐ.பி.எம்-க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கியபோது அவை சாஃப்ட்வேருக்காக பில்கேட்ஸை நாடின. பிற நிறுவனங்களுக்கு விற்கக்-கூடாது என்று ஒப்பந்தம் போடாததால் 'ஐ.பி.எம்.' கையைப் பிசைந்துகொண்டு நிற்க, பில்கேட்ஸ் டாலர் மழையில் நனையத் தொடங்கினார். தூறல், மழையாகி, அதுவே அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.


கீ போர்டு மூலம் மட்டுமே கட்டளைகளை உள்ளிடக்கூடிய 'டாஸ் சிஸ்ட'த்தில் 'மைக்ரோசாஃப்ட்' இருந்த நேரத்தில் 'மவுஸை' வைத்து திரையில் தெரியும் கட்டளைகளை 'க்ளிக்' செய்து செயல்படுத்தும் புதிய தளத்துக்குப் போயிருந்தது போட்டி நிறுவனமான 'ஆப்பிள்'. 1984-ல் அதன் 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டர் 'மவுஸ்' உடன் வெளிவந்தது.
'மேகின்டாஷ்' கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப 'எம்.எஸ்.வேர்ட்'டை (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது.


ஆனால், அந்த முயற்சியின்போது மவுஸால் கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்தின் நுணுக்கங்களை காப்பியடித்து, அதை வைத்து 'விண்டோஸ்' என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை தயாரித்ததாக 'மைக்ரோசாஃப்ட்' மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவும் செய்தது. ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோட்ட 'மைக்ரோசாஃப்ட்'டில் இருந்து, 1990- 'விண்டோஸ்- 3।0' வெளியானது. அதைப் பிரபலப்படுத்த 'மைக்ரோசாஃப்ட்' தயாரித்து அளித்த 'எக்ஸெல்', 'வேர்ட்', 'பவர் பாயின்ட்' ஆகியவற்றை உள்ளடக்கிய 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' மென்பொருட்கள் பெரிதும் பயன்பட்டது. 'ஆப்பிள்' கம்ப்யூட்டரில் கூட 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' வெற்றிகரமாக இயங்கியது. 'விண்டோஸ்- 3.0' நல்ல வெற்றி. 1995-ல் வந்த 'விண்டோஸ் -95' அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றிருந்தார். 'விண்டோஸி'ன் நதிமூலம் 'ஆப்பிள்'தான் என்பது மறந்தே போயிற்று.


இப்படி 'ஆபரேட்டிங் சிஸ்டம்' பந்தயத்தில் கவனம் செலுத்திய பில்கேட்ஸ், இணையப் புரட்சியைத் தவறவிட்டார்। இணையதளங்களை மேய்வதற்கு 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவிகிதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள்.


அதனால் என்ன... பில்கேட்ஸ் கையில்தான் ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கிறதே... உருவாக்கத் தவறினால் உருவாக்கியவனை அழுத்து என்று!'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' என்ற உலாவியைத் தயாரித்தார்। மக்கள் கவனத்தை இந்தப் பக்கம் திருப்ப அவர் எடுத்த ஆயுதம்... இலவசம்! 'விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட'த்தோடு 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை' இலவசமாகக் கொடுத்தார். விளைவைச் சொல்லவேண்டுமா... கொஞ்ச நாளில் 'நெட்ஸ்கேப்' பின்னுக்குத் தள்ளப்பட்டது.


'விண்டோஸ்' என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில்கேட்ஸ் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று 'ஆபரேட்டிங் சிஸ்டம்' தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், சாஃப்ட்வேருக்கு முன்-னால் சட்டம் கொஞ்சம் பலவீனமாகத்-தான் பேசி-யது. பிறகு, அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்-பட்டது.


இன்றும் சாஃப்ட்வேர் கொடி உயரத்தான் பறக்கிறது... பில்கேட்ஸ் சொல்லும் தெளிவான பாடம் இதுதான்... 'உழைக்கத் தயங்காதே... ஒரு கட்டத்துக்கு மேல் போனபிறகு உண்மையாக உழைப்பவனுடைய உழைப்பை தனதாக்கிக் கொள்ளவும் தயங்காதே...' இதுதான் சக்சஸ் ஃபார்முலா! அதற்கு வாழும் உதாரணமாக இருக்-கிறார் பில்கேட்ஸ்!


2006-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்। அதன்பின் 'சேர்மன்' என்ற அளவில் மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி, மேற்பார்வை செலுத்திவந்த பில்கேட்ஸ், தற்போது முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்। பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்। ஆனால், பில்கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு இவரை பற்றி இப்பதிவில் முடிக்கிறோம் ,மீண்டும் சந்திப்போம்.....

இடுக்கை : அ.ராமநாதன்                                                 உதவி : சூர்யாதேவா



5/10/2010

இது எப்படி சாத்தியம்? இது முரண்பாடல்லவா?


உலகத்தில் பெரும்பாலானோர் தங்களை மிக நியாயமானவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெரிய வருத்தமே அடுத்தவர்கள் அவர்களிடம் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது தான். அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளாதவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோa அவர்களும் தங்களை மிக நியாயமானவர்களாகவே நினைத்து மற்றவர்கள் தங்களிடம் அப்படி இல்லை என்று வருந்துவது தான் ஆச்சரியம். “நல்லதிற்குக் காலம் இல்லை”, “எல்லோரும் நம்மைப் போலவே நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது நம் தவறு தான்” என்ற வசனங்கள் பலர் வாயிலிருந்தும் வருகின்றன. அவை வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. மனப்பூர்வமாக அப்படி பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.


இது எப்படி சாத்தியம்? இது முரண்பாடல்லவா? இதில் யார் சரி, யார் தவறு? என்பது போன்ற கேள்விகள் சமூக அக்கறை உள்ளவர்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. பிரச்னை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் மாறுபட்ட அளவுகோலில் தான் என்பது புரியும்.


குடும்பத்தில் மகள் சொற்படி மருமகன் கேட்பாரானால் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். மகன் மருமகள் சொற்படி நடந்தால் அவன் பெண்டாட்டி தாசன்.


நம் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றின் மீது நமக்கு இருக்கும் அபரிமிதமான பற்றிற்குப் பெயர் பக்தி. அதுவே மற்றவர் அவர் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றில் வைக்கும் அபரிமிதமான பற்றிற்கு நாம் வைக்கும் பெயர் வெறி.


நம் வீட்டில் பேப்பர் போடும் பயன் வேலையில் சிறிது அலட்சியம் செய்தாலும், வராமல்  இருந்தாலும் , விடுப்பு எடுத்துக் கொண்டாலும் குமுறுகிறோம். நாம் அலுவலகத்தில் வேலை செய்யும் போது நம் அளவுகோல் முழுவதுமாக மாறிவிடுகிறது. அதையே நாம் நம் அலுவலகத்தில் செய்யும் போது சிறிதும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறோம்.


நம்முடைய வெற்றிகள், நல்ல குணங்கள், புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கு பறைசாற்றத் துடிக்கிறோம். அடுத்தவர்கள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அடுத்தவர்கள் நம்மிடம் அதையே செய்தால் அது தற்புகழ்ச்சியாகத் தெரிகிறது. மற்றவர்கள் நம் அருமை பெருமைகளை அறிய மறுத்தால் அது சின்ன புத்தியாகவோ, பொறாமையாகவோ தெரிகிறது. ஆனால் அடுத்தவர்களுடைய அருமை பெருமைகளை அறிய நமக்கு சுத்தமாக ஆர்வமிருப்பதில்லை.


நம் வெற்றிகளுக்குக் காரணம் நம் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான். மற்றவர்களுடைய வெற்றிகளுக்குக் காரணமாக நாம் காண்பது அவர்களது அதிர்ஷ்டத்தையும், அவர்களுக்குக் கிடைத்த ஆதரவையும் தான். அதுவே தோல்வியானால் அந்த அளவுகோல்கள் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. நம் தோல்விக்குக் காரணம் துரதிர்ஷ்டமும் சூழ்நிலையும். மற்றவர் தோல்விக்குக் காரணம் முட்டாள்தனமும், முயற்சிகளில் உள்ள குறைபாடுகளும் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.


நம் வீட்டு ரகசியங்களை மூடி வைக்க நாம் படாத பாடு படுகிறோம். மற்றவர்கள் அறிந்து விடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால் அடுத்த வீட்டு ரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நாம் நாம் தயங்குவதேயில்லை. அடுத்தவர்கள் அதை மறைக்கச் செய்யும் முயற்சிகளைப் பெரிய குற்றமாக நாம் விமரிசிப்பதும் உண்டு.


மற்றவர்கள் உதவ முடிந்த நிலையில் இருந்தாலும் நமக்கு உதவுவதில்லை என்று மனம் குமுறும் நாம் அடுத்தவர்களுக்கு உதவ முடியும் நிலையில் இருக்கும் போது கண்டும் காணாமல் போய் விடுகிறோம். அந்த நேரத்தில் நாம் அதைப் பற்றி சிந்திப்பதேயில்லை.(நேற்று முன்தினம் கோவையில் நடந்த சம்பவம் சிறந்த உதாரணம் )


தங்கள் பெற்றோரை அலட்சியம் செய்தும், புறக்கணித்தும் சிறிதும் மன உறுத்தல் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் தங்கள் குழந்தைகள் அதையே தங்களுக்குச் செய்தால் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறதை நாம் பல இடங்களில் காண்கிறோம். எனக்குத் தெரிந்த மூதாட்டி ஒருவர் தன் மூத்த மகனால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர். சிறு உதவிகள் கூட அவனிடம் இருந்து அவருக்கு கிடைத்ததில்லை. ஒரு முறை அவர் அவன் வீட்டுக்குச் சென்றிருந்த போது டிவியில் மன்னன் திரைப்படத்தின் பாடல் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே....” என்ற பாடல் ஒளிபரப்பாகியதாம். அதைப் பார்த்து அவர் மகன் தன் மகனிடம் சொன்னானாம். “பாருடா தாய்ப் பாசம் என்பது இது தான். நீயும் உன் அம்மாவிடம் இந்த பாசத்தை வயதான காலத்தில் காட்ட வேண்டும்”


அந்த மூதாட்டி என்னிடம் பின்னொரு நாள் அதைச் சொல்லி விட்டு வேடிக்கையாகச் சொன்னார். “எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கு என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டே அதைச் சொல்லும் போது சிறிது கூட உறுத்தலோ, வெட்கமோ இல்லாமல் இருந்தது தான்.”


அவர் சொன்னது வியக்கத்தக்க சம்பவம் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் தான் இன்றைய யதார்த்தம். நமக்குத் தகுந்தாற்போல் எல்லாவற்றையும் அளப்பதும் எடைபோடுவதும் நம்மிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.


உலகில் உள்ள பல பிரச்னைகளுக்குக் காரணம் இந்த அளவுகோல் வித்தியாசங்களே. சுயநலம் மிக்க உலகாய் நாம் இந்த உலகத்தைக் காண்கிறோம். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களில் கூட நாமும் அதே போல் இருக்க முற்படுகிறோம் என்பதை உணரத் தவறுகிறோம். அதனால் தான் தவறுகள் செய்தாலும் அந்த உணர்வே இல்லாமல், அந்த உண்மையே நமக்கு உறைக்காமல் இருக்கக் காரணம் இந்த இரண்டு விதமான அளப்பீடுகளை நாம் நமக்குள் வைத்திருப்பது தான்.


உலகம் பெரும்பாலான சமயங்களில் நமது பிரதிபிம்பமாகவே இருக்கிறது. குற்றம் சாட்டி சுட்டிக் காட்டும் சமயங்களில் மற்ற மூன்று விரல்கள் நம்மையே காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவரைப் பற்றி குறை கூறும் முன் அவர் இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நேர்மையாக யோசிக்க முடிந்தால், ஆளுக்கொரு அளவுகோல் வைத்து அளக்காமல் நாம் நமக்கும் அடுத்தவருக்கும் ஒரே அளவுகோல் வைத்திருந்தால் மட்டுமே நாம் நியாயமாய் நடந்து கொள்பவர்களாவோம். அப்போது மட்டுமே சகோதரத்துவம் உண்மையாக நம்மிடையே மலரும். விமரிசனங்கள் குறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்தல் வளரும்.

குறிப்பு : இதுவரை நானும் அளவுகோலுடன் வாழ்ந்து வந்தேன் இனி என்னுளும் மாற்றங்கள் தெரியவரும் எனமுடிவுடன் தான் இதை எழுதி முடித்தேன் ............

எழுத்து & சிந்தனை : அ.ராமநாதன்  

5/08/2010

பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?

அன்றாட வாழ்வில் மனிதர்களுக்கு பல விதமான பிரச்சினைகள் வருவதுண்டு. அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு ஒரே மாதிரியாக அமைந்து விட முடியாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அதே சமயத்தில், பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கான வழி எளிதான ஒன்றுதான் என்று நம்புகிறேன். அந்த வழி என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில் பிரச்சினை நிகழும் காலகட்டத்தில் நாம் எப்படியெல்லாம் நடந்து கொள்கின்றோம் என்று பார்ப்போம். சில உதாரணங்கள் கீழே.

கஷ்டத்தில் (அல்லது டென்ஷன் ஆக) இருக்கும் போது உணவின் மீது கவனம் குறைந்து விடுகின்றது. ஒன்று சாப்பாட்டின் அளவு குறைந்து போகின்றது. அல்லது ஆரோக்கியமில்லாத ஆகாரங்கள் உள்ளே போகின்றன.

தூக்க நேரங்கள் மாறிப்போய் விடுகின்றன. நிறைய டிவி அல்லது சினிமா பார்க்கின்றோம். லேட்டாக படுக்கைக்கு செல்கிறோம். விடிந்த பிறகும் தூக்கம் களைந்த பின்னரும் கூட படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கின்றோம். உடற்பயிற்சி செய்வது நின்று போகின்றது. லேட்டாக அலுவலகத்திற்கு கிளம்புகின்றோம். அல்லது கட் அடிக்கிறோம்.

எல்லோர் மீதும் கோபம் கோபமாய் வருகின்றது. நிறைய பேரிடம் சண்டைக்குப் போகின்றோம். சாலையில் முரட்டுத்தனமாக வாகனம் ஒட்டுகின்றோம்.

ஒரு சிலர் இன்னும் சில படி மேலே சென்று மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாகி பிரச்சினையை மறக்க முயற்சிக்கின்றனர்.

மேலே சொன்னவையெல்லாம் உடலையும் மனதையும் இன்னமும் தளர்ச்சியாக்கி பிரச்சினைகளை சமாளிக்கும் (அல்லது தீர்வு காணும்) திறனை குறைக்கின்றனவே தவிர எந்த வகையிலும் நமக்கு உதவியாக இருப்பதில்லை. மேலும் கடைசியாக சொன்ன சில விஷயங்கள் நம்மை மீளமுடியாத அபாயங்களுக்கு தள்ளி விடவும் வாய்ப்புக்கள் உள்ளன.

சமீபத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என்னை ஒரு பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி விட, என்னுடைய இயல்பான பழக்க வழக்கங்கள் (பதிவுகள் உட்பட) பலவும் மாறிப்போய் விட்டன. ஒரு வித மந்தமான மனநிலை புதிய சிந்தனைகளை வரவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தன. அப்போது என்னை சந்திக்க வந்த ஒருவர் சில கருத்துக்களைக் கூறினார். அவரது பாசிட்டிவான சில கேள்விகள் எனது மனநிலையை வெகுவாக மாற்றியது.

'அதாவது எண்ணங்களை பதிவு செய்வது (Documentation of thoughts) என்ற ஒரு நல்ல விஷயத்தை (பதிவு வலை) ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டார். பிரச்சினைகள் வரும் போகும். ஆனால் அவற்றை பற்றியெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிராமல் நம்மிடமுள்ள நல்ல பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார். உடனடியாக எழுத ஆரம்பியுங்கள் என்றும் கூறினார்.'

எனக்கு புரிந்த வரையில் எவ்வளவு பெரிய கடுமையான காலகட்டமாக இருந்தாலும், ஒருவரது நல்ல பழக்க வழக்கங்களை நிறுத்தி விடக் கூடாது. சொல்லப் போனால் அந்த காலகட்டத்தில் நல்ல விஷயங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக கூட செய்யலாம். உதாரணம், உடற்பயிற்சி, நல்ல புத்தகங்கள், அன்றாட கடமைகளை பெண்டிங் வைக்காதது, சுகாதாரமான உணவு, சிறிய சுற்றுலா போன்றவை. இவை மனதிற்கு சற்று ஓய்வு தருவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் பலத்தை தருகின்றன.(சுற்றுலா என்ற பெயரில் கேரளா சென்று வந்தேன் )

மொத்தத்தில் எந்த ஒரு பிரச்சினையுமே நமது வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. நாமில்லா விட்டால் பிரச்சினைகளும் இல்லை. ஒரு சிஸ்டத்தை விட அதன் சப் சிஸ்டம் ஒருக்காலும் பெரியதாக இருக்க முடியாது. எனவே நாம் எப்போதுமே நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சினையையும் விட பெரியவர்கள்தான்.

பிரச்சினையை வாழ்வின் ஒரு சிறிய அங்கமாக மட்டுமே பார்க்க வேண்டும். வாழ்வை விட பெரியது (larger than life) என்ற தேவையற்ற ஒரு அங்கீகாரத்தை பிரச்சினைகளுக்கு கொடுக்காமல் இருந்தாலே அவற்றை ஓரளவுக்கு எளிதாக சமாளித்துவிடலாம் என்று நம்புகிறேன்.

நன்றி! நன்றி !!

குறிப்பு : இந்த பதிவை எழுதும் வரை பிரச்சினைகள் முற்றுப் பெற வில்லை என்றாலும், இயல்பான உற்சாகமான வாழ்க்கைக்கு ஓரளவுக்கு முழுமையாக திரும்பியது பிரச்சினைக்கான பாதி தீர்வை ஏற்கனவே தந்து விட்டது.

எழுத்து & சிந்தனை : அ.ராமநாதன்                               நன்றி : என் நலன் விரும்பி

குற்றமே காணும் வியாதி

குற்றம் காணும் வியாதி என்ற தலைப்பில் எனது சிந்தனையை பதிவு செய்கிறேன் ........

எனது நண்பர்  வேலையை முடித்து விட்டு களைப்புடன் வீடு வந்து சேர்ந்த போது அவர் மனைவி அவருடைய ஆடையில் நீளமான கறுப்பு முடி ஒன்றைப் பார்த்து விட வீட்டில் பிரசசனை ஏற்பட்டு விடுகிறது.


“உங்களுக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது” என்று கூறி அவள் அவரிடம்  சண்டை பிடிக்கிறாள்.(இதுவும் குற்றம் தான்)


“சந்தை வழியாக வந்தேன். அங்கு மக்கள் நெரிசலில் எப்படியோ இந்த முடி என் ஆடையில் ஒட்டியிருக்கலாம்.” என்று அவர் சொல்லிப் பார்த்தார். அவர் மனைவியோ அதை நம்பவில்லை. கண்ணீர் விட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள்.


மறு நாள் வேலை விட்டு வீடு திரும்பிய அவரிடம்  ஆடையில் ஒரு நரைத்த முடி இருந்தது. அதைப் பார்த்த அவர் மனைவி முந்தைய நாளை விட அதிகமாக அழுது புலம்பினாள். “ஐயோ காமாந்தகா! நேற்று இளம்பெண். இன்று தலை நரைத்த பெண்ணா? இப்படி கேவலமாய் மாறி விட்டாயே. உன் மனைவி என்று சொல்லவே எனக்கு நா கூசுகிறது” என்று கூறி சுவரில் தலையை முட்டிக் கொண்டாள்.


மறு நாள் வேலையை விட்டு வரும் போது அவர் உஷாராக இருந்தார். சந்தை வழியே வருவதைத் தவிர்த்து ஜன நடமாட்டமே இல்லாத வழியாக சுற்றி வீட்டுக்கு வந்தவர் வீட்டை நெருங்கும் முன் தன் ஆடைகளைக் கழற்றி நன்றாக உதறி எந்த முடியும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.


அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவர் மனைவி மிகக் கவனமாக அவருடைய ஆடைகளைப் பரிசோதனை செய்து பார்த்தாள். ஒரு தலை முடியும் கிடைக்கவில்லை. அவர்  நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால் அவர் மனைவியோ தரையில் விழுந்து புரண்டு அழ ஆரம்பித்தாள்.


“அடப்பாவி.... போயும் போயும் இன்று மொட்டையடித்த பெண்ணுடன் இருந்து விட்டு வந்திருக்கிறாயே. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறதே உன் நடத்தை....”
அவர்  விக்கித்து நின்றார். (இது நாம் கேள்விபட்டது தான்)


சில மனிதர்களிடம் நல்ல பெயர் வாங்குவது சுலபமல்ல. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் கூட திரித்துப் பார்த்து, தவறாகப் புரிந்து கொண்டு குற்றம் காணுவதில் அவர்கள் சமர்த்தர்கள். அவர்களிடம் நல்ல பெயரை வாங்க முயற்சி செய்வது மலைக்கல்லில் கிணறு தோண்ட முற்படுவது போல . அது போன்ற மனிதர்களின் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் அலட்சியப்படுத்துவதே நமக்கு நல்லது.


மற்றவர்களிடம் இந்தக் குறையான மனோபாவம் இருந்தால் அலட்சியப்படுத்தும் அதே நேரம் இந்த மனோபாவம் நம்மிடம் உள்ளதா என்பதை நமக்குள்ளே சுயபரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம். குற்றமே சொல்லக் கூடாது என்பதல்ல நம் வாதம். குற்றம் மட்டுமே சொல்லக்கூடாது என்று தான் கூறுகிறோம். ஏனென்றால் குற்றம் மட்டுமே காண்பது ஒரு வித நோயே ஆகும். தவறாகப் பார்த்து, தவறாகவே புரிந்து கொள்வது பார்வைக் கோளாறோடு மூளைக்கோளாறும் சேர்ந்து கொள்வது போலத் தான். இந்த நோய் நம்மிடம் இருக்குமானால் நாமும் நிம்மதியாக இருக்க முடியாது, நம்மைச் சேர்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விட முடியாது.


எல்லோரிடமும் குற்றம் காண்கிறோமா இல்லையோ நம்மில் பலரும் சிலரிடமாவது எப்போதும் குற்றம் காணும் தவறைச் செய்கிறோம். வெறுப்பினாலோ, பொறாமையினாலோ, முன்னேயே மனதில் பதித்து வைத்திருக்கும் அபிப்பிராயங்களாலோ நாம் சிலரிடம் அந்தத் தவறைச் செய்ய முற்படுகிறோம். காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல் நாம் அவர்களிடம் காண்பதெல்லாம் தவறுகளாகவே இருக்கிறது.


சில சமயங்களில் நம் ஆரம்பப் பரிசோதனையில் அந்த நபர் தவறுகள் பல செய்திருக்கலாம். ஆனால் தவறுகள் செய்த மனிதன் தொடர்ந்து தவறுகளை மட்டுமே செய்வான் என்று நினைப்பது முட்டாள்தனமே அல்லவா? சில சமயங்களில் அந்த மனிதன் மாற ஆரம்பித்திருக்கலாம். ஆனாலும் அந்த மாறுதல்களை அலட்சியம் செய்து நம் பழைய கண்ணோட்டத்திலேயே அந்த மனிதன் செய்வதில் எல்லாம் தவறுகளையே காண்போமானால் நாமும் அந்தக் குற்றம் காணும் நோயாளியாகவே இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.


மனிதன் என்றுமே குறை நிறைகளின் கலவையே. அந்தக் குறை நிறைகளின் விகிதங்கள் வேறு வேறாக இருந்தாலும் அந்த இரண்டும் ஒருவனிடம் எப்போதும் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அப்படி இருக்கையில் அடுத்தவர்கள் குறைகளை மிகவும் பூதாகாரப்படுத்துவது நியாயமற்றது.


ஒரு விலைமகளைக் கற்கள் கொண்டு எறிய வந்த கூட்டத்தினரிடம் ஏசுநாதர் சொன்னார். “உங்களில் யார் குற்றமே செய்யாதவர்களோ அவர்கள் முதல் கல்லை அவள் மீது வீசட்டும்”. அன்று அந்த விலைமகள் மீது எந்த ஒரு கல்லும் விழவில்லை. காரணம் ஏசுநாதரின் அந்த வார்த்தைகள் ஒவ்வொருவரின் அந்தராத்மாவையும் தொட்டு சுயபரிசோதனை செய்யத் தூண்டி இருப்பது தான். தாங்களும் எத்தனையோ குற்றங்கள் செய்திருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது தான்.


இன்றும் அந்த சுயபரிசோதனை நம் எல்லோருக்கும் அவசியமே. நம்முடைய தவறுகளை மட்டுமே வைத்து நாம் அளக்கப்பட்டால் அது நியாயமற்றது என்று உரக்கச் சொல்வோம் அல்லவா? அதே போல நியாயமற்ற முறையில் நாம் அடுத்தவர்களையும் அளக்க வேண்டாமே.


மற்றவர்களிடம் இருக்கும் நிறைகளை அதிகம் காணுங்கள். அவற்றைப் பிரதானப்படுத்துங்கள். அவற்றைப் பாராட்டுங்கள். அப்படிச் செய்தீர்களானால் கண்டிப்பாக அவர்கள் உங்களிடம் மேலும் காட்டுவதற்காகவாவது, உங்களிடம் பாராட்டுகள் பெறுவதற்காகவாவது தங்கள் நிறைகளை அதிகரித்துக் கொள்வார்கள். தானாக அவர்கள் குறைகள் குறையும். குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டி வந்தாலும் அதைச் சுருக்கமாக, மென்மையாகச் சுட்டிக் காட்டி பின் அந்த பேச்சையே விட்டு விடுங்கள். அதுவும் அவர்களது குறைகளை நீக்க அவர்களைத் தூண்டும்.


அப்படியில்லாமால் குறைகளை மட்டுமே காண்பவர்களாக நீங்கள் இருந்து விட்டால் “என்ன செய்தாலும் இதே வசைபாடல் தானே” என்கிற மனோபாவம் மற்றவகளுக்கு வந்து விடும். பின் அவர்கள் உங்கள் பேச்சை அலட்சியம் செய்ய ஆரம்பிப்பதுடன் அந்தக் குறைகளை தங்களிடமிருந்து நீக்கிக் கொள்ளும் முயற்சியையும் எடுக்க மாட்டார்கள்.


எனவே குறைகளையே அதிகம் ஒருவரிடம் காணும் முன்பு சிறிது யோசிப்போமா?


எழுத்து & சிந்தனை : அ.ராமநாதன்                                         நன்றி: நேசன்

5/05/2010

பேச வழியமைத்து தந்த வள்ளுவர்

சொற்கள் மிக மிக வலிமையானவை.(அதிலும் தமிழ் சொற்களை பற்றி  சொல்லவா  வேண்டும் ) அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பெறாத வெற்றிகள் இல்லை. அவற்றை முட்டாள்தனமாகப் பயன்படுத்துபவர்கள் படாத கஷ்டங்கள் இல்லை. பேச்சையே மூலதனமாக வைத்து நாட்டின் ஆட்சியையே பிடித்தவர்களை நாம் அறிவோம். சரியாகப் பேசத் தெரியாமல் இருப்பதெல்லாம் இழந்தவர்களையும் நாம் நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம்.

அந்த அளவு முக்கியமான பேச்சுக் கலை பற்றி வள்ளுவர் பல இடங்களில் விளக்கி உள்ளார். பொதுவாக சில விஷயங்களை அந்தந்த அதிகாரங்களிலேயே விளக்கும் அவர், பேச்சைப் பற்றி பரவலாகப் பல இடங்களில் சொல்கிறார்.


எப்படிப் பேச வேண்டும்?


மிகவும் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும்


சொல்லுக சொல்லில் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து (645)


(ஒரு சொல்லைச் சொல்லும் போது அதை விடச் சிறந்த பொருத்தமான சொல் இல்லாதவாறு தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்.)


வள்ளுவர் சொல்வது போல் பேசும் முன் சொற்களைத் தெளிவாகத் தேர்ந்தெடுக்கப் பழகிக் கொண்டால் பேச்சில் சொற்குற்றமோ, பொருள் குற்றமோ வர வாய்ப்பே இல்லை.


நன்மை தரும் விஷயங்களையே பேச வேண்டும். அதுவே தர்மம் என்கிறார் வள்ளுவர்.


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இல்லாத சொலல். (291)


(ஒருபோதும் சிறிதளவேனும் தீமை இல்லாத சொற்களைச் சொல்வதே வாய்மை எனப்படும்.)


மேலும் தீமை இல்லாதபடி பேசுவது, அடுத்தவர் மனதைப்
புண்படுத்தாமல் இருப்பதால், அன்பும் நட்பும் கெட்டுவிடாமல்
பாதுகாக்கிறது.


அவசியமானதை ரத்தினச் சுருக்கமாகப் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
பேசிக் கொண்டே போவதை அறிவுக் குறைபாடாகக் கருதுகிறார் அவர்.




எப்படிப் பேசக் கூடாது?


அடுத்தவர் மனம் புண்படும்படியாக பேசக் கூடாது என்கிறார். ஏனென்றால்


தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு (130)

(தீயினால் சுட்ட புண் வெளியே வடு தெரிந்தாலும் காலப்போக்கில் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் கடுமையான சொற்களால் சுட்ட வடு என்றுமே ஆறாது).


எத்தனையோ தீராத பகைக்கு முக்கிய காரணமாக இருப்ப து புண்படுத்தும் சில அனாவசிய வார்த்தைகளே.


கடுமையான சொற்களைப் பேசுவது கூடாது என்கிறார் வள்ளுவர். அது அர்த்தமற்றது என்றும் முட்டாள்தனமானது என்றும் தன் பாணியில் அழகான உவமைகளுடன் கூறுகிறார் பாருங்கள்.


இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன் கொலொ
வன்சொல் வழங்குவது (99)


(இனிமையான சொற்கள் இன்பம் தருவதைக் காண்கின்றவன் அதற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயனைக் கருதியோ என்று வள்ளுவரே ஆச்சரியப்படுகிறார்.)


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (100)
(இனிய சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களைப் பயன்படுத்துவது கனிகள் இருக்கையில் காய்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒப்பானது). பல நேரங்களில் கடுமையான சொற்களுக்கு அவசியமே இருப்பதில்லை. சொல்லி விட்ட சொல்லைத் திரும்பப் பெறும் வாய்ப்பும் நமக்கில்லை என்பதால் நமக்கோ அடுத்தவர்க்கோ பலனைத் தராத, துன்பத்தை மட்டுமே தருகிற சுடு சொற்களை நம் பேச்சிலிருந்து நீக்கி விடலாமே.


பயனில்லாத சொற்களைச் சொல்வது தவறு என்றால் அதை விவரித்துச் சொல்வதை இங்கிதமில்லாத தன்மை, அறமில்லாத தன்மை என்று கடுமையாக வள்ளுவர் விமரிசிக்கிறார்.



இதற்கு எத்தனையோ தினசரி உதாரணங்களை நாம் பார்க்க முடியும். தேவையற்ற, யாருக்கும் பலனளிக்காத விஷயங்களை விரிவாகப் பேசுபவன் அதன் மூலம் தன் தரத்தை மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்கிறான்.



எதை எங்கே பேசக் கூடாது?


தெரியாத விஷயங்களைப் பேசக் கூடாது. அதுவும் தெரிந்தவர்கள் முன் பேசவே கூடாது என்கிறார் வள்ளுவர். பேசி முட்டாள் என்பதை நிரூபிப்பதை விட அமைதியாக இருந்து நல்ல பெயரை வாங்கிக் கொள்வது நல்லது என்கிறார்.


கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாதிருக்கப் பெறின் (403)

(கற்றவர் முன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்களேயானால்
கல்லாதவர்களும் நல்லவர்களே ஆவர்). மேலும் யாரிடம் கேட்டுத் தெரிந்து
கொள்ள வேண்டுமோ அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அங்கே உளறிக் கொட்டி அறிவின்மையை பறைசாட்டுவது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா?


நல்ல பேச்சிற்கு என்ன பலன்?


நன்மை தரும் நல்ல பேச்சு கேட்பவருக்கு தக்க சமயத்தில் தவறி விடாமல்
காத்துக் கொள்ள உதவும் என்கிறார் வள்ளுவர்.


இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
ஒழுக்கமுடையார் வாய்ச் சொல். (415)


(ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள் வழுக்கும் சேற்று நிலத்தில் ஊன்று கோல் போல் தளர்ந்த சமயம் உதவும்.) வாழ்க்கையில் வழுக்கி விழாமல் இருக்க அறிவார்ந்த அனுபவஸ்தர்களின் வார்த்தைகளை விடச் சிறந்த ஊன்றுகோல் கிடையாது. அவை பல இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டும்.


கேட்பவருக்குப் பலன் அதுவென்றால் பேசுபவருக்கு என்ன பலன்? நன்மையான பேச்சுகளை நல்ல விதமாகச் சொல்பவரை உலகமே பின்பற்றி நடக்கும் என்கிறார் வள்ளுவர்.


மொத்தத்தில் நல்லதை மட்டுமே, சுருக்கமாக, இனிமையாக, மற்றவருக்குப் பயன் தரும் வண்ணம் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். நாம் அப்படிப் பேசப் பழகிக் கொண்டால் அது அடுத்தவர்களுக்கு நல்லது, நமக்கு மிக மிக நல்லது.

குறிப்பு : நாம் பேசும் அரட்டை அல்லது வீண்பேச்சு இவை எல்லாம் நம்மை வாயாடி (அ) வாயாடன்  என முகம் சுளிக்க வைக்கும் என்பதையும் நினைவில் கொள்க ....

இடுக்கை : அ.ராமநாதன்            நன்றி : நமது புனித நூல் திருக்குறள் ..


5/03/2010

நமது வாசகரின் நகைச்சுவை பகுதி



1. படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....

ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’னு...

(லாஸ்ட் பெஞ்ச் அஸோஸியேசன்)


2) நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...


நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?


நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!


3) வாரணம் ஆயிரம்... மெட்ராஸ் பாஷையில.....


இந்தாமே மால்னி! நாந்தாமே கிஷ்ணன்! நா உன்னாண்ட இத்த


சொல்லியே ஆவுனும்... ஏன்னா நீ அவ்ளோ சோக்காக் கீற! இங்க எந்த


ஒரு பேமானியும் இவ்ளோ சோக்காப் பாத்துருக்க மாட்டான்! அப்பால நான்


உன்ன டாவடுக்கிறேன்!!


4) ஒரு வியக்க வைக்கும் உண்மை சம்பவம்.....


1872 ஆம் ஆண்டு X ஏர்லைன்ஸ் விமானமும், Y ஏர்லைன்ஸ் விமானமும்


நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன! 1976 ஆம் ஆண்டு அதே


கம்பெனியின் மற்ற விமானங்கள் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக்


கொண்டன!


ஒருவராலும் காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.


கடைசியில் 2009 ஆம் ஆண்டு நாஸா அதற்காண காரணத்தைக்


கண்டுப்பிடித்தது!


அது என்னன்னா....?
?
?
?
?
?
“ஒரு தடவ முட்டிட்டா கொம்பு முளச்ரும்ல?!?”
(நோ...நோ... அழக்கூடாது! )


5) பிராண்டி + தண்ணீர்: கிட்னியைப் பாதிக்கிறது..


ரம் + தண்ணீர்: குடலைப் பாதிக்கிறது..


விஸ்கி + தண்ணீர்: இதயத்தைப் பாதிக்கிறது..


ஜின் + தண்ணீர்: மூளையைப் பாதிக்கிறது..


தண்ணீரில்தான் எதோ பிரச்சனை! அதனால் தண்ணீரைக் கலக்காதீர்கள்!!


6) கொஞ்சம் ஆங்கிலத்தைப் பார்ப்போம்...


A) RHYTHM is the longest word without vowels...


B) Word GIRL appears only once in the Bible...


C) Only word that has 2 letters each used 3 times is DEEDED...


D) The only 15 letter word can be spelt without repeating a letter is


UNCOPYRIGHTABLE


7) ஒரு வயதான மனிதரின் டி-ஷர்ட்’ல் எழுதி இருந்த அழகான


வாசகம்:


“I am not 60 Years old! I am Sweet 16 years with 44 years Experience”


அதுதாங்க தன்னம்பிக்கை என்பது!


8) “லவ்" பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்....
ஆனா, “லவ்" பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்.....
--தேவதாஸ்..


9) ஆசிரியர்: பசங்களா! யானை பெருசா? இல்ல எறும்பு பெருசா?
மாணவர்கள்: சார்! அப்படியெல்லாம் சும்மா சொல்லிட முடியாது... டேட்
ஆப் பெர்த் வேணும்....


10) தன்னை அறிந்தவன்
”ஆசை" படமாட்டான்...


உலகை அறிந்தவன்
”கோப" படமாட்டான்....


இதை இரண்டையும் உணர்ந்தவன்
”கஷ்டப்" படமாட்டான்.....

 நன்றி : திரு.மோகன்ராசு -கோவை

எனது பார்வையில் சுறா - விமர்சனம்

        விஜயின் ஐம்பதாவது படம். சன் பிக்சர்ஸ், என தமிழ் நாடே கோலாகலமாய் எதிர்பார்த்திருத்த படம். சுமார் 600  சென்டர்களில் வெளியிடப்பட்டிருக்கும் படம்.
     படம் முழுவதும் விஜய்யின் புகழ் பாடுவதையே குறிக்கோளாகக் கொண்டு கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் சுறா,புறா, நல்லவன், சத்ரியன், சாணக்யன் என்றெல்லாம் துதி பாடுகிறார்கள். முதல் பாதி முழுவதும் இதே வேலை தான் பாடுகிற ஆட்கள் தான் வேறு. நடுவே லூசுத்தனமான காதல், பாட்டு என்று குறிப்பிட்ட இடைவேளையில் வந்து ஆடிவிட்டு போகிறார்கள். நடு நடுவே வடிவேலுவுடன், விஜய் சேர்ந்து கிச்சு, கிச்சு மூட்டி சிரிக்க வைக்க பார்க்கிறார்கள். வழக்கமான ஒரு வில்லன், அரசியல்வாதி, ஊரையே போட்டு உலையில் வைப்பவன், நம்ம விஜயிடம் மட்டும் வசனம் பேசியே மாய்கிறார். அவ்வப்போது, அவன் சாதாரண ஆள் இல்லைடா என்பது போன்ற சொம்படிக்கும் வசனங்களை பேசிவிட்டு, விஜய்க்கு வெற்றி வாய்ப்பை கொடுத்துவிட்டு செத்துப் போகிறார். ஸோ..
விஜய் கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறார். சில பல ஷாட்டுகளில் அழகாக இருக்கிறார். நான் நடந்தால், தஞ்சாவூரு பாட்டிற்கு ஜிம்னாஸ்டிக் கலந்த ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் மனுஷன். இது ஒன்று போதும் விஜய் ரசிகர்களுக்கு மனதை தேற்றிக் கொண்டாட.. அதிலும் நிஜமாகவே தஞ்சாவூரு பாட்டில் சுமார் ஒரு நிமிடத்துக்கு தொடர்ந்து ஒரே ஷாட்டில் அவர் போடும் ஆட்டம் தூள்.
       தமன்னா வழக்கமான பெரிய ஹீரோக்கள் படங்களில் வருவதை போல லூசுப் பெண்ணாக வந்து மூன்று பாட்டுக்கு ஆடிவிட்டு போகிறார். வடிவேலு- எஸ்.பி.ராஜ்குமார் காம்பினேஷனில் ஒரு காலத்தில் நிறைய காமெடிகள் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தது. இப்போது சுத்தமாக ட்ரையின் ஆகிவிட்டது போலருக்கு. முடியல.
வில்லன் மகதீரா பட வில்லன். பாவம் அவரு என்ன செய்வாரு..? விஜய் படத்தில வில்லனுக்கு என்ன பெருசா வேலை இருந்திட முடியும்?. சத்ரியன், சாணக்யன் என்று பேசிய வசனத்துக்கெல்லாம் இவரும் அவ்வப்போது அதற்கான பொழிப்புறையை கொடுத்துவிட்டு சாகிறார்.
        ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை.மணிசர்மாவின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான தெலுங்கு ட்யூனாக இருந்தாலும் தாளம் போட வைக்கிறது. டான்மாக்ஸின் எடிட்டிங் பாடல்களில் ஆண்டனியின் நினைவை ஊட்டுகிறது.
     கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். எஸ்.பி.ராஜ்குமார். எப்பாடு பட்டாவது கொஞ்சமாவது முனைந்து புத்திசாலித்தனமான, சுவாரஸ்யமான காட்சிகளை வைத்துவிடக்கூடாது அதெல்லாம் விஜய் படம் பாக்கிறவங்களுக்கு இது போதும் என்று முடிவு செய்து கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டு திரைக்கதை பண்ணியிருக்கிறார். இவர்களின் குறிக்கோள், விஜயின் அரசியல் பிரவேசங்களுக்கு சொம்படிக்க வேண்டும் என்பதை முடிவெடுத்து காட்சிகளை வைத்திருக்கிறார். அதிலும் முதல் பாதி ஸ்…பா.. முடியலை.. ரெண்டாவது பாதியில முடியல.. விஜய்யை வைத்து காமெடி செய்ய, சண்டை போட, ஆட்டம் ஆட, என்று பல விஷயஙக்ளுக்கு முயற்சி செய்திருக்கிறார் கொஞ்சம் கூட புதிதாய் ஏதும் செய்துவிடக்கூடாது என்ற முனைப்போடு. வாழ்த்துக்கள்.


இடுக்கை :ராமநாதன்.அ