தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/04/2011

சுவாமி ஐயப்பன் - 3

நெய் கொண்டு செல்வது ஏன்?


ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா? இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.
முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.
இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.
எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.


இருமுடி பொருள்கள்!


சபரிமலை யாத்திரைக்கு இருமுடி எடுத்துச் செல்பவர்களுக்கான குறிப்புகள்:
இருமுடிப்பையின் அளவு : அகலம் 1 1/4அடி. நீளம் 2 1/2 அடி. மையத்தில் 1 அடி அகலத்தில் வாய் இருக்க வேண்டும். இருபக்க ஓரங்களில் கயிறு இருக்க வேண்டும்.
சிறுபைகளின் அளவு: 1 அடி அகலமும் 1 1/4அடி நீளமும் கொண்டதாய் ஐந்து பைகள் இருக்க வேண்டும்.
முன்முடியில் வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள்: ஒரு பையில், வெற்றிலை, பாக்கு, காசு, நெய் தேங்காய் ஆகியவற்றை முதலில் வைக்க வேண்டும். பின், கற்பூரம், விபூதி, மஞ்சள் தூள்,சந்தனம், குங்குமம், பச்சரிசி, ஊதுபத்தி, அவல், பொரி, பன்னீர், தேன், கற்கண்டு, நல்லமிளகு, புகையிலை, ஜாக்கெட் துணி, காணிக்கை (அவர் அவர் விருப்பம் போல்) ஆகியவற்றை வைக்க வேண்டும். நெய் ஐயப்ப சுவாமியின் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். நெய் தேங்காயை உடைத்து நெய்யை அபிஷேகத்திற்கும், தேங்காயின் ஒரு மூடியை அங்கே எரியும் ஆழியிலும் சேர்த்து விட வேண்டும். ஒரு மூடியை பிரசாதமாகக் கருதி வீட்டுக்கு கொண்டு வரலாம். கற்கண்டை அதற்கான தனி உண்டியலில் போட்டு விடலாம். மாளிகைப்புறத்து அம்மனுக்கும், நாகருக்கும் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். கடுத்துவா சுவாமிக்கு (கடுத்த சுவாமி) அவல் பொரியும், வாவருக்கு நல்ல மிளகும், கருப்ப சுவாமிக்கு புகையிலையும் சமர்ப்பிக்க வேண்டும். காசை உண்டியிலில் போட்டு விடுங்கள். இருமுடியின் பின்பகுதியில் இரண்டு தேங்காய், பச்சரிசி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஏறுதேங்காய், இறங்கு தேங்காய் என்பர். ஒன்றை படி ஏறும் போதும், ஒன்றை வேறுபாதையில் இறங்கும் போதும் உடைப்பதுண்டு. கரிமலை மூர்த்திக்கும், விநாயகருக்கும் தேங்காய் உடைக்கும் பழக்கமும் உண்டு. இதற்குரிய காய்களை தனியாக ஜோல்னா பையில் வைத்துக் கொள்ளவும். இருமுடியை தலையில் வைக்கும் முன் ஒரு சால்வையை தலையில் போட்டு அதன்மேல் முடியை தூக்கி வைக்கவும்.
முத்திரை தேங்காய் பாடல்: ஒவ்வொரு நபராக ஸ்வாமியின் முன் அமர்ந்து குருஸ்வாமியின் உதவியுடன் ஒவ்வொரு முத்திரையிலும்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
நெய்யபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
பால் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் ஸ்வாமி சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
இருமுடிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு இருமுடிக்கட்டு
யாருடகட்டு ஸ்வாமியுடகட்டு
யாரைக்காண ஸ்வாமியைக் காண
நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே
பாலபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூரதீபம் ஸ்வாமிக்கே
காணிப்பொன்னும் ஸ்வாமிக்கே
ஸ்வாமியே ஐயப்பா - என்று சரணம் சொல்லி முத்திரையில் நெய்யினை நிறைக்க வேண்டும்.
வழி தேவைக்கு...
வழிதேவைக்கு ஜோல்னா பையில் மறக்காமல் எடுத்து செல்ல வேண்டியவை: பேட்டரி லைட், டூத் பேஸ்ட், பிரஷ், திருநீறு, சந்தனம், குங்குமம், மாற்றுவேஷ்டி, கற்பூரம், சாம்பிராணி, மெழுகுவர்த்தி, சட்டை, துண்டு, மழைக்காக பிளாஸ்டிக் பேப்பர், சின்னகத்தி, டம்ளர், தண்ணீர் பாட்டில், ஸ்வெட்டர், மப்ளர், தீப்பெட்டி, திருவிளக்கு, திரிநூல், நெய். இருமுடி தாங்கி செல்லும்போதும், வழியில் உபயோகிக்கவும் ஒரு கம்பளம் ஒரு விரிப்பு அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை: