தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/15/2012

சேகுவாரா.



உறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளிபடும் இளமை, பச்சை நிறத்திலான தொள தொளத்த காற்சடை, பூட்சுகளும், கருப்பு தொப்பியும் அதில் சிகப்பு நட்சத்திரமும் அவரோடு ஒட்டி பிறந்த அம்சங்கள் போல தோன்றின. யார் இவர்? இவர்தான் பல புரட்சிகளை உருவாக்கியவர். உலகெங்கும் உள்ள இளைஞர்களை வசீகரித்து, திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய ஏதோவொன்று மனிதர்களின் இதயத்துக்குள்ளும், மூளைக்குள்ளும் கலந்துவிட்டிருக்கிறது.



அவர்தான் சே குவாரா அல்லது சே என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவாரா. 1928 ஜூன் 14-ஆம் நாள், அர்ஜெண்டினா ரோசாரியோவில் பிறந்த சே, வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆஸ்த்துமா நோயால் அவதி பட்டாலும், உடற்பயிற்சி, வேட்டை, மீன் பிடித்தல், மலையேறுதல் போன்றவற்றில் அதிகம் ஈடுபாடு கொண்டார். 1952-இல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவரான இவர், பிற்காலத்தில் இலட்சிய வீரர் என்று உலகளவில் பேரெடுத்தார். மாணவர் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.


பட்டம் பெற்ற பிறகு, தனது மோட்டார் சைக்கிளிலேயே குவாதமாலாவிற்கு சென்று, அங்கு கம்யூனிச ஆதரவாளராகிய ஜெக்கபோ அர்பென்ஸ் குஸ்மானின் ஆட்சியில் (1951-54), அரசாங்க மருத்துவ சேவகனாக பணிபுரிந்தார். அதோடு அர்பென்ஸ் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்து வந்தார். அர்பென்ஸ் ஆட்சி வீழ்ந்த பிறகு, சேகுவாரா மொக்சிகோவிற்கு சென்று, மார்க்சிஸ்ட் பாப்புலர் சோசலீஸ்ட் கட்சித் தலைவர் வின்செண்ட் லொம்பர்டொவுடன் தொடர்பு கொண்டார். அங்கு சேவிற்கு, அரசு மருத்துவமனையில் டாக்டர், மற்றும் தேசிய பல்கலைகழக மருத்துவ ஆசிரியர் என்று இரண்டு பொருப்புகள் கொடுக்கப்பட்டது.


1956-இல், சே, காஸ்ட்ரோவை எதெச்சையாக சந்தித்தார். காஸ்ட்ரோவின் கொரில்லாப் போரில் ஈர்க்கப்பட்டசேகுவாரா, மருத்துவ சேவையின் பேரில் அப்படையில் இணைந்தார். ஜூலை 1956-இல், மெக்ஸிகன் காவலாளிகளால் பிடிக்கப்பட்ட சேகுவாராவும், தோழர்களும் விடுவிக்கப்பட்டபின், டிசம்பர் 1956-இல் கிரான்மா இலட்சியப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு போராளியாகவும், பின் இராணூவ தளபதியாகவும், அதன் பின் கமாண்டராகவும், காஸ்ட்ரோவிற்கு அடுத்த மனிதராகவும் இருந்த மனிதராகவும் இருந்த சேகுவாராவின் தலைமையில் 1958-இல் சாந்தா கிளாராவை கைப்பற்றினார்கள். 1959 கியூபா புரட்சிக்குப்பின், சேவிற்கு கியூபா குடியுரிமை அளிக்கப்பட்டதோடு, ஹவானாவில் லா கபானா துறைமுகத்தில் கமாண்டராக இருந்தார். பிறகு இராணூவ உத்தரவு பிறப்பிற்கும் துறையின் தலைவராக இருந்து கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தி வந்தார்.


அதைத் தொடர்ந்து, தொழிற்துறை தலைவராகவும், பின் தேசிய வங்கியின் தலைவராகவும், 1961-இல் வர்த்தக அமைச்சராகவும் பதவியேற்றார். தேசியமாக்குவதில் கவனம் செலுத்தி, இறக்குமதிகளைக் குறைத்து, தொழிலாளர்களை அரவணைத்துக் கொண்டார். கியூபாவின் பொருளாதாரம் வெகுவாக மேம்பாட்டைக் கண்டது. இராணுவத்தில் எந்த பொறுப்பும் இல்லாத போதும் சேகுவாரா இராணுவ உடையில், நட்சத்திரம் கொண்ட தொப்பியில், புரட்சிகரமான எழுத்துகளை பிறருக்கும் வாசித்து காட்டும் அந்த காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.


சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல். சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம். அந்த இதயத்தைச் சுட்டுக் கொன்றது அமேரிக்க தலைமையிலான பொலிவிய நாட்டு இராணுவம். அவரது மரணத்தின் தடயங்களையும், அவர் உடலையும் புதைத்து மறைத்தாலும், சேகுவாரா மக்களின் மனதில் இன்னும் எழுந்துக்கொண்டே இருக்கிறார்.


சே குவாரா புரியாதவனுக்கு புதிர். புரிந்தவனுக்கு புரட்சிக்காரன். ஏழைகளை அன்போடு அரவனைப்பான். எதிரிகளை கண்டால் அடியோடு அழித்திடுவான்.


சேகுவாரா இவன் வாழ்க்கை ஏடுகளை படித்தால், படிப்போர் இதயங்களில் போராட்ட குணங்களை விதைப்பான். மருத்துவனான இவன் மனதில் மக்கள் விடிவுக்கு, சமூக மருந்து எது? என்ற கேள்வி எழுந்தது.


பணக்காரர்களுக்கு மருந்தும் மருத்துவ வசதிகளும் பரவலாக கிடைக்கிறது. ஏழைக்கோ, அது ஏன் எட்டாக் கனியாகிறது? ஏழைகள் என்ன மரண தண்டனைக் கைதிகளா?


எதிரிகள் யார் என ஆராய ஆரம்பித்தான். ஓரே சமுதாயத்தில் ஏன் ஏற்ற தாழ்வு? ஆட்சி முறையின் கேடா? சமுதாய அமைப்பு முறையில் கேடா?


உழைக்கும் வர்கத்துக்கு இந்த உலகமே உயில்! என்று எழுதிய நம் பாட்டன், கார்ல் மார்க்ஸ் சொன்ன புத்தியை புத்தகத்தில் படித்தான். அது புதிராக இருந்தது. புரிய தொடங்கியது. புத்தி அது பொழிவடைந்தது.


உலகத்தையே உறுவாக்கும் உழைக்கும் வர்கம், உரிமை இழந்து கிடக்கிறது. உண்மையை மறந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. உட்கார்ந்து திண்ணும் உளுத்துப்போன முதலாளிவர்கம் ஆட்சியமைத்து ஆட்டிப்படைக்கிறது.


வர்க போருக்கு வக்காலத்து வாங்க துணிந்தான் வக்கீலாய் வந்த பிடேல் காஸ்த்ரோவோடு இணைந்தான். சொர்க பூமியை சொர்ப்ப பூமியாக்கிக் கொண்டிருக்கும் பத்திஸ்தாவின் கொடுங்கோலை எதிர்த்து, அமேரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்ட முடிவு செய்தனர்.


ஓர் அர்ஜெண்டீனா மருத்துவன், ஒரு கியூபாவின் வக்கீல். மக்களின் மைந்தன் சேகுவாரா. மன்னின் மைந்தன் பிடேல் காஸ்த்ரோ. மக்களின் நலன் மீட்க போராளியானார்கள்.


கியூபா மக்கள் விடியலுக்காக சிறிய படையோடு சீரிபாய்ந்து கலம் இறங்கினார். போராட்டத்தில் மக்களின் ஆதரவை வென்றனர், கியூபாவில் புரட்சி செய்தனர், அதில் வெற்றி கொண்டனர். அமேரிக்க குள்ள நரிகளையும். முதலாளித்துவ ஓநாய்களையும் விரட்டியடித்தனர்.


கியூபா புரட்சி மட்டும் போதுமா? கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் எல்லை போடனுமா? காஸ்த்ரோ கியூபாவை வழிநடத்தட்டும். தன் வழி உலக வழி. ஒரு புரட்சி போதுமா உலகம் மாற? ஒவ்வொன்றாய் வெடிக்கட்டும் புரட்சிகள் ஆயிரம். மக்கள் தான் விடுதலையின் விழுதுகள். அடிமை சங்கிலியை அருத்தெடுத்து விடியலை வீதிக்கு கொண்டுவரும் விடிவெள்ளி.


எங்கெல்லாம் மக்கள் அடிமைபட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் புரட்சி வீரன் உறுவாக வேண்டும்.


சேகுவாரா இறக்கும் தருவாயில் (09.10.1967) இறுதிவார்த்தையாய் சொன்னது…


"சுடு கோழையே! நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்!"


இன்றும் சே போராடும் ஒவ்வோரு இளைஞனின் இதயத்தில் புரட்சி விதையாய் முளைக்கிறான்.


சே காங்கோவிற்கு புறப்பட்டான். போராடும் போதனைகள் அங்கே போதவில்லை. மீண்டும் கியூபாவிற்கு வந்து புரட்சியை உலகிற்கு கொண்டு சொல்ல முற்பட்டான்.


போலி வேடத்தில் பொலிவியா காட்டிற்கு புகுந்தான். புரட்சி படை அமைத்தான். கொரில்லா போரை துவங்கினான். அமெரிக்கா இவனை அழித்துவிட கங்கனம் கட்டியிருந்தது.


கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது. சேகுவாராவை விடிய விடிய தேடியது. பொலிவிய இராணுவத்தின் உதவியோடு சேகுவாராவை உயிரோடு பிடித்தது. மறுநாள் உயிரை உடலிலிருந்து பிரித்தது. இறந்தான் சே என முதலாளித்துவம் இன்புற்றது. இணையில்லா புரட்சிவீரன் இறந்துவிட்டானா என்று மக்கள் உறைந்து போனார்கள்.


அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! –சேகுவாரா.


கருத்துகள் இல்லை: