தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/25/2010

வாழ்வை வளமாகிய நண்பனே --- நூல்கள்!


தோழனே
இது புத்தகமல்ல
இதைத் தொடுபவன்
என்னையே தொடுகிறான்
நீயும் நானும் நெருக்கமாகிறோம்
இதோ...இதன் பக்கங்களிலிருந்து
உன் கரங்களுக்குத் தாவுகிறேன்.


"புல்லின் இதழ்கள்" என்ற கவிதையின் மூலம் புதுக்கவிதையை உலகத்திற்கு அடையாளப்படுத்திய வால்ட்விட்மனின் கவிதை வரிகள் இவை. புத்தகத்தின் மகத்துவத்தை உணர்த்துகின்ற உன்னத வரிகள் இவை.(எனக்கு பிடித்தமான கவிதை)


புத்தகம்...


இதயங்களை இணைக்கும் நடப்புப் பாலம்
அறியாமை என்னும் இருட்டை நீக்கும் சூரியன்
அறிவுத் தாகத்தைத் தணிக்கும் அதிசய நீரூற்று
ஞானம் தரும் போதி மரம் ....


இப்படி எழுதிக் கொண்டே இருக்கலாம். புத்தகங்களை நேசிப்பவர்கள் வாழ்க்கையை நேசிப்பவரகளாகிறார்கள். அறிவை விரிவு செய்வதற்கும், புரட்டிப் போடுகின்ற வாழ்க்கையின் வேக  சுழற்சியில் உலர்ந்து போகின்ற மனசை ஈரப்படுத்திக் கொள்வதற்கும், வற்றிப் போய்க் கொண்டிருக்கின்ற அன்பு, ஈகை, கருணை, பாசம், பரிவு போன்ற நல்லுணர்வுகளை  மாற்றிக் கொள்வதற்கும், அறியப்படாத உலகை அறிவதற்கும், மனிதர்களின் சாதனை அறிவின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் புத்தகம   பெரிதும் துணை புரிகின்றது.


"புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது'' என்பார் "பிளேட்டோ."


தான் வாசித்த, நேசித்த புத்தக அறைக்கு "மன நல மருத்துவ நிலையம்'' என்று பெயர் வைத்தான் எகிப்து நாட்டு அரசன் "பாரோ".


"மன நல மருத்துவ நிலையம்'' - எவ்வளவு அர்த்தம் நிறைந்த மொழி. மனிதனை முழுமையடையச் செய்து சரியான பாதைக்குத் திரும்ப வைப்பது புத்தகம்தான். திரும்பிப் பார்க்க வைப்பதும் புத்தகம்தான். அதனால்தான் புத்தகங்களை காலமென்னும் கடலில் கட்டப்பட்டிருக்கின்ற கலங்கரை தீபங்கள் என்று புகழ்கின்றோம்.


படிக்கும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய சிந்தனைகளைத் தரக்கூடிய ஆற்றல் புத்தகத்திற்கு உண்டு. புத்தகங்கள் சிறந்த நண்பர்கள். "உன் நண்பன் யாரெனக் காட்டு. உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பது பழமொழி. நீ படிக்கின்ற புத்தகங்களைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன்''. இது இன்றைய புது மொழி.(எப்படி நாங்களும் பஞ்ச் வசனம் பேசுவோம் )


அறிவுச் சுரங்கமாய்த் திகழும் புத்தகங்களைப் படிப்பது நல்லதுதான். அதைவிட நல்லது தேடித் தேடிப் படிப்பது. "தேடுங்கள் கண்டடைவீர்கள்'' என்பது விவிலிய வாக்கு. அந்தத் தேடலில் தத்துவ ஞானியானவர்கள் பலர். அவர்களுள் ஒருவரை உங்களுக்கு அடையாளப்படுத்துகிறேன்.


அவர் யார் என்று அறிய உங்களுக்கு ஆவல்தானே, இதோ ஒரு இடுக்கையின்  வழியாக அவரை அறிமுகப் படுத்துகிறேன்.


அந்தக் கடிதத்தைப் படித்ததும் விழிகள் வியப்பால் விரிந்தன. அப்படியென்ன அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது? அது சாதாரணக் கடிதமல்ல. இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்குச் சென்ற கடிதம். அந்தக் கடிதம் சொன்ன செய்தி இதுதான்.


இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் ரஷ்யாவிற்கு வருகிறார். இரண்டு நாட்களுக்கு அவர் தங்குவதற்கு இரட்டைக் கட்டில் உள்ள அறையை ஒதுக்கி வைக்கவும்.


வியப்பால் விழிகள் விரியக் காரணம் இந்த வாசகம்தான். துணைக்குடியரசுத் தலைவரோ திருமணம் ஆகாதவர். தனிச்செயலரைத் தவிர வேறுயாரும் கூட வரவில்லை. தனிச் செயலருக்குத் தனியறை ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டது. இந்தச் சூழலில் இருவர்படுக்கும் வசதியுடன் அறை கேட்டதுதான் வியப்பிற்கே காரணம்.


கடிதத்தில் கேட்டிருந்தபடியே அறையை அவருக்கு ஒதுக்கி வைத்திருந்தார்கள். முதல் நாள் இரவு முடிந்து மறுநாள் காலை அறையைத் திறந்தபோதுதான் விடை கிடைத்தது.(தப்பு தப்ப நினைக்காதீங்க )அவர் படுத்திருந்த பகுதியைத் தவிர கட்டிலின் மற்ற இடங்களில் எல்லாம் புத்தகங்கள். குவியல் குவியலாய்ப் புத்தகங்கள். தினந்தோறும் குறைந்தது. நான்கு மணி நேரம் படிப்பதைக் கடமையாகக் கொண்டவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். வெளி நாட்டுப் பயணத்தின்போதும் அவருடன் கூடவே புத்தக மூட்டையும் பயணிக்கும். அந்தப் புத்தகங்கள்தான் அவரைச் சிறந்த அறிஞராக்கி, தலைசிறந்த ஆசானாக்கியது. தத்துவ ஞானியாகவும் மாற்றியது. அதனால்தான் அவரது பிறந்தநாளான செப்டம்பர் ஐந்தாம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி  மகிழ்கின்றோம்.





ஒரு மனிதனுடைய குணநலப் பண்புகளை உயர்த்தி, துய்மைப்படுத்தி சிந்திக்கவும், சிறந்த முறையில் வாழவும் செய்பவை புத்தகங்கள்தான்.


புத்தகத்தை வாசித்ததன் காரணமாக தங்களுக்குள் இருக்கும் கதவு திறக்கப்பட்டு பலர் மகான்களாகவும், மகாத்மாக்களாகவும் மாறி இருக்கின்றார்கள்.


மோகன்தாஸ் காந்தியாக இருந்தவரை மகாத்மா காந்தியடிகளாக மாற்றியது - ஜான்ரஸ்கின் எழுதிய "கடையனுக்கும் கடைத் தேற்றம்'' என்ற புத்தகம்.


வெங்கட்ராமனாக இருந்த வரை மகான் ஸ்ரீரமணமகரிஷியாக மாற்றியது, சேக்கிழார் எழுதிய 'பெரிய புராணம்' என்ற புத்தகம்.


33 ஆண்டுகள் லண்டன் நூலகத்தில் கிடந்து கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்'' என்ற புத்தகம் உலக சமுதாயத்தை, உழைக்கும் வர்க்கத்தை உயர்த்திப்பிடித்தது.(அட நம்ம கம்யூனிஸ்ட் )


டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', 'அன்னகரீனா'வும் உலக இலக்கியத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றவை. இப்படி மன மாற்றத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் புத்தகங்களே சாட்சியங்களாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.


காளிதாசன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள் இப்போது இல்லை. ஆனால் அவர் எழுதிய 'சகுந்தலம்'' இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கின்றது.


வாழ்வாங்கு வாழ வழி சொன்ன வள்ளுவரும், கவித்தலைவன் கம்பரும் இன்று இல்லை. ஆனால் அவர்கள் எழுதிய திருக்குறள் இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. இராமாயணம் இலக்கியச் சுவைக்கு மகுடம் சூட்டி நிற்கின்றது. இதுதான் புத்தகத்தின் மகத்துவம்.


"புத்தகங்கள் காலத்தின் விதை நெல்'' என்பார் பாவேந்தர் பாரதிதாசன். ஆம் ஒரு விதை நெல் தான் பல நெல் மணிகளை உற்பத்தி செய்கின்றன. புத்தகங்களில் பொதிந்திருக்கின்ற கருத்துக்களும் விதை நெல்லாய்த்தான் பலரை உருவாக்குகின்றது.(இப்படித்தான் நம்ம கவிஞர் உருவானங்க )


உலக வரலாற்றில் இடம் பெற்ற மாவீரன் அலெக்ஸாண்டர் உலகையே வெல்ல வேண்டும் என்று கனவு கண்ட உலகத்தின் முதல் தன்னம்பிக்கையாளன். அவனது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.


அலெக்ஸாண்டர் சிறுவனாக இருந்தபோது போர்ப் பயிற்சியைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்கின்றார் தந்தை பிலிப். ஒவ்வொரு பயிற்சியின்போதும் வெற்றியை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்த அலெக்சாண்டர் ஒரு நாள் தோற்றுப் போகிறான்.


எதற்காகத் தோற்றாய்? தந்தை பிலிப் கேட்கிறார்.


"அப்பா எப்போதும் நானே ஜெயித்து விடுவதால் இதோ இவன் அழுது விடுகிறான். அதனால்தான் சந்தோஷத்திற்காக ஒரு முறை தோற்றது போல் நடித்தேன்'' என்றான் அலெக்ஸாண்டர்.


மகனுக்குள்ளிருந்த மனிதாபிமானத்தை ரசித்தாலும் அவர் "மகனே! உன் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடு. ஆனால் யாருக்காகவும் உன் வெற்றியை மட்டும் விட்டுக் கொடுக்காதே. இந்த உலகம் வெற்றி பெற்றவர்களை மட்டுமே பேசும்'' என்றார்.


யாருக்காகவும் உன் வெற்றியை விட்டுக் கொடுக்காதே, இந்த மந்திரச் சொல்லைப் படித்தபோதும், ஒவ்வொரு முறை படிக்கின்றபோதும் இருள்படிந்த என் விழிகளில் வெளிச்சத்தின் வெற்றியை உணர்ந்தேன் . நான் புரட்டிய இந்தப் புத்தகம் என்னையும் புரட்டியதை உணர்ந்தேன்.


தூங்கச் செய்வது புத்தகமல்ல. எந்தப் புத்தகம் நம்மைத் தூங்க விடாமல் செய்கிறதோ அந்தப் புத்தகம் தானே நல்ல புத்தகம். இதை மெய்யாகவே உணர்ந்தேன். அலெக்ஸாண்டரின் வரலாற்றில் மட்டுமல்ல, இன்னொரு நிகழ்வு.


இத்தாலி மக்களின் எழுச்சித்தலைவன் கரிபால்டியிடம் ஒரு வீரன் கேட்டான். "நாங்கள் போரிட்டால் எங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது. காயமும் மரணமும்தானே?''


கரிபால்டி சொன்னான். "நீங்கள் காயப்படலாம், மரணிக்க நேரலாம். ஆனால் இத்தாலி விடுதலை பெறும்.''


கடைசி வார்த்தையைப் பாருங்கள். இத்தாலி விடுதலை பெறும், எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை. இப்படி நல்ல புத்தகங்களைப் படிக்கப் படிக்க அவை நம்மையும் புரட்டிக் கொண்டே இருக்கும்.


என் இனிய நண்பனே, நல்ல புத்தகங்களைத் தேடித் தேடிப் படியுங்கள். வாழ்க்கைக்கான நல்ல வழிகள் தெரியும். எந்த வழியில் போவது என்று தெரியாமல் திகைப்பவர்களுக்குப் புத்தகங்கள் நல்ல திசைகாட்டிகள். திசைகள் தெரிந்து விட்டால் தேடுவது எளிதில் கிடைத்துவிடும்.


முன்பெல்லாம் இளைஞர்களின் கைகளில் புத்தகங்கள் இருக்கும். ஆளுமை சம்பந்தப்பட்ட அடையாளமாக இருந்தது. இன்றைக்கு எங்கே அந்த இளைஞர்கள்?


குழந்தைகளுக்கு வயலின் கற்றுத் தருகிறார்கள், கராத்தே கற்றுத் தருகிறார்கள். நாட்டியம் கற்றுத் தருகிறார்கள். நல்ல புத்தகங்களை வாசிக்கக் கற்றுத் தருகிறார்களா? பாடப் புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லும் பெற்றோர்களை என்ன சொல்வது? புத்தகங்களின் நடுவேதான் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.(ஐயோ நான் சொன்னது பள்ளி புத்தகம் இல்லப்பா )
"புத்தகங்களுக்காகச் செலவழிப்பது செலவல்ல மூலதனம்'' என்பார் அறிஞர் எமர்சன். எனவே புதிய தலைமுறையை உருவாக்கப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம்.

விரும்பிய புத்தகத்தை விலை கொடுத்து
வாங்கிப் படிப்பவன் தான் வாசகன், வாங்குபவனிடம்
வாங்கிப்படிப்பவன் வாசகன் அல்ல யாசகன்
என்பார் கவிஞர் வாலி.
புத்தகத்தை யாசிக்காமல், வாங்கி வாசிப்போம். வாசிக்காத நாட்களெல்லாம் சுவாசிக்காத நாட்களே!

( நண்பர்களே உங்கள் உறவினர் ,நண்பர்கள் ,மற்றவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் பரிசு ஏதாவது கொடுத்தால் புத்தகமாக கொடுங்கள் அது அவர்களுக்கு உபோயகமாகவும்,நமக்கு புத்தகமேல் காதல் ஏற்படும்,இதை நான் தொடர்ந்து வருகிறேன் என்பதையும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்  )

இடுக்கை : அ.ராமநாதன்                                    நன்றி : எனது நூலகம்

கருத்துகள் இல்லை: