தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/26/2012

காதல் இறந்து விட்டது

நீயும் நானும் இரு வேறு துருவங்கள்


என்பதனை உணர

நீண்ட நேரம் எடுக்காது

என்பது உனக்கும், உனைச் சார்ந்தவர்களுக்கும் தெரியும்

ஆனாலும் உன்னை விட்டால்

சார்ந்திருப்பதற்கு வேறு வழியில்லை

எனும் தோரணையில் ஒட்டியும் ஒட்டாமலும்

உன்னோடு உறவாடியபடி நான்!


என்னையும் உன்னையும் சூழ்ந்திருந்த

அரவணைப்புக்கள் எல்லாம் நீங்கி

நாங்கள் தனி மரங்களாகி,

முதன் முதலில் சந்திந்த போதே

உன் முகத்தில் கீறல் விழுந்த

கண்ணாடியைப் போல

உடைந்து தெறித்தன ஓராயிரம் வினாக்கள்?


நீ வேறு நிறம், நான் வேறு நிறம்

நீ வேறு மொழி, நான் பேசும் மொழி வேறு

எனும் ஆதியில் தொடங்கி

அடக்கி வைக்க முடியாத திமிர் கொண்ட

உன் முன்னழகின் பார்வைகளைப் போல

என் பின் பக்கம் இருந்து

இனவாதம் பேசினாய்,

இலையான் ஒன்று இரைகிறது என்றெண்ணி

உன்னை தட்டி விட்டேன்

ஆனாலும் நீயோ விடுவதாயில்லை


என்னைப் பின் தொடர்ந்தாய்,

உன் காலடிக்குக் கீழ்

நான் அடிமையாக இருக்க வேண்டும்

என்பதற்காய் தகாத வார்த்தைகள்

கொண்டு உரசிப் பார்த்தாய்

பொறுமையின் எல்லை வரை

நிற்பது ஆண்மைக்கு அழகல்ல

எனும் வகையில் அகிம்சையில் இறங்கினேன்- ஆனால்

நீயோ என் மௌனத்தை கலைக்க

மந்த புத்தி கொண்டு பாத்திரங்களை

ஆயுதமாக்கி அக்கினி(ப்) பார்வையோடு வீசினாய்,


இனி உன்னோடு ஒரு வார்த்தை உரைப்பினும்

உணர்வின்றிப் போகும் எனும் எண்ணத்தில்

நானும் உன் வழியில் இறங்கினேன் - நீயோ

உன்னை விடத் தாழ்ந்த சாதி நான்

உனை ஆயுதம் கொண்டு ஆதிக்கம் செய்து

அடக்கிட நினைப்பதாக உறவினர்களுக்கு தகவல் அனுப்பினாய்,


கெஞ்சினேன், சிரித்தாய்;

காலில் விழாக் குறையாய் பிரிவு கேட்டேன்

என்னை விடச் சிறியவன் உனக்கேன் பிரிவு என

கேலி செய்து உதறி விட்டாய்

மீண்டும் இரங்கினேன்; படி இறங்குவாய் என;

நீயோ வாழ விரும்பின் அடிமையாய் இரு

வாழ்க்கை முழுதும் சேவகம் புரி

என வாசகம் உரைத்தாய்


நீண்ட நாள் பொறுமை கடந்தவனாய்

உன் வழியில் பதில் சொல்லி,

மௌனமாய் நீதிமன்றேகினேன் தீர்வொன்றிற்காக,

நீயோ, நீதி மன்றினூடாக பொறிக் கிடங்கில் வீழ்த்தினாய்

இனியும் சேர்ந்து வாழ்தல் முறையில்லை என்றுணர்ந்து

விவாகரத்து கேட்டேன்

நீதிபதி சொன்னார்

’கொஞ்சக் காலம் எட்ட இருங்கோ,

இப்போதைக்கு இதற்கு சமஷ்டியே தீர்வாகட்டும்’ என்றார்


எந்தன் புத்தியோ இங்கே சறுக்கியது,

சமஷ்டி என்பது சதி என்றெண்ணி

முழுமையாய் பிரிவே

முதலில் வேண்டுமென்றேன்;


அடிப் பாவி

தனி மரமாய் நின்ற என்னை

உன் உறவுகள் துணையோடு

படு குழியில் வீழ்த்த நினைத்தாய்

உன் சதியை உனர்ந்தவனாய்

நிரந்தரப் பிரிவேதும் வேண்டாம்

’இடைக்காலப் பிரிவினை

தா எனக் கேட்டென்

நீதிமன்றம் உரைத்தது,

உன் முடிவில் மாற்றம் இல்லையாம்

இப்போதைக்கு எதுவுமே இல்லை;


நீண்ட மௌனத்தின் பின்

ஆற்றங்கரையிற்கு அருகாக வைத்து

ஒரு மாலை வேளை உனைச் சீ(தீ)ண்டத் தொடங்கினேன்,

மீண்டும் நீ என்னை எதிர்க்கும்

எண்ணத்தோடு உருக் கொள்ளத் தொடங்கினாய்,

இது தான் தருணம் என எண்ணி

எனை வீழ்த்த வந்தாய்

உன் உறவுகள் எல்லோரும் உன் பக்கம் நிற்க

நானோ தனிமரமாய் நின்றேன்

ஆனாலும் முடிந்த வரை

உன்னோடு மல்லுக் கட்டினேன்

இறுதியில் நீ வேறு வழியின்றி

சூழ்ச்சி செய்தாய்

என் தலைமேல் நஞ்சு தூவிப் பார்த்தாய்

அது பலிக்கவில்லை

மெதுவாய் யோசித்தாய்

பதிலொன்று கிடைத்த நோக்கில் பட்டினி போட்டாய்,


அடியே பாதகத்தி,

அடுத்த வீட்டு அன்ரியின் துணையோடு

நீ என் அடுப்பில் நஞ்சைத் தூவினாய்

அது பற்றி எரிந்தது,

அணைக்க உதவி கேட்டேன்

அடியோடு உன்னை அழிப்பதே

தருணம் என வேரொடு கிள்ளினாய்,

நீ சூழ்ச்சிக்காரி என்றுணர்ந்தும் இன்றும்

உன்னோடு ஒட்டியும் ஒட்டாமலும் நான்.

என் காதல் இறந்து விட்டது

அது பல நாள் உன்னிடம்

பணிந்து கேட்டும்;

பதிலேதும் இன்றி சேற்றில் புதைந்து விட்டது!

கருத்துகள் இல்லை: