தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/10/2010

பதிவுலகம் ஒரு சவாலானது


எழுதுவது மிகக் கடினமான விஷயம்.. வாசிப்பது அதனினும் கடினமான விஷயமாக இருக்கிறது.. இன்றைய வேகமான சூழலில்.! தமிழக காங்கிரஸின் தொண்டர்கள் தலைவர்கள் விகிதம் போல பதிவுலகில் படிப்பவர்களை விட எழுதுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். நாம் மட்டும் எழுதி மற்றெல்லோரும் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

பத்திரிகை, இதழ்களில் எழுதும் வாய்ப்பு என்பது நன்றாக எழுதும் திறன் மிக்கவர்களுக்கோ அல்லது செல்வாக்குப் படைத்தவர்களுக்கோ கிடைக்கும் ஒன்றாக இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டாலே அவர் கவிஞர் அல்லது எழுத்தாளர் என்ற அடைமொழிக்குரியவர்களாகிவிடுகின்றனர். ஆயிரமாயிரம் பிரதிகளில் படைப்புகள் அச்சாகி, அதை விலை கொடுத்து வாங்கும் வாசகர் கரங்களை அவர்களின் படைப்புகள் சென்றடைந்துவிடுகின்றன. மறுகேள்விக்கு இடமில்லாமல் அந்த படைப்பு வாசகர்களால் பெரும்பாலும் வாசிக்கப்பட்டுவிடுகிறது. பின்விளைவுகளையும், நீடித்த வெற்றியையும் பற்றி நாம் இப்போது பேச வரவில்லை. முதலில் படைப்புகளை வாசகர்களை படிக்க வைத்தால்தானே பின்னர் வெற்றியைப் பற்றி பேசமுடியும்.?

முதலில் எழுத்தாளர்களுக்கான, பத்திரிகைக்களுக்கான வாசகர் வட்டம் மிகப்பெரிது இன்றைய சூழலில். ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில் வலையுலகத்தின் வாசகர் எண்ணிக்கை மிகக்குறைவானதாகவே இருக்கிறது. பத்திரிகைகளைப் போல எந்த சிரமமும் இல்லாமல் யாரது படைப்புகளும் களம்காண எந்தத் தடையுமில்லை. நூலகத்தில் குவிந்துகிடக்கும் புத்தகங்களைப் போல ஒவ்வொரு வலைப்பூவும் ஒரு குட்டிப்புத்தகமாய் வலையுலகில் குவிந்துகிடக்கிறது. பத்திரிக்கை உலகத்தோடு ஒப்பிடுகையில் நினைத்தும் பார்க்க இயலாத போட்டி இங்கே. ஒவ்வொரு மனிதனிடமும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த குறைந்த வாசகர் கூட்டத்தில், மிகுந்த போட்டிக்கிடையே எப்படி படைப்புகளை வாசகர்களை படிக்கச்செய்வது.?

செய்தி, சிந்தனை, சம்பவங்கள், நகைச்சுவை என விஷயம் எதுவாக இருப்பினும் உள்ளடக்கம், படைப்பின் அளவு, தலைப்பின் வசீகரம், வாசகரை தொடர்ந்து வாசிக்கச்செய்யும் நடை, புதுமை என எழுத்தாளர்களுக்குக்கூட இல்லாத அளவு ஒவ்வொரு விஷயமும் பதிவர்களுக்கு மிகுந்த சவால் நிறைந்த்தாக உள்ளது..

நல்ல தரமான உள்ளடக்கம், வசீகரமான நடை, அழகான தலைப்பு அத்தனை இருந்தும் படைப்பின் நீளம் மலைக்கவைப்பதாய் இருந்தால் (ஒரு பத்திரிகைச் சிறுகதையின் நான்கில் ஒருபங்கு) பதிவு பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. பிறவற்றில் சிறப்பாக இருந்து ஒரு நல்ல வசீகரமான தலைப்பு இல்லாமல் போனாலும் படைப்பு தோல்வியைத் தழுவுகிறது. ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பானதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இப்படி ஒவ்வொரு கூறுகளையும் சிந்தித்துச் செயலாற்றி கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கும் நிலையிலேயே பதிவர்கள் இருக்கின்றார்கள்.. பத்திரிகையுலகத்தை விடவும் மிகுந்த சவால்கள் நிறைந்த இந்த பதிவுலகத்தில்.!

கருத்துகள் இல்லை: