தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/27/2010

கடைசி ஊர்வலம் ...

 கண்கள் கூச
உறக்கம் தொலைத்தோம்
பொழுது விடிந்தது  


மீண்டும் தொடங்குகிறோம்
எங்கு செல்கிறோம்…?
எதற்காய் செல்கிறோம்…?


விடைகளற்ற வினாக்களோடு
தொடர்கிறது பயணம்
எதிரிகளின் குண்டுகள்
சுவை பார்த்த தேகம்


காட்டு வழி முள்களும்
எம்மைத் தீண்ட வெட்கித்
தலை குனியும்


கால்கள் தொலையும்
வழி தேடி
மனமும் அலையும்
பாலுக்காய் அழும்
குழந்தைகள்
இரத்தம் தாராளம்


பசியோடு அலையும்
காட்டு விலங்குகளும்
இரக்கத்தோடு பாதை விலகும்
தமிழ் குழந்தைகள்
எதிரிகளின் பயிற்சி குறிகள்


பாதையெங்கும்
பழகிய பிணவாடை
கருகிப்போன தமிழுயிர்கள்
உயிர் களைக்கும்
போதெல்லாம்
எஞ்சிய மழலைகளின்
அழுகுரல்
புத்துயிர்ப்பு


மரண ஓலங்கள்
கண்ணீர்ப் பாதைகள்
என்றாலும்
தொடர்ந்து செல்வோம்
நாளைய உதயம்
எமக்கில்லை உயிர்ப்பிரியும்
இறுதி வினாடிகளின் நப்பாசை
கிழக்குச் சூரியன் ...

இது கோவை images வார பத்திரிகைக்காக 20 .12 .2009 அன்று எழுதியது ....

கருத்துகள் இல்லை: