தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/17/2011

என் பாரதத்தின் இன்றைய நிலை



நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த



நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,


அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்


அஞ்சாத பொருளில்லை அவனியிலே;


வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த


மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;


துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்


துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.






மந்திர வாதி என்பார் - சொன்ன


மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;


யந்திர சூனியங்கள் - இன்னும்


எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்!


தந்த பொருளைக் கொண்டே - ஜனம்


தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;


அந்த அரசியலை - இவர்


அஞ்சதரு பேயென் றெண்ணி நெஞ்சம் அயர்வார்






சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்


சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்;


துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு


தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்;


அப்பால் எவனோ செல்வான் - அவன்


ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்;


எப்போதும் கைகட்டுவார் - இவர்


யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்






நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த


நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,


கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு


கோடிஎன் றால்அது பெரிதா மோ?


ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்


ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்


நெஞ்சு பிரிந்திடு வார் - பின்பு


நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.






சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்


சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே


கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு


கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்


தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்


சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;


ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்


அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார்.






நெஞ்சு பொறுக்கு திலையே - இதை


நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே;


கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்


காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்


பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்


பரிதவித்தே உயிர் துடிதுடித்து‌த்


துஞ்சி மடிக்கின் றாரே - இவர்


துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே






எண்ணிலா நோயுடையார் - இவர்


எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்


கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்


காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்;


நண்ணிய பெருங்கலைகள் - பத்து


நாலாயிரங் கோடி நயந்துநின்ற


புண்ணிய நாட்டினிலே - இவர்


பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
 
       - பாரதியார் -
 

கருத்துகள் இல்லை: