தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/22/2010

உங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும் பிரதர்,

செல்போன் வந்த எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பிக்காத ஒரு சிலரே வைத்திருந்த தருணம், பேசுவதற்கும், எவராவது அழைத்தால் பதில் சொன்னாலும் காசு தான் என்ற சமயம்.

பொள்ளாச்சி தங்கை வீட்டுக்கு போய்விட்டு வீடு திரும்பும்போது, கோவை செல்லும் பஸ்ஸில் மணி வந்து கொண்டிருந்தான். அளவான கூட்டம், நான்கைந்து பேர் மட்டும் படியில் இரு பக்கங்களிலும் நின்றிருக்க, நன்கு படியினை விட்டு தள்ளி உள்ளே நின்றிருந்தான்.

அப்போதுதான் நல்ல மப்பில் இருந்த ஒரு சக பயணிக்கு ஒரு அழைப்பு வர கலாட்டா ஆரம்பமானது.

'ம்... சொல்லுடா மாப்ளே, அந்த தே...பையன் அப்படி சொல்லிட்டான்டா, அவன உண்டு இல்லன்னு பண்றேன். குளோஸ் தான், வேற வழியே இல்ல'... தொடர்பு துண்டித்துப்போக, திரும்ப இவர் அழைத்தார்.

'டேய் தே... மவனே, ஏன்டா கட் பண்ணினே? அவ்வளவு பெரிய ஆளா, உன்னையும் குளோஸ் பண்ணிடுவேன்.... இந்த கதைல்லாம் விடாதே, எனக்கு தெரியும். என்னது கோவப்படாதவா... அத சொல்ல நீ யாரு... வெக்காத, அந்த நாயி என்ன சொன்னான் தெரியுமா?'... மறு முனையில் வைத்துவிட சற்றும் தளறாமல் திரும்பவும் அழைத்தார்.

'டேய், இந்த டகால்டியெல்லாம் எங்கிட்ட வெச்சிக்காத. என்னுதுல காசு இல்ல... அலோ..அலோ.....'

சப்தம் அதிகமாயும், அச்சேற்ற முடியாத அருவருப்பான வார்த்தைகளாலேயே அவர் பேச எல்லோருக்கும் அருவறுப்பு. சொல்வதற்கோ கண்டிக்கவோ அவரது நிலையைப் பார்த்து எல்லோருக்கும் தயக்கம். பேசும்போதெல்லாம் வெட்டு கொலை என்றுதான் அதிகமாய் வந்துகொண்டிருந்தது.

திரும்பவும் அவர் அழைக்க ஆரம்பிக்க, எல்லோருக்கும் தெரிந்தது அவர் ஒரு வெத்து வேட்டு என. அவரது வாயாலேயே பேலன்ஸ் இல்லை என சொல்லி விட்டபடியால், சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தோம். பத்துநிமிடப் பேச்சின் பிறகு எதிர்புறம் இல்லாமல் இவர் துண்டித்தார்.

மீண்டும் யாருக்கோ அழைத்த அவரின் வார்த்தைப் பிரவாகம் அதிகமாய் போக, மணி ரொம்பவும் கோபத்துடன் அருகே வந்த கண்டக்டரிடம் 'என்ன சார் இப்படி பேசிகிட்டு வர்றார் கண்டிக்க மாட்டீங்களா' எனக் கேட்க அவருக்கு வந்தது ஒரு வேகம்.

அந்த நபரின் சட்டையினை பிடித்து உலுக்கி செவட்டில் ஓங்கி ஒரு அறை விட, அவரின் போதையெல்லாம் சட்டென இறங்கி போனை பாக்கெட்டில் பாக்கெட்டில் போட்டு வாயை மூடிக்கொண்டார். டிரைவர் நிறுத்தி என்ன விஷயம் எனக்கேட்க 'ஒன்னுமில்ல வண்டிய எடு போலாம்' என கண்டக்டர் சொன்னவுடன்,

மணி 'சார் இந்த ஆளை இங்கேயே இறக்கிவிட்டுட்டு போனாத்தான் புத்தி வரும்' என மறுத்து சொன்னான்.

'அட விடுப்பா, அதான் அடிச்சவுடனே அடங்கிட்டான்ல' ஒரு பெரியவர் சொல்ல வண்டி கிளம்பியது.

மணி மாட்டிவிட்டுட்டியே என்ற ஒரு பார்வையை பார்த்துக்கொண்டே வர, அவனுக்கு கிலி கிளம்பியது.

கோவை வந்ததும், உக்கடம் பஸ் ஸ்டாப்பில் அந்த ஆள் இறங்குவாரா என பார்க்க.. இறங்கவில்லை. மாறாக, காலியான சீட்டில் சட்டென மணி உட்கார, அவரும் அவனுக்கு அருகிலேயே முறைத்தபடி உட்கார இன்னும் டரியலானது.

உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்பதுமாதிரியான பார்வை. சரி இன்று சங்குதான் என எண்ணியபடி பயந்து பழைய பஸ்ஸ்டாண்ட்ல இறங்கி நடந்து போயி இருகூர் பஸ்ஸை பிடித்துக்கொள்ளலாம் என எண்ணி, உயிரை கையில் பிடித்தபடி இருக்க, அப்போதுதான் அந்த எதிர்ப்பாராத சம்பவம் நடந்தது.

திடீரென அந்த நபர் மணி கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

'அந்த தே.. பையன் நம்ப வெச்சி கழுத்த அறுத்திட்டான், அவளை எப்படி லவ் பண்ணினேன் தெரியுமா?' என தேம்பி தேம்பி அழ

அப்புறம்தான் எல்லாம் தெரிந்தது. அவர் திட்டியதெல்லாம் அவரது தாய்மாமனை. பெண்ணை தர முடியாதுன்னு சொல்லிவிட்டாராம்.

ஐந்து நிமிடம் தோளில் சாய்ந்து அழுதவண்ணம் வர, அவரை ஒருவாறு சமதானப்படுத்த முயல அவரின் அழுகை அதிகமானவண்ணம்தான் இருந்ததேயொழிய குறையவே இல்லை.

'விடுங்க பிரதர், உங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும்' என மணி சமாதானப்படுத்தினான்.

பஸ் ஸ்டான்ட் வந்தவுடன் ரொம்பவும் தெளிவானவர் போல் மலர்ச்சியுடன், 'ரொம்ப தேங்க்ஸ் பிரதர், வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்' என சொல்லி விட்டு செல்ல அவன் மனதை ஏதோ செய்தது.

இது கற்பனையே இவன்;கோவை ராமநாதன்

கருத்துகள் இல்லை: