செட்டியார் வீடு கட்ட
கொட்டிப் போட்ட
மண்ணுல
கோபுர வீடுகட்டி
கொஞ்சி விளையாண்டது
நினைவிருக்கா?
தெருவோரம் நின்ன மரம்
என் திண்ணையோரம்
நட்ட மரம் (மின்கம்பம்)
எப்படித்தான் எரியுதுன்னு
என்னைக் கேட்டியே,
நினைவிருக்கா?
வட்டிலில சோறுபோட்டு
வானத்து நிலா பார்த்து
ஒண்ணா உட்கார்ந்து
உருட்டித் தின்னமே
உனக்கது நினைவிருக்கா?
பள்ளிக்கூடம் போகயில
பாவி மழ பெய்யயில
ஓடிப் போய் மரத்தடியில்
ஒண்டியது
நினைவிருக்கா?
வீடு திரும்பயில
விட்ட மழ தொடரயில
உன் சந்தன முகத்துல
சாரல் படக்கூடாதுன்னு
என் சட்டையக் கழட்டித்
தந்தேனே நினைவிருக்கா?
விளையாட நீ வரல,
வீதியில காணவில்லே
உன் வீடுதேடி நான்
வந்தேன்
அந்த நாள்
நினைவிருக்கா?
பச்ச ஒலையில
பத்திரமா நீயிருந்த
பதினாறு வயசு வியாதி
பத்திக்கிச்சு நமக்குள்ள
பட்டப் படிப்பு படிச்சு வர
உன்னை
பஸ் ஏத்தி அனுப்பி
வெச்சேன்
பாவி மக உம் பெயரை
மனசுக்குள்ள செதுக்கி
வெச்சேன்
எல்லாமே மாறிப் போச்சு
என்னனென்னவோ
ஆகிப்போச்சு
எம் மகளும் உம் மகனும்
ஒண்ணா
விளையாடுதுங்க
நாளைக்கு அதும்
பொழப்பு
நம்மப் போல ஆகணுமா?
நாங் கண்ட ஒரு கனவு
நாசமா போகணுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக