தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/20/2010

எவரேனும் இப்படி காதலித்ததுண்டா

மனதில் நிறைய வைத்துக் கொண்டு
தானே -ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்கிறாய்;

என்ன வைத்திருக்கிறாயென
எனக்குத்தெரியாவிட்டாலென்ன

உனக்குத் தெரிந்தால் போதும்!

தெருவில் நீநடந்து செல்கிறாய்;
நானும் -நடந்துச் செல்கிறேன்;

பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்
நீயும் நானும் யார் யாரோவென்று;

உனக்கும் எனக்கும் தானேத் தெரியும் -
நீயும் நானும் யார் யாரென்று!

உன் -முட்டைக் கண்
பார்வையால் -நெட்டை கால் விரித்து
உயிர் கொண்டுவிட்டது
நமக்கான காதல்!

நீ -ஒருமுறை கை குலுக்கிய
அந்த இறுக்கத்தின் அழுத்தத்தில் தான்
இதயம் - எழுந்து நின்று செய்தது
காதல்!

எங்கோ -தூரத்தில் வரும்போதே
உன்னை பார்த்துவிடுவேன்;
நீயும் -பார்த்துவிடுவாய்;

அருகில் வந்ததும்
பார்க்காதவர்களைப் போலவே
சென்றுவிடுவோம்;

உன்னை நானும் என்னை நீயும்
கடந்தப் பிறகு - சடாரென
இருவரும் -
திரும்பிப் பார்க்க நினைப்போம்;

திரும்பிப் பார்க்காமலேயே
செல்வோம்.

காதல் -செந்தீயென
இருவருக்குள்ளும் எரியும்!

நான் -வாசலில் நின்றிருப்பேனென
உனக்குத் தெரியும்;
நீ -வீட்டிற்குள் நின்று
எனக்காகக் -காத்திருப்பாயென
எனக்கும் தெரியும்;
தெரிந்தும் -நான் காத்திருக்கட்டுமேயென
நீ -வீட்டிற்குள்ளேயே இருப்பாய்;

வெளியே -ஊர் எனை மட்டும்
கிறுக்கனென சொல்லி
காரி உமிழ்ந்துப் போகும்
நம் காதலை!

உனக்கும்எனக்கும்
திருமணமாகிவிட்டது;
குழந்தைகளும் உண்டு
பல வருடங்களுக்குப் பின்
இன்று ஏனோ -நேருக்கு நேர்
பார்க்க நேர்ந்ததில் -
நம் குழந்தைகளையும்
குடும்பத்தையும்
மறந்து தான் போனது நம்
பார்வை!

கருத்துகள் இல்லை: