தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/20/2010

காதல் விண்வெளி

அந்த வெண்கல நிற விண்கலம்
உலோகக் கதவுகளை
விரித்துக் காத்திருக்கிறது.

நானும், என் தேசத்து தேவதையும்
செவ்வாய் கிரகம் போகிறோம்.

பிடிக்கவில்லை. உருகும் போதே உலர வைக்கும்
இந்த உலைக்கள உலகம் பிடிக்கவில்லை.

பூமி மக்களுக்கு  பனித்துளி கூட
பாதம் கழுவவே பயன்படுகிறது.
காதலைக் கழுவிலேற்று
என்றுகால்கள் கூட கத்துகின்றன.

அந்தஸ்தின் அட்டவணைகளில்
அன்புக்கு எதிராய் அரிவாள் தான்
சாய்க்கப்பட்டிருக்கிறது.

எனவே,தேடாதீர்கள் என்று
சீட்டெழுதி விட்டு
சத்தமில்லாமல் செவ்வாய் செல்கிறோம்.

செவ்வாயில் உயிர்களில்லை
என்பதெல்லாம் இனி சரித்திரத்திலிருந்து
துரத்தப்படும்.

எங்கள்இருவர் பெயர்களும்
துருவங்கள் வரை பொறிக்கப்படும்.

விண்கலம்ஓர் ஆகாய திமிங்கலமாய்
காலத்தை வென்று
கலத்தை செவ்வாயில் நடுகிறது.

காதலுக்கு எதிர்ப்பில்லா
காற்றில்லா தேசமது,
எங்களிடம் மட்டும்
ஆக்சிஜன் அணிகலன்கள்.

மணித்துளிகள் மங்க மங்க
செவ்வாய் ஓர் சவக்காட்டு ஊதுபத்தியாய்
அமைதி கெடுக்க ஆரம்பித்தது.

வற்றிப் போன வசந்தத்துக்கு
வாழ்க்கை என்று பெயரா ?
எதிர்ப்பில்லா தேசத்தில்
உதிர்ப்பதெல்லாம் சட்டங்களே.
ஆனால்மக்கள் இல்லா தேசத்தில்
மணி மகுடம் எதற்கு ?

சமஸ்தானம் அஸ்தமனமானபின்
சிம்மாசனங்கள்இருந்தென்ன சரிந்தென்ன ?

முடிவெடுக்கிறோம்,இனி,
வௌவால்களாய் வாழ்வதென்றாலும்,
பூமியின் புதர்களோடுதான்.

விண்கலம்,மீண்டும் எங்களை ஏற்றி
பூமி நோக்கி பாய்ந்த போது தான்
விண்கலக் கருவிகள்
சினிமாபோல் சட்டென செயலிழந்தன.

பிடி நழுவிய விண்கலம் கீழ்
நோக்கிப் பாய்ந்து கடலில் . . . . .

திடுக்கிட்டு விழித்தேன்,
சாரளம் வளியே சாரல் அடித்தது.
மேஜை மீது ‘காதல்.’ தலைப்பிட்ட
காகிதம் ஒன்று நான்
கவிதை நிரப்பக் காத்திருந்தது.

இதுவும் கற்பனை : அ.ராமநாதன

கருத்துகள் இல்லை: