தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/30/2010

மௌனமாய்த் தேடுகிறேன்

இன்னும் எத்தனை விடியல்தான்
கசங்காத அடர்த்தியான போர்வைக்குள்
முயல் குட்டியாய் சுருண்டு எனக்கான
வெப்பத்தை நானே தேடுவேன்

போர்வை விலகிய வலது பாதத்தின்
சுண்டு விரல் வழி நுழைந்த குளிர்
எலும்புக்குள்ளும் நரம்புக்குள்ளும்
இன்னும் கூடுதல் இம்சையாய்

நீ கையோடு எடுத்துச் சென்று விட்ட
உன் சதைகளில் கசியும் வெப்பத்திற்கு
கைகளை நீட்டி நடுங்கும் உடலோடு,
உதறும் மனதோடு வாடுகிறேன்

மண்டிக்கிடக்கும் புதர்களைத் தாண்டி
உன் கைகள் நீளமுடியாத தொலைவில்
தன்னந்தனியாய் வாடுகிறேன் வாசமும்
வண்ணமும் உணரப்படாத மலராய்

துளியும் குறையாமல் காய்ந்து கனக்கிறது
அள்ளியெடுக்க நீ இல்லாமல்
பருவத்தில் எனக்குள் வெடித்துச்சிதறி
மனதில் மலையாய் குவிந்த காதல்

நீ தேட மறந்த நாளன்று எனக்குள்
நானே தொலைந்துபோனேன்
ஆனாலும் மௌனமாய்த் தேடுகிறேன்
அடையாளம் சிதைந்த என்னை....

கருத்துகள் இல்லை: